Wednesday, June 27, 2012

பூமியின் தட்பவெப்ப நிலையின் பின்னணி!



  உலகின் இன்று வெப்ப பிரதேசங்ளாக உள்ள சில பகுதிகள் பழங்காலத்தில் குளிர் பிரதேசங்களாக இருந்து பின்னர் மாற்றம் அயைந்திருக்க வேண்டும் எனறு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
 ஆனால் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பகுதிகள் எப்போதும் ஒரே மாதிரியான வெப்பமான பிரதேசமாகவே இருந்து வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிக்கின்றனர். 
  பூமியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்பவெப்பநிலை குறித்து புவியியல் அறிஞர்களால் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.
  பூமியின் மீது படர்ந்து கிடக்கும் பனிப்போர்வையின் இடமாற்றமே அந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பநிலையைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு கருத்து.
 பூமியின் மீது படிந்துள்ள பனிக்கட்டியின் எடை மில்லியன் கன மைல்களாகும். இது பூமியின் மொத்தப் பரப்பில் 10 சதவீதம்.
 ஆல்ப்ஸ் மலை மீதுள்ள பனிக்கூரையை புவியியல் அறிஞர்கள் நெடுங்காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இம்மலை மீதுள்ள பன்க்கட்டியின் தன்மையை ஒத்த பனிக்கட்டிகள் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுவதை கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.
 ஒரிடத்தில் இருக்கும் பிரமாண்டமான பனிப் படிவங்கள் இடம் விட்டு இடம் நகரக்கூடும் என்றும், அவ்வாறு நகர்ந்து செல்லும்போது ஆங்காங்கே பிரம்மாண்ட பனிப் பாறைகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
 இவ்வாறு பனிப் படலம் இடம் விட்டு இடம் மாறும்போது பனிப் படலம் போய்ச் சேர்ந்த இடம் குளிர்ச்சித் தன்மையும், அது இடம் விட்டு நகர்ந்த பகுதி வெப்பத் தன்மையும் பெற்றிருக்கக் கூடும் என்றும் அறிஞர்கள் நினைக்கின்றனர்.
 பன்ப் படலங்கள் இடம்பெயரும்போது ஆங்காங்கே பெரிய ஏரிகள் தோன்றின. அம்மாதிரி ஏரிகள் கனடாவிலும், அமெரிக்காவிலும் உள்ளன.
 பல பெரிய ஏரிகள், பனிப்படலங்கள் விட்டுச் சென்ற சிந்னங்கள் என்றே கருதப்படுகின்றன.
 பனிப் போர்வையின் வருகையும், விலகலும் தட்ப வெப்பநிலையை மட்டுமல்லாமல் கண்டங்களின் உருவங்களையும் மாற்றி அமைகின்றன.
 உதாரனமாக, அண்டார்டிகாவிலும், கிரீன்லாந்திலும் உள்ள பன்ப் பாறைகள் அனைத்தும் உருகத் தொடங்கினால் கடல் மட்டமானது 200 அடிக்கு மேல் உடர்ந்துவிடும்.
 அப்படிபட்ட ஒரு நிலை ஏற்பட்டால் கடல் ஓரத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் மூழ்கடித்துவிடும். அதே சமயத்தில் கிரீன்லாந்து, சைபீரியா, அலாஸ்கா, கனடா போன்ற பகுதிகளில் கடலை ஒட்டிய புதிய நிலப்பரப்புகள் தோன்றத் தொடங்கும். 
 பூமியில் சிலசமயம் வெப்பம் கூடுதலாகவும், சில சமயம் குறைவாகவும் இருப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் சிலவற்றை அண்மைகாலத்தில் கண்டிருக்கின்றார்கள்.
 இந்தக் காரணத்தை கரியமில வாயுவின் பசுமைக் கூட விளைவு என்கிறார்கள்.
 கரியமில வாயுவானது அகச்சிவப்பு கதிரியக்கத்தை அதிக அளவில் உட்கொள்கிறது. வானக் காற்றில் இந்த அகச்சிவப்பு கதிரியக்கம் அதிக அளவில் இருந்தால் அது இரவில் சூரிய உஷ்ணத்தில் வெப்பமடைந்து பூமியில் இருந்து வெப்பம் வெளியேறி ஓடுவதை தடுக்கிறது. அதன் காரனமாக வெப்பம் சேமித்து வைக்கப்படுகிறது. இதன் காரனமாக பூமியில் வெப்பச் சூழல் நிலவும். இதற்கு மாறக வானக் காற்றில் கரியமில வாயு குறைந்தால் பூமி சிறுகச் சிறுகக் குளிர்ச்சியடையும்.
  பசுமைக் கூட விளைவை தடுக்கும் விதம்தான் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுசிசூழல் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

காடுகள் வளர்த்து இயற்கையை மாசு இல்லாமல் செய்து பின் வரும் தலைமுறை காப்போம்... 

"கடற்புற்களைக் கொண்டு பவழப்பாறைகளை காக்கலாம்"


 சிலவகை கடற்புற்களை வளர்ப்பதன் மூலம் வேகமாக அழிந்துவரும் பவழப்பாறைகளை காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
 கடலில் இருக்கும் பவழப்பாறைகள், கடந்த 40 ஆண்டுகளாக வேகமாக அழிந்துவருகின்றன. பூமியானது வேகமாக வெப்பமடைவது தான் இதற்கான பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.
 அதாவது மனிதனும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கரியமிலவாயுவின் அளவு வேகமாக அதிகரித்து சுற்றுசூழலில் கார்பனின் அளவை அதிகப்படுத்துகிறது. இப்படி சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் கார்பன், கடல்நீரிலும் அதிகரிக்கும் போது கடல்நீரின் அமிலத்தன்மையும் கூடுகிறது.
 இப்படி கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது, அது பவழப் பாறைகளை அழிக்கிறது. காரணம் பவழப்பாறைகளை உருவாக்கும் சுமார் ஒரு செண்டிமீட்டர் நீளமுள்ள புழுவைப்போன்ற தோற்றமுடைய கடல்வாழ் உயிரினம், ஆரோக்கியமாக வாழ்ந்தால் தான் அவை சுரக்கும் வேதிப்பொருள் பவழப்பாறையாக வளரும். கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரித்தால் இந்த புழுக்கள் அதில் வாழமுடியாது என்பது ஒருபக்கம் இருக்க, அவை உருவாக்கும் பவழப்பாறைகளும் இந்த அமிலத்தன்மை மிகுந்த தண்ணீரில் கரைந்து காணாமல் போய்விடும்.
 இது தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பவழப்பாறைகள் குறித்து பெரும் கவலையை தோற்றுவித்து வந்திருக்கிறது. பலவகையான கடல்வாழ் உயிரினங்களும் குஞ்சு பொறிக்கவும், குட்டிபோடவும் தேவையான பாதுகாப்பான சூழலை பவழப்பாறைகள் அளித்து வருவதுடன், தென் பசிபிக் கடற்பகுதியில் இருக்கும் பல்வேறு குட்டித்தீவுகளின் இயற்கை பாதுகாவலனாகவும் இவை செயற்படுகின்றன.
  இந்த பின்னணியில் பவழப்பாறைகளின் அழிவு என்பது அவற்றின் அழிவாக மட்டுமில்லாமல், கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பாக பலவகையான மீனினங்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகும் என்பதால் பவழப்பாறைகளை பாதுகாப்பதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் ஆக்ஸ்போர்ட், ஸ்வான்ஸி மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் குக் பல்கலைக்கழகங்கள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் முடிவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை கண்டறிந்திருப்பதாக ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் தலைவர் முனைவர் ரிச்சர்ட் அன்ஸ்வொர்த் அறிவித்திருக்கிறார்.
 அதாவது குறிப்பிட்ட சிலவகை கடற்புற்கள், கடல் நீரில் இருக்கும் கார்பனை மிகவேகமாக உள்வாங்கிக்கொள்வதன் மூலம் கடல்நீரின் அமிலத்தன்மையை குறைக்கின்றன. இது பவழப்பாறைகளின் அழிவை தடுப்பதுடன், அவை ஆரோக்கியமாக வளரவும் வழி செய்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதாவது குறிப்பிட்ட இந்தவகை கடற்புற்கள், கடல்நீரில் இருக்கும் கரியமிலவாயுவை பயன்படுத்தி போடோசிந்தஸிஸ் என்கிற ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுவதாகவும், இதன் மூலம் இந்த புற்கள் இருக்கும் இடத்தில் கடல்நீரின் அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிப்பதாகவும் இது பவழப்பாறைகள் ஆரோக்கியமாக வளர உதவுவதாகவும் ரிச்சர்ட் கண்டறிந்திருக்கிறார்.
 இதைத்தொடந்து எங்கெல்லாம் பவழப்பாறைகள் வேகமாக அழிந்து வருகிறதோ அந்த பகுதியில் இந்த குறிப்பிட்ட கடற்புற்களை வளர்க்கலாம் என்கிறார் அவர்.
 அதேசமயம், இந்த கடற்புற்களும் கூட எல்லா இடங்களிலும் தாக்குப்பிடித்து வளர முடியாது என்கிறார் அவர். மீனவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட வலைகள், மனிதர்களின் வேதிக்கழிவுகள் அதிக அளவில் கடலில் கலப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த கடற்புற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ் உயிரினம் இவற்றை அழிவில் இருந்து காப்போம்...

இறுகிவரும் காரகோரம் பனி மலை


 புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகும் போக்குக்கு மாறாக ஆசியாவின் காரகோரம் மலையில் பனி இறுகி, திண்மமாகிவருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
 இமாலய பிராந்தியத்தின் மேற்காக உள்ள காரகோரம் மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை செய்மதி தகவல்கள் மூலமாக ஒரு பிரஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
 புவி வெப்பமடையும் போக்குக்கு ஏற்ப, இமாலயத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகிவரும் நிலையில், இந்த மலை மாத்திரம் திண்மமாகி வருவதன் காரணம் இன்னமும் அறியப்படவில்லை.
இந்த பிராந்தியத்தில் உள்ள பனிமலைகள் 100 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் மூலமாக இருக்கின்ற போதிலும், அவை குறித்த ஆய்வுகள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.
 இமாலய பிராந்தியத்தில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டளவில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான ''காலநிலை மாற்றத்துக்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கை'' கூறியதை அடுத்து, இமாலய பனி மலைகளின் விவகாரம் ஒரு முக்கிய அம்சமாக பலராலும் பேசப்படுகிறது.
 இமாலயத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற போதிலும், காரகோரம் மலை ஒரு வேறுபட்ட தொடராகவே காணப்படுகிறது.
 இந்த மலைச்சிகரங்கள் பொதுவில் சென்றுவருவதற்கு மிகவும் கடினமான பகுதியாகவே இருக்கிறது. இருந்த போதிலும் அங்கு ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...


Monday, June 25, 2012

கடைசியாக தெரிந்த பயணிகள் புறா - The Last Known Passenger Pigeon


 வடஅமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவைதான் பயணிப்புறாக்கள் எனப்படும் காட்டுப்புறாக்கள். இந்தப் புறாக்கள் கூட்டமாக வானில் பற்ககத் தொடங்கினால் அந்தக் கண்கவர் ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகும்.
  1873 - ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி  மிக்சிகன் நகரில் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய புறா ஊர்வலம், முடிவதற்கு மாலை 4.30 மணி ஆனது. அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயணிப் புறாக்கள் சாரைசாரையாக பறந்து கொம்டே இருக்கும் காட்சிகள் அந்நாட்களில் மிக சாதாரணமானவை. அந்தபகுதியே கடும் மேக மூட்டத்திற்கு உள்ளானது போல மாறிவிடும்.
  இப்படி பார்ப்பவர்கள் கண்ணை உறுத்தும் அளவுக்கு பறந்து பறந்து பரவசப்படுத்தியதுதான் அதற்கு எமனாக அமைந்தது. வடஅமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேரியபோது அவர்கள் இந்த புறாக்களை வேட்டையாடத் தொடங்கினார்கள்.
  இவற்றை வேட்டையாடுவது எளிதான ஒன்றைக இருந்தது. வெறுமனே வலை விரித்தால் போதும் கொத்துக் கொத்தாக புறாக்கள் சிக்கும். துப்பாக்கியால் துட்டால் சத்தம் கேட்டே பல புறாக்கள் இறந்து விழுந்தன. கூட்டமாக பறக்கும் போது ஒரு கட்டையை வீசி எறிந்தே பல புறக்களை கொன்றுள்ளனர் மனிதர்கள். இந்த பறவைகளை அதிகமாக கொன்று குவித்து ரெயில் மூலம் நியூயார்க் போன்ற இடங்களுக்கு அனுப்பத்  தொடங்கினார்கள். கப்பல் மூலமும் புறா வர்த்தகம் லாபகரமாக நடைபெற்றது. புறாக்கறி விலை மலிவாக கிடைத்ததால் இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. இதனை பயன்படுத்தி முழுநேர வேலையாகவே செய்து புறாக்களை வேகவேகமாக பரலோகம் அனுப்ப ஆரம்பித்தார்கள்.
  1855-ல் நியூயார்க் நகருக்கு மட்டும் 3 லட்சம் புறாக்கள் பார்சலாக அனுப்பப்பட்டன. 1869-ல் மிக்சிகன் நகரில் இருந்து வட அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளுக்கு 75 லட்சம் புறாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
  பொதுவாக இந்த வகை பெண்புறா ஆண்டுக்கு ஒரு முட்டைதான் இடும். எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. இதனால் 2-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு பயணிப்புறா தள்ளப்பட்டது.
  உலகின் கடைசி பயணிப்புறாவான மார்த்தா, சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 1914 செப்டம்பர் 1-ந்தேதி மதியம் ஒரு மணிக்கு தனது மூச்சை நிறுத்தியது.
  தான் மட்டுமே மேலான உயினம் என்ற மனிதனின் எண்ணத்தால் ஏகப்பட்ட உயிர்னங்கள் இன்று உலகில் இல்லை. என்னதான் விஞ்னாம் வளர்ச்சி அடைந்தாலும் மனிதனால் புதிய உயிரினத்தை உறுவாக்க முடியாது எம்பதுதான உண்னை.

கடைசியாக தெரிந்த பயணிகள் புறா
The Last Known Passenger Pigeon

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய தவளை இனங்கள்


  இந்தியாவில் இதுவரை கண்டறியப்படாத 12 புதிய வகை தவளையினங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 தவிர அழிந்துவிட்டதாக கருதப்பட்டு வந்த வேறு 3 தவளையினங்களையும் இவர்கள் மறுபடியும் கண்டுபிடித்துள்ளனர்.
 தென்னிந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தவளையினங்கள் மிகவும் அரிதானவை என தவளை ஆராய்ச்சிக்கு தலைமையேற்றிருந்த விஞ்ஞானி சத்யபாமா பிஜு கூறினார்.
  பூனை போல 'மியோவ்' என்று ஒலியெழுப்பக்கூடிய இரவில் வேட்டையாடும் தவளையினம், ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு வளரக்கூடிய கேரளத்தின் வயநாடு பகுதியில் காணப்படும் இரவில் வேட்டையாடும் தவளையினம் உள்ளிட்டவை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தவளையினங்களில் அடங்கும்.
 ஸுடாக்ஸா (Zootaxa) என்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...

