Thursday, June 30, 2011

நமது நாடு 26.இயற்றமிழ்

  உள்ளத்து எழும் உணர்ச்சிகளுக்கேற்ற ஓசைகளிற் பாடப்படும் இசைப்பாடல்களையன்றி, வரலாறு, கதை, இலக்கனம் முதலிய பிற பொருள்களை விளக்கும் நூல்களும் செய்யுள் நடையில் எழுதப்படலாயின. அவ்வகை நூல்கள் இயற்றமிழ் என்னும் தலைப்பில் அடங்கும். தமிழ் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே எழுத்து நிலை அடைந்திருந்தது. ஆகவே அதன்கண் பல இயற்றமிழ் நூல்கள் தோன்றியிருந்தன எனக் கொள்ளலாம். இன்று காணப்படும் இயற்றமிழ் நூல்களுள் மிகப் பழமையுடையது தொல்காப்பியம். இது இடைச்சங்க காலத்துச் செய்யப்பட்டதென நம்பப்பட்டு வருகிறது. தொல்காப்பிய காலத்துக்கு முன் பல இலக்கண நூல்கள் இருந்தனவென்பது தொல்காப்பியச் சூத்திரங்கள் பலவற்றால் அறியக்கிடக்கின்றது. முன் மிக விரிந்து கிடந்த இலக்கணநூற் கருத்துக்கள் தொல்காப்பியர்காலம் முதல் சுருக்கி எழுதப்படலாயின. இதனால் தமிழ் மிக உச்ச நிலை அடைந்திருந்த காலம் தொல்காப்பியத்துக்கு முன்னர் என்று நன்கு தெளிவுறுகின்றது. தொல்காப்பியத்தில் தமிழ் தொன்மொழி என வழங்கப்பட்டது.
   இன்று தமிழிற்கிடைக்கும் இயற்றமிழ் நூல்களிற் பழையன எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சிந்தாமனி, மணிமேகலை, நீலகேசி முதலியன. இராமாயணம் பாரதம், தலபுராணங்கள், நிகண்டு நூல்கள் முதலியன பிற்காலத்தெழுந்த இயற்றமிழ் நூல்களுட் சில.
   பழைய இயற்றமிழ் நூல்கள் வெண்பா, அகவல், கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாடல்களாற் பாடப்பட்டுள்ளன. அவைகளைப் பாடுவதற்கேற்ற ஓசைகள் செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் முதலியனவாகும். விருத்தப்பாக்கள் பிற்காலத்துத் தோன்றியன. இன்று உரை நடையிற் றேன்றி மிளிரும் நூல்களையும் இயற்றமிழ் நூல்களில் அடக்கலாம் உரை நடையில் இயன்ற நூல்கள், மேடையில் ஏறிச் சொற்பொழிவாற்றுவோன் தான் கூறும் கருத்துகளுக்கேற்ப ஓசையை எடுத்தும் படுத்தும் நலிந்தும் பேசுவதுபோலப் பொருளுக் கேற்பப் படிக்கப்பட வேண்டியன. இயற்றமிழ் நூல்களிலும் இசைத்தமிழுக்குரிய சிறு பகுதிகள் காணப்படுதல் இயல்பு.
   நாடகம், இசை, இயல் என்னும் இம் மூன்று வளர்ச்சிகளும் படி முறையே தமிழ் மக்களிடையே தோன்றி இயற்கையாக வளர்ச்சியுற்ற மையினாலேயே இயல் இசை நாடகம் என்னும் வழக்குத் தமிழ்மொழியில் மாத்திரம் காணப்படுகிறது. பிறமொழிகளிலும் இயல் இசை நாடகம் என்னும்  மூன்றும் காணப்படுகின்றன வாயினும் மொழியோடு தொடர்பு படுத்தி இயல் இசை நாடகச் சேர்மனியம் இயலிசை நாடக ஆங்கிலம் என வழங்கப்படாமை அறிக.

நமது நாடு தொடரும்...

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

No comments: