Friday, September 19, 2014

அருகிவரும் காட்டு உணவுத் தாவரங்கள்

 
உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்த தரவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் காட்டுத்தாவரங்கள் உணவுத் தாவரங்களுக்கு மிகவும் நெருக்கமானவைதான், அவற்றை உணவாக உண்ணவும் முடியும். ஆனால், இவை பல்வேறு வகையான சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடித்து வாழக்கூடியவையாகும்.
இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி, அவற்றுக்கு அமைவாய் இவை வாழக்கூடியவை.
  இருந்தபோதிலும், இவற்றில் பெரும்பாலானவை அவற்றை பராமரிக்கும் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள, மத்திய கிழக்கின் மோதல் வலயத்தில் வளர்கின்றன.
  உலகில் இப்படியான காட்டுத் தானிய வகைகள் சிறப்பாக வளரக் கூடிய பல இடங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அந்த இடங்களில் இவற்றை பராமரித்து வளர்த்தால், எதிர்கால உணவுத் தேவைக்கான மூலமாக இவை பயன்படுத்தப்படலாம்.
  பலதரப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக இந்த காட்டுத் தாவரங்களையும், வழமையான உணவுத் தாவரங்களுடன் சேர்த்து விவசாயிகள் வளர்க்கிறார்கள். உள்ளூர் காலநிலைக்கு தாக்குப் பிடித்து வாழக்கூடிய தாவரங்களை வளர்ப்பது இவர்கள் நோக்கமாகும்.
  வெறுமனே காட்டு உணவுத்தாவரங்களை வளர்ப்பது என்பது அல்லாமல், விவசாயிகளும், தாவரங்களை வளர்ப்போரும், காலநிலை மாற்றத்துக்கு தக்கதான தாவரங்களை உருவாக்க உதவுவதே தமது நோக்கம் என்று கூறுகிறார் ப்ர்ர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நைஜல் மாக்ஸ்ட்டெட்.
  காட்டுத் தாவரங்களில் பயனுள்ள உணவு வகைகளும், வரட்சியை தாக்குப் பிடிக்கும் வகைகளும் அடங்கும்.
  2050 அளவில் 9.6 பில்லியனாக அதிகரிக்கவுள்ள உலக மக்கள் சனத்தொகையின் உணவுத்தேவைக்கு இந்தக் காட்டு உணவுத் தாவரங்கள் மிகவும் அவசியம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Saturday, September 6, 2014

மரம் வளர்க்க ஒரு சட்டம்

   
   மரங்கள் இயற்கையின் கொடை நாம் இந்த பூமியில் வாழ வழி செய்பவை. ஆனால் மனிதர்கள் மரங்களை போற்றுவதில்லை. தனது சுய நலத்துக்காக மனிதன் தொடர்ந்து மரங்களை அழித்துக் கொண்டே இருக்கிறான். இந்த கேடு கெட்ட பழக்கத்துக்கு எந்த நாடும் விதி விலக்கு அல்ல. எல்லா நாட்டிலும் மனிதர்கள் தம் பங்குக்கு மரங்களை அழித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
பில்ப்பைன்ஸ் நாட்டில் 50 வருடங்களுக்கு முன்பு மரம் வெட்டுதல் மிகப்பெரிய தொழிலாக விஸ்வரூபம் எடுத்திருந்தது. காடுகள் கண் மண் தெரியாமல் அழிக்கப்பட்டன, பெரும்பாலன காடுகள் இருந்த சுவடே தெரியாமல் தரைமட்டமாயின. மரங்கள் இல்லாததால் சுற்றுச் சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாட்டில் மழை பெய்வது வெகுவாக குறைந்து போனது. வெயில் கொளுத்தியதது, வறட்சி ஏற்பட்டது.
   பில்ப்பைன்ஸ் அரசு தாமதமாக கண் விழித்துக்கொண்டது. பெரிய அளவில் மரங்கள் வளர்த்து நாட்டின் சுற்றுச் சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வரவில்லை என்றால் பெரும் பஞ்சம் ஏற்படும் என்று நினைத்தது. சூழலை கட்டுப்படுத்தவும், நாட்டின் அழகை மேலும் மேம்படுத்தவும் 1977-ம் ஆண்டில் ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்தது. அதன்படி 10 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஒவ்வொரு மாதமும் ஒரு மரம் நட்டு அது அழிந்து விடாமல் பாதுகத்து வளர்க்க வேண்டும் என்று கூறியது.
  இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அரசால் வழங்கப்படும் எல்லா சலுகைகளும், உரிமைகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது போக 175 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் மரங்கள் வளர்ப்பை ஊக்குவிப்பதர்காக மக்கள் விரும்பும் மரங்ளின் நாற்றுகள் அரசு இலவசமாக வழங்கியது.
 இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அரசின் குறியீட்டை விட அதிகமாக மரம் வளர்த்தவர்களுக்கு அரசாங்கம் ஒரு சான்றிதழும், அரசு வேலைகளில் முன்னுரிமையும் கொடுத்தது. இந்த திட்டத்தின்படி 5 ஆண்டுகள் முடிவதற்குள் 36 கோடி புதிய மரங்கள் நாட்டில் முளைத்தன. இன்றைக்கு இயற்கை வளம் நிறம்பிய ஒரு தேசமாக பில்ப்பைன்ஸ் பசுமையோடு திகழ்கிறது.
  மக்கள் துணையிருந்தால் எதுவும் சாத்தியமே. நாமும் எத்தனை நாளைக்குத்தான் வெறும் விழிப்புணர்வை மட்டும் கொடுத்துக் கொண்டே இருப்பது. அரசு சட்டமாக கொண்டு வந்து கடுமையாக அதை அமல்படுத்தினால் இந்தியாவும் ஒரு பசுமை பூமிதான் என்பதில் சந்தேகம் இல்லை.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Thursday, August 28, 2014

தேன் அத்தி

 

தேன் அத்திப் பழமானது ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் பார்க்காமல் உண்ணக்கூடிய பழமாக உள்ளது. சீன மொழியில் பிக் என்று அழைக்கப்படுகிறது. பிக் என்பது சின மொழியில் பூவில்லாமல் காய்ப்பது என்பது பொருள் ஆகும். ஆனால் அத்திப்பூவில் பூ உள்ளது. கனியான பிறகு பூவானது விதையாக மாறுகிறது. அத்திப்பழம் பல நிறங்களில் கிடைக்கிறது. இது வகைக்கு ஏற்ப இளம் சிவப்பு, பச்சை, மஞ்சல், பழுப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. அத்திப்பழம் பழங்கால மனிதனின் மிக முக்கிய உணவாகும். எகிப்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிக முக்கிய உணவாக இது உள்ளது.
  தேன் அத்தியானது மிகவும் பழங்காலத்திலேயே பயிரிட்டு வளர்த்து வந்துள்ளனர். தற்போது நாம் பார்க்கும் அத்தி மரங்கள் காட்டு மரங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும். அத்திமரமாணது ஆசிய மைய பகுதியில் முதன் முதலில் தோன்றி உள்ளது. புதிய கற்கால ஆய்வுகள் முலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இது ஆசியவை ஒட்டிய அனைத்து பகுதியிலும் பின்னர் பரவியிருக்கிறது. இது மருத்துவ பயன் உடையது.

இயற்கை நமக்கு கொடுத்த கொடை மழை.  மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

Saturday, August 23, 2014

வெளவால்களை காக்கும் கிராமம்!

காஞ்சிபுரத்தை அடுத்த விஷார் தாமரைக்குளம் அருகே உள்ள ஆலமரத்தில் வசிக்கும் வெளவ்வால் கூட்டம்.

வெளவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் அருகே விஷார் கிராம மக்கள் வெடிகளைத் தவிர்த்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ளது விஷார் கிராமம். இக்கிராமத்தில் பீமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே தாமரைகுளம் உள்ளது.

இக்குளத்தின் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன.

இரவில் உலாவி விட்டு, பகலில் இம்மரத்தில் ஓய்வெடுக்கும் வெளவால் கூட்டங்களுடன் இம்மரத்தைப் பார்க்கும்போது, சடைமுடி சாமியார் எழுந்து நிற்பது போன்று காட்சி தருகிறது. இதே போன்று மேலும் 2 மரங்கள் முன்பு இருந்துள்ளன. கடந்த பல நூறு ஆண்டுகளாகவே இங்கு வெளவால்கள் குடியிருந்து வருவதாக இக்கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பகலில் ஓய்வெடுக்கும் வெளவால்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் இருந்து வருகின்றனர். மேலும் இந்த வெளவால்கள் தங்களது கிராமத்தின் அடையாளம் என்றும் போற்றி வருகின்றனர். இதனால் தீபாவளி மற்றும் கோயில் திருவிழா காலங்களில் இக்கிராம மக்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்துவதை தலைமுறை, தலைமுறையாக தவிர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கச் செய்வதன் மூலம், வெளவால்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடலாம் என்றும், கிராமத்தைவிட்டு அவை கூட்டமாக சென்று விடக்கூடாது என்பதற்காகவும் இக்கிராமத்தில் பட்டாசுகளை வெடிப்பதில்லை. ÷அதே நேரம், பூச்சட்டி, சங்குசக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட ஒளிரும் பட்டாசுகளை பயன்டுத்துகின்றனர்.

இதுபோல் ஒவ்வெறு கிராம மக்களும் தங்களது கிரமத்தில் உள்ள பறவைகள், விலங்குகள், மரங்களை பாது காத்தால் இயற்கை இயற்கையாக இருக்கும் நாடு செழிப்பாக இருக்கும்.

Tuesday, August 19, 2014

பிரேசில் திராட்சை மரம் (Aboticaba Tree)


 பிரேசில் திராட்சை மரம் (Aboticaba Tree) தெற்கு பிரேசில் பசுமையாகவும் மிகவும் அடர்த்தியாகவும் வளரும் மரம் இது. இந்தமரம் உலகின் பல வெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக உள்ளது. இதன் இலைகள் சிறு ஈட்டி போல் உள்ளது. இது அதன் சொந்த நாட்டில் சுமார் 12 மீட்டர் உயரத்திற்கு வளர்கிறது. உலகின் பல பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் போது 3-5 மீட்டர் வரை வளர்கிறது.

 இலைகள் ஒரு இனிமையான வாசனை மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. தண்டு மற்றும் மரத்தின் கிளைகள் ஒரு பிங்க் நிறம் மற்றும் சாம்பல் புள்ளிகளால் ஆன வெளிறிய தோலால் மூடப்பட்டிருக்கும். வசந்த மற்றும் கோடை காலத்தில்,  மரத்தின் அடிமரம், தண்டு மற்றும் முக்கிய கிளைகளில் நேரடியாக பல சிறிய வெள்ளை மலர்களால் மூடப்பட்டிருக்கும்.

 தண்டு மற்றும் முக்கிய கிளைகளில் பூ மொட்டுக்கள் உருவாகும் இந்த செயல்முறை கொக்கோ மற்றும் ஏனைய வெப்பமண்டல பழ மரங்கள் சில வற்றில் காணலாம்.

 இது வசந்த காலம் முடிந்தவுடன் இலையுதிர் காலத்தில் பழங்கள் 3-4 வாரங்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஆரம்ப காலத்தில் பழங்கள் கருப்பு, சிவப்பு, மற்றும் பச்சையாக இருக்கும். பழுத்த பழங்கள் திராட்சை பழங்களை ஒத்திருக்கின்றன. அவை மிகவும் இனிப்பாக இருக்கும். பழுத்த பழம் 4 அல்லது 5 நாள் வரைதான் கெடாமல் இருக்கும்.  

 குளிர்காலத்தில் இந்த மரத்தின் இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும், பின்னர் இளஞ்சிவப்பு இதழ்கள் துளிர் விட்டு வழக்கமான கரும் பச்சை நிறமாக வசந்த காலத்தில் தோன்றும். 

 100 கிராம் பழத்தில்  22 மி.கி. வைட்டமின் சி, 0 கிராம் கொழுப்பு, 1 கிராம் புரதம், 13 கிராம் கார்போஹைட்ரேட், 6 மிகி கால்சியம், 0.01 மிகி thiamin, 9 மிகி பாஸ்பரஸ், 0.6 கிராம் நார்ச்சத்து, கொண்டிருக்கிறது.
   
  இதன் பழத்தில் ஜெலி மற்றும் ஐஸ்கிரீம் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். பிரேசிலில் மிகவும் ருசியானது மது பாணம் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். 

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்... 
           

Monday, August 18, 2014

புங்கமரம்


இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள்.  இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.  மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள்.   மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடிகளும் உள்ளன.

 இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் பல வகைகள் உள்ளன.  இந்த மரங்களில் புங்க மரத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம்.

 ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான்.  எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை.  அதிக நிழலை தரக்கூடியது.  பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும்.  இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும்.  சாலை ஓரங்களில் நிழல்  தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

 புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று.  வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி  சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.

 புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கலாம்  இந்த விதைகளிலிருந்து 30 - 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளது.

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

Saturday, August 16, 2014

கோலா கரடி


 
தப்பவெப்ப நிலைக்கு ஏற்ப இடம் பெயரும் கோலா கரடிகள் கோலா கரடிகள், மரங்களை கட்டிப் பிடித்தாற்போன்று தூங்கும் இயல்பு கொண்டவை. இளம் சாம்பல் நிறத்திலும், அடர்ந்த உரோமங்களுடனும் காட்சியளிப்பவை. இவை காட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற் போன்று இடம் பெயர்ந்து தூங்கும் மரங்களையும், உண்ணும் இலைகளையும் மாற்றிக் கொள்வதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுளளன. இதனை மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கல் கீர்னி மற்றும் நாட்டலி பிரிஸ்சியோ ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிரெஞ் தீவில் இருக்கும் 37 கோலா கரடிகளை தேர்வு செய்து அவைகளின் நடவடிக்கைகளை ரகசிய கேமரா மற்றும் ஒளி சேகரிப்பு கருவிகல் மூலம் கண்காணித்தனர். 6 வருடங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாக கோலா கரடிகள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற் போன்று அடன் உடலில் நிலவும் வெப்ப நிலையை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான செயல் பாடுகளில் ஈடுபடுகின்றன எண்பதை கண்டறிந்துள்ளனர். கோலா கரடிகள் பொதுவாக ஒரு நாளில் 20 மணி நேரம் வரை தூங்கக்கூடியவை. இதனால் வெப்ப காலங்களில் உடலில் இருக்கும் குளிர் தன்மையை தக்கவைத்துக்கொள்ள காட்டில் இருக்கும் அசாசியா என்ற மரத்திற்கு இடம் பெயருகின்றன. அசாசியா மரங்கள் பொதுவாக குளிர் தன்மை கொண்டவை. இதனால் கோடைகாலங்களில் நிலவும் வெப்ப சூழலை இந்த மரத்தின் மூலமாக சமாளிக்கின்றன. மேலும் குளிர்காலங்களில் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள யூக்கலிப்டஸ் மரங்களில் தூங்கி அதன் இலைகளை உட்கொள்கின்றன. வெப்ப காலங்களில் மரத்தின் உச்சியில் தூங்கும் கோலா கரடிகள் உணவாக எதையும் எடுத்துக் கொள்வதில்லை. 
 இது குறித்து ஆய்வாளர் ஆண்ட்ரூ கிராக்கன்பெர்ஜர் கூறும்போது, கடந்த 2009ம் ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலையால் கோலா கரடிகளில் 4ல் ஒரு பங்கு இறந்து விட்டது.  எனவே, கடினமான சூழலில் சில உயிர்வாழ் இனங்களை வாழ வைக்கும் காரணிகளை குறித்து புரிந்து வைத்து கொள்வது மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.  மரங்களில் வசிப்பதை விரும்பும் குரங்குகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற மிருகங்களும் இந்த விசயங்களையே கடைப்பிடிக்கின்றன என ஆய்வு குழு மேலும் தெரிவித்துள்ளது.

 கடந்த வருடம் ஆஸ்திரேலிய அரசாங்கம் கோலா கரடிகளை அழிந்து வரும் உயிரினங்கள் வரிசையில் இருப்பதாக பட்டியலிட்டு உள்ளது. அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் அவை காணாமல் போய் விடும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.  ஆரோக்கியமான கோலா கரடி ஒன்று 16 வருடங்கள் வரை வாழ கூடியது.  ஆஸ்திரேலியாவில் முன்பு 10 லட்சம் வரை கோலா கரடிகள் வசித்துள்ளன. 

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Thursday, August 14, 2014

தேக்கு மரம்

தேக்கு மரம் இது மிகவும் பொதுவான இந்திய மரங்களில் ஒன்றாகும். (குடும்ப வெர்ப்பினேசி) ஒரு பெரிய இலையுதிர் மரம். தேக்கு பரவலாக 2,000 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது இது மிகவும் உயரமாகவும் தடிமனகவும் இலைகள் அடர்த்தியாகவும் வளரக்கூடியது. அறுபது, எண்பது ஆண்டுகளில் உயர்ந்த முதிர்சியடைந்த மரங்களாகும். இந்த மரங்கள் உயரம் 45 மீட்டர் வரை வளர முடியும். இந்தியா, மியான்மர் (பர்மா),  தாய்லாந்து,  பிலிப்பைன்ஸ், ஜாவா மற்றும் மலாய் தீவு களில் காணப்படுகின்றன. தேக்கு ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவிலும் நடப்படுகிறது.

இந்திய தேக்குமரம் ஒரிசா, மத்திய பிரதேசம் வழியாக தெற்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆரவல்லி மலை தெற்கு எல்லைகள் வரை பரவியுள்ளது. உலர்ந்த மற்றும் ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் தெற்கு தீபகற்ப இந்தியாவில்  இயல்பாகவே வளரும். அதன் சிறந்த வளர்ச்சி  வளமான,  மண்ணில் 3 முதல் 5 மாதங்களுக்கு ஒரு உலர் பருவத்தில் ஆண்டுதோறும் 125 250 செ.மீ மழை பெறும்.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு தேக்கு மரத்தின் அனைத்து  இலைகளும் உதிர்ந்து புதியதாக வளரும். வளர்ந்த மரத்தின் வலுவான இலைகள் 60 செ.மீ. நீளம் வரை வளரும். மரத்தின் கிளைகளில் எண்ணற்ற சிறிய வெள்ளை பூக்கள் மலரும் பூக்கள் வாசனையாகவும் ஐந்து அல்லது ஆறு இதழ்கள் கொண்டிருக்கிகும். பல லட்சம் மலர்களைக்கொண்டிருக்கும் அந்த மலர்கள் கூட அதிகபட்சமாக 2.5 செ.மீ. அளவு அதிகரிக்கும். இந்த சமயத்தில் தேக்குமரம்  மிகவும் அழகாக தெரியும்.

தேக்குமரம் நாடு முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. இது மருத்துவ குணங்கள் உடையது மரம் மதிப்புயையது என்பதால் இது உற்பத்தி இல்லாத நாடுகளில் இதன் வர்த்தக மதிப்பு அதிகம். இந்த மரம் மிகவும் பலமான, கடினமான மற்றும் நீடித்த வலுவானது மற்றும் இதில் தனித்துவமான வாசனை எண்ணெய் உள்ளது இந்த எண்ணெய் மரத்தை காக்கிறது. இந்த மரம் பரந்த அளவில் தளவாடங்கள், வீடுகள், கப்பல்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் இலைகளில் இருந்து பெறப்படும் சாறு துணி சாயமாக பயன்படுத்தப்படுகிறது.  மரத்தின் பகுதிகளில் மிக மருத்துவரீதியில் மதிப்புவாய்ந்ததாக உள்ளன.  தலைவலி, செரிமானமின்மை குறைக்க மற்றும் வயிற்று பிரச்சினைகள் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது.

மேலும், தேக்கு மரம் தூள் பேஸ்ட்,  டையூரிடிக், கல்லீரல், அழற்சி மற்றும் பல்வலி குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது மர சாம்பல்  கண் இமைகள் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும் பார்வை மேம்படுகிறது என்று நம்பப்படுகிறது. வடிகட்டும் மூலம் பெறப்படும் ஆயில் படை, படர்தாமரை இவற்றிற்கு பஸ்தர் மாவட்ட பழங்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். மற்றும் மூச்சு குழாய் அழற்சி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. விதைகளில் (கொட்டைகள்) இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் முடி வளர்ச்சி  மற்றும் சொறி சிரங்கு கட்டுப்படுத்துகிறது. இந்திய தேக்கு மரங்கள் ஆயுர்வேத நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய தேக்குமரம் அதன் விரைவான வளர்ச்சி மற்றும் உயர் தரமான மரமாக மதிப்பிடப்படுகிறது பல வெப்பமண்டல நாடுகளில் தேக்கு மரங்கள் ஒரு முக்கியமான தோட்டங்களாக உள்ளது.  தேக்கு மரம் முக்கியமாக அதன் அசாதாரண ஆயுள் சூடான நாடுகளில் மதிப்பிடப்படுகிறது. இந்தியா, மியான்மர் ஆகிய நாடுகளில் பாதுகாப்பு மர விட்டங்களில் பல நூற்றாண்டுகளாக பழைய கட்டிடங்களில் காணப்படுகின்றன, மற்றும் தேக்கு விட்டங்கள் அரண்மனைகள், கோயில்களில்  1,000 ஆண்டுகளுக்கு நீடித்தது அழிவில்லாமல் இன்றும்  நிலைத்து இருக்கிறது.