Saturday, June 23, 2012

புவி வெப்பமடைவதைப் பயன்படுத்தி மீன்வளத்தைப் பெருக்க முயற்சி

  மாறிவரும் புவியின் பருவ நிலை மாற்றத்தை சாதமாகப் பயன்படுத்தி கூடுதல் மீன்வளத்தை எவ்வாறு பெறலாம் என்பது பற்றி ஆராய்வதற்காக ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியப் பிராந்தியமான டாஸ்மேனியாவில் கூடியுள்ளனர்.
   கடல் வெப்பமடைவதன் காரணமாக சில மீன் இனங்கள் தாம் வாழ்ந்துவந்த பகுதிகளை விட்டு இடம்பெயருவது என்பது ஏற்கனவே நடந்துவருகின்ற ஒரு சூழ்நிலையில், அவ்வகையான இடங்களில் மீன்வளத்தை வளர்த்து அறுவடை செய்வதற்குரிய புதிய வாய்ப்பு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
  இந்தியாவை அண்டிய கடற்பகுதிகள் மற்றும் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவை அண்டிய கடற்பகுதிகளை புவிவெப்பமடைந்துவரும் பருவ நிலை மாற்றம் வேகமாக நடந்துவருகின்ற இடங்களாக விஞ்ஞானிகள் காண்கின்றனர்.
  குளிர்ந்த நீருடைய இடமாக இருந்துவந்த டாஸ்மேனியக் கடல் பகுதியில் கடல் நீர் வெப்பமடைந்து வருவதன் காரணமாக, அந்தக் கடல் பகுதியில் ஏராளமான மீன் இனங்கள் செழிப்பாக பல்கிப் பெருகும் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த மீன்வளத்தை வர்த்தக ரீதியில் அறுவடைசெய்ய முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
  ஹோபர்ட் நகரில் இருநாட்டு விஞ்ஞானிகளும் கூடிய ஒரு சந்திப்பில், வெப்பமண்டலம் மற்றும் வெப்பமண்டலத்தை ஒட்டிய கடல் பிரதேசத்தில் வாழும் மீன் இனத்தின் முட்டைகளை புதிதாக வெப்பமடைந்துவரக்கூடிய கடல் பகுதிகளில் தூவி, அந்த இடங்களில் மீன்வளத்தைப் பெருக்குகின்ற ஒரு திட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.
  ஒரு பிரதேசத்தில் அறவே இல்லாத மீன் இனங்களை அப்பிரதேசத்தில் புதிதாக அறிமுகப்படுத்தும் வகையிலானது அல்ல தமது திட்டம் என்பதை ஹோபர்ட்டில் கூடியுள்ள விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
   மாறாக வெப்பமாக கடல்பகுதிகளை நோக்கி ஏற்கனவே இடம்பெயர்ந்துவரும் மீன் இனங்களை அவ்விடங்களில் செயற்கையாக வளரவிட்டு, இயற்கையில் நடந்துவரும் ஒரு மாற்றத்தை சற்றே வேகப்படுத்த தாங்கள் திட்டமிடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...

Friday, June 22, 2012

தங்கம் உருவான கதை

   தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
   அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.
   இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
   அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மண்ணுடன் கலந்துள்ள தங்கத் துகள்கள் பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
   ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.
   இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள்

அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...

