Wednesday, June 8, 2011

முள்ளங்கி


  சிவப்பு, வெள்ளைன்னு இரண்டு வகை முள்ளங்கி இருக்கிறது. இதில், வெள்ளை முள்ளங்கி தான் மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சிவப்பு முள்ளங்கி கொஞ்சம் சுவையாக இருக்கும்.
   மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும். எகிப்து, கிரீஸ், ரோம் இந்தியா போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் இயல்புடையவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். சுத்தமான இரத்தத்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் தொடர்ந்து உடல் நலப் பாதுகாப்புடன் வாழ முடிகிறது. சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில் இருந்து வெளியாகுற வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பிறகும் நாம விடுற மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதுல அதிகமாக இருக்குறது தான் அதுக்கு காரணம்.
  உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. பச்சிளங் குழந்தைகளைத் தாக்குற ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சோட சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேகவைத்து, அதுல இருந்து சாறு எடுத்து பாலாடையில வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் இருக்காது.
   சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, மஞ்சள் காமாலை, சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். முள்ளங்கிக்கீரையை எண்னை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவா சாப்பிடுவது நல்லது.
  பச்சையான முள்ளங்கிக்துண்டுகளுடன் காரட், பீட்ரூட் துண்டுகளையும் கலந்து, அவற்றில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, உப்பு சேர்த்து, சாலட் போல் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியம் கிடைக்கும். கீரையையும், கிழங்கையும் பச்சையாகவே பயன்படுத்துங்கள்.

மரம் வளர்த்து புவி காப்போம்....

No comments: