Saturday, April 30, 2011

நமது நாடு 18.முல்லை நில மக்கள்


   காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்பட்டன. முல்லை என்பது ஒரு வகைக் கொடி. காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் முல்லைக்கொடிகள் செழித்து வளர்ந்தன. அக்காரனத்தினால் அவைகளுக்கு முல்லை நிலம் எனப் பெயர் உண்டாயிற்று. அவ்விடங்ளில் ஆடு மாடுகள் புல் மேய்வதற்கேற்ற மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. முல்லை நில மக்கள் ஆடு, மாடு முதலியவைகளை வளர்த்து அவை தரும் பயன்களையே பெரிதும் தம் உணவாகக்கொண்டு வாழ்ந்தனர். காடு சார்ந்த நிலங்களில் வரகு, அவரை, துவரை முதலிய கூல வகைகளும் விளைவிக்கப்பட்டன.

    முல்லை நில மக்கள், ஆயர், இடையர், கோவலர், அண்டர் முதலிய பல பெயர்களாற் குறிப்பிடப்படுவர். அவர்கள் காட்டு ஒதுக்குகளில் சிறு இல்லங்கள் கோலி வாழ்ந்தனர். இல்லங்கள் வரகு வைக்கோலால் வேயப்பட்டன. முற்றத்தே இறுக்கப்பட்ட முளைகளில் இராக்காலங்களில் ஆடு மாடுகள் கட்டப்பட்டன. குடியிருப்பைச் சுற்றி விழங்குகள் நுழையாதபடி முள் வேலி யிடப்படடிருந்தது. விடியற்காலத்தே இடைப்பெண்கள் தாழிகளில் உறைந்திருக்கும் தயிரை மத்துப்பூட்டிக் கடைந்தார்கள். அவர்கள் மோரையும் வெண்ணெயையும் அயல் இடங்ளுக்குக் கொண்டுசென்று விற்றார்கள். ஆடவர் விடியற்காலத்தே மாடுகளையும் ஆடுகளையும் மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச் செந்றார்கள், அவைகளைப் புலி கோநாய் முதலிய விலங்குகள் கொல்லாதபடி காவல் காத்தார்கள். ஆடுகளும் மாடுகளும் மேயும் போது அவர்கள் மர நிழல்களில் இருந்து இனிய பண்களைப் புல்லாங்குழலில் வாசித்தனர். கொன்றைப் பழத்தைக் குடைந்து நெருப்புக் கொள்ளியால் துளையிட்டுச் செய்த குழல்களிலும் அவர்கள் இனிய இசைகளை அமைத்துப் பாடினார்கள்.

    தமிழர்களின் செல்வம் ஆடு மாடுகளே ஆகும். மாடு என்னுஞ் சொல் ஒருகாலத்தில் செல்வம் என்னும் பொருளில் வழங்கிற்று. அதனால், மக்கள் ஒருகாலத்தில் மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்தார்கள் என அறிகின்றோம். ஆடு மாடுகள் மேய்வதற்குப் பொது மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. அவை குடும்பங்களுக்குச் சொந்தமாயிருந்தன. குடும்பங்களுக்குரிய மேய்ச்சல் நிலங்கள் சிறிது சிறிதாகப் பிரிக்கப்படின் அவை ஆடு மாடுகள் மேய்வதற்கு ஏற்றனவாகா. அகவே இடையர் குடும்பங்களாக வாழ்ந்தனர். சொத்துக், குடும்பத்தவர்கள் எல்லாருக்கும் பொதுவாக விருந்தது. குடும்பத்தவருள் மூத்தவன் குடும்பத் தலைவனாயிருந்தான். மற்றவர்கள் அவனுக்கு அடங்கி நடந்தார்கள். பல குடும்பங்களுக்குப் பெரிய தலைவன் ஒருவன் இருந்தான். இவ்வாறு பண்டை மக்களிடையே ஆட்சி முறை உண்டாயிற்று. கோ என்னும் சொல் மாட்டைக் குறிக்குமாதலால் அதனையுடையவன் கோன் எனப்பட்டான். கோன் என்னுஞ் சொல் அரசனையும் குறிக்கும். அதனால் ஆட்சி முறை இடையருள்ளேயே தொடங்கிற்றெனக் கருதப்படுகின்றது. கோன் ஆட்டுமந்தைகளை மேய்க்கும் கோலைக் கையிடத்தே வைத்திருந்தான் அக்கோலே ஆட்சியை உணர்த்தும் செங்கோலாக மாறிற்று.

     இடையரின் குலதெய்வம் திருமால். ஆயர் பாற் பொங்கல் இட்டுத் திருமாலை வழிபட்டனர். மகளிர் கைகோத்துக் குரவை ஆடித் திருமாலின் புகழ் பாடினர். கண்ணபிரான் இடைக்குலத்தினன். பாரதப் போருக்குப்பின் முல்லை நிலத்தாரின் திருமால் வணக்கம் கண்ணன் வணக்கமாக மாறிற்று.

நம் நாடு தொடரும்...


இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது...

2 comments:

babu said...

all of the articles are very good.
really useful things...

thanks for sharing....
Babu
contactbabu@yahoo.com

If possible pls provide me more articles about tree cultivation.

S.Gnanasekar said...

இடுகைக்கு வந்தமைக்கு நன்றி நன்பர் பாபு அவர்களே. "நமது நாடு 18.முல்லை நில மக்கள்" தமிழர்கள் தான் உலகின் முன்னோடிகள் மக்கள் என்பதற்கான ஒரு சிறு புத்தகம் தான் "நமது நாடு". தமிழர்கள், நாம் தான் உலகத்தின் முன்னோடிகள் என்று பாலசான்றுகள் உள்ளன. அதில் நாம் சிறிதளவு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், 1945 ஆம் ஆண்டு திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி & சென்னை. யாழ்ப்பாணத்து நாவாலியூர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.www.thamizham.net இந்த இனையதளத்தையும் தொடரவும்.