Thursday, June 21, 2012

கடல்சார் பறவையினங்கள் அழிந்துவருகின்றன



   கடற்கரையை அண்டி வாழும் பறவையினங்கள் அவற்றின் எண்ணிக்கையில் அரைவாசியளவாக குறைந்துவருவதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
   மோசமாக அழிவடைந்துவரும் விலங்கினங்களின் பட்டியலின் உச்சத்தில் இந்தப் பறவையினங்களில் 28 வீதமானவை இருப்பதாக பறவைகள் பற்றிய சஞ்சிகையொன்றில் (Bird Conservation International) வெளியான ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
   ஆல்பட்ரோஸ் குடும்பத்தைச் சேர்நத பறவையினங்களே வேகமாக அழிந்துவருவதாக பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெரும் வர்த்தக ரீதியான நவீன மீன்பிடி முறைகளாலும், பெருச்சாளிகள், காட்டுப் பூனைகள் போன்ற உயிரினங்களால் இப்பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுமே இந்த அழிவுக்கு காரணம் என்று கருதப்படுகின்றது.
   கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எச்சரிப்பதற்கும் இந்த கடல்சார் பறவைகள் மிகவும் அவசியமானவை. ஆனால் உலகின் மொத்தப் பறவையினங்களில் இவை வெறும் 3.5 வீதமானவைதான்.
அடையாளம் காணப்பட்டுள்ள 346 வகையான கடல்சார் பறவையினங்களில் 47 வீதமானவற்றில் இந்த அழிவைக் காணமுடிவதாக கூறப்படுகிறது.
தரையில் இனப்பெருக்கம் செய்து, கடலுக்குச் சென்று உணவுதேடும் இந்தப் பறவையினங்களிடம் கவனிக்கப்பட வேண்டிய பல முக்கிய அம்சங்கள் இருப்பதாக கடற்சார் பறவைகள் பற்றி ஆய்வு நடத்தும் பேராசிரியர் ஜோன் க்ரொக்ஷால் கூறுகிறார்.
   அல்பாட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த 22 பறவையினங்களில் 17 இனங்கள் அருகிவிடும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும் வர்த்தக ரீதியான மீன்பிடி நடவடிக்கைகளின்போது பெருமளவிலான பறவைகள் வலைகளிலும் கண்ணிகளிலும் சிக்கி உயிரிழந்துவிடுவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
   அதேபோல இந்தப் பறவையினங்களின் கூடுகளையும் அழித்து. அவற்றின் முட்டைகளையும் குஞ்சுகளையும் உண்ணக்கூடிய பெருச்சாளிகளும் பெருகிவருவதால் கடல்சார் பறவையினங்களின் இனப்பெருக்கம் வேகமாக தடுக்கப்படுகிறது.
   கடல் பரப்பில், இந்தவகை எலிகள் பெருகிவரும் சில தீவுகளை எலிகளைக் கொல்ல நச்சுப் பொருட்களைத் தூவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

Tuesday, June 5, 2012

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று.


  2012-ம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தை பசுமை பொருளாதாரம் என்ற கருப்பொளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 40-வது உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

  இந்த நாளை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்தி வருகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் சுற்றுச்சூழல்களை பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

 இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பல வகைகளில் மாசுபட்டு கிடக்கிறது. இந்த மாசடைதலை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவது நிலம் மாசடைதல், 3-வது நீர் மாசுபடுதல். இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், சோலைகள், கடற்கரைகளில் ஏற்படும் மாசுபாடுகள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி மனித, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச் சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.

 நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப, கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக்கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.

 மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலேயான உறவு மிகவும் முக்கியமானதாகும். ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.

  மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மரங்களை அழித்து உலகை பாலைவனமாக்கி வருகிறோம். உலகில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

  வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன்- மோனாக்சைடும், காரீயமும் தீங்கு விளைவிக்க கூடியவை. இவை நச்சுதன்மை வாய்ந்தவை.

 வாகனங்கள் வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடின் அளவை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்படுகின்றன. இது 4.5 பிபிஎம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும். கார்பன் அளவு அதிகமானால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும்.

 இதேபோல சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.
 இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்பது நியாயமான கேள்வி. அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத் தக்கூடாது என்பது நடை முறைக்கு உகந்தது அல்ல.

  ஆனால் நாம் வைராக்கியம் கொண்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியும். பூமி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பாகும்.

 பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். மனிதர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகிறது. இத்தகையை சிறப்பு வாய்ந்த பூமி சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது.

  எனவே உஷ்ணமடைதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலாம் பாதிப்பு, கடல், கடற்கரை பிரதேசங்கள், காடு ஆகியவை அழிப்பு, உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நன்றி:  மாலை  மலர்  நாளிதழ்.