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

Wednesday, August 13, 2014

மரங்கள் என்னும் வரங்கள்


ஆதியில் காடுகளில் வாழ்ந்த மனிதன், எப்பொழுது இலைகளையும், தழைகளையும் நாகரிகம் எனக் கருதி ஆடைகளாக உடுத்தத் தொடங்கினானோ, அன்றே மனிதன் மரங்களின் மீதான வன்முறையை ஆரம்பித்துவிட்டான். இன்று நாம் வாழும் பூமி வெப்பமயமாக்கலில் சிக்கி எதிர்

காலத்தில் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற வெப்பப் பந்தாக உருமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையின் பெருங்கொடை மரங்கள். மனிதன் தான் கொண்ட பேராசையின் பெரும் விளைவாக காடுகளின் மீது கைவைத்து மரங்களை அழித்து, வாழுகின்ற பூமி தனக்கானது மட்டுமே என எண்ணி பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஊறு விளைவித்தான்.

1950-ஆம் ஆண்டு பூமியின் சராசரி வெப்பநிலை 13.8 டிகிரி செல்ஸியஸாக இருந்தது. அது 1997-ஆம் ஆண்டு 14.6 டிகிரி செல்ஸியஸாக அதிகரித்துவிட்டது. வருடாவருடம் வெப்ப நிலையின் அளவு உயர்ந்து கொண்டே வந்தால் பனிப்பாறை உருகி, கடல்மட்டம் உயர்ந்து கடலோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும்.

காடுகளைத் திருத்தி கழனிகளை அமைத்த மனித இனம், இன்று கழனிகளை அழித்து வான்முட்டும் வணிக வளாகங்களையும், அடுக்ககங்களையும் அமைத்து இயற்கைக்கு எமனாகச் செயல்படுகிறது.

அந்தக் காலத்தில் தமிழகத்தில் சுமார் 33,000 ஏரிகள் இருந்தன. இன்று நகரமயமாதல் எனும் இயற்கைக்கு முரணான வளர்ச்சியில் ஏரிகள் தூர்க்கப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், கல்வி நிறுவனங்களாகவும், மருத்துவமனைகளாகவும் காட்சியளிக்கின்றன. வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியாகும் புளுரோ குளுரோ கார்பன் வளி மண்டல ஓúஸான் படலத்தில் (ஞழஞசஉ) ஓட்டை விழ வைக்கிறது.

பயன்படுத்தாமல் வீசி எரியும் அலைபேசி, தொலைக்காட்சி, கணினி என மின் கழிவுக் குப்பைகள் போன்றவை அவற்றின் பங்கிற்கு காற்றை நஞ்சாக்குகின்றன.

வாகன உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்து அயல்நாட்டுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதாகப் பெருமை கொள்ளும் அதே வேளையில், அயல்நாட்டு நிறுவனங்கள் சப்தமில்லாமல் நம்மீது தண்ணீர் சுரண்டலை நிகழ்த்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நான்கு சக்கர வாகனம் உற்பத்தி செய்வதற்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

ஐம்பது ஆண்டுகள் வாழும் வளமான மரத்தை நாம் வெட்டினால், அதனால் ஏற்படும் இழப்பு ரூபாய் கணக்கில் சுமார் 50 லட்சம்.வாழும் பூமியை வளமாக்க நாடெங்கிலும் உள்ள தரிசு நிலங்களை கணக்கிட்டு மரக்கன்றுகளை நட வேண்டும். மலைப்பாங்கான பகுதிகளில் ஹெலிகாப்டர் துணை கொண்டு விதை

களைத் தூவ வேண்டும். நம் குழந்தைகளுக்கு மரங்களில் பயன்களைச் சொல்லி வளர்க்க வேண்டும்.
தினமணி:
நன்றி By அ.பிரமநாதன்

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

Thursday, August 7, 2014

பறவைகள் குடிபெயர்வு


பதினோராயிரம் கி.மீ.தூரத்துக்கு குடிபெயரும் பறவைகள் மீண்டும் இருப்பிடம் திரும்பும் விந்தை
பிராணிகள் குடிபெயர்வு என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை முன்னிட்டு புலம் பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. மேலும் மனிதனைப்போலவே விலங்கினங்கள் கோடைகாலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன.
 அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக்கொள்கின்றன. குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வு செய்வது குடிபெயர்வு (வலசை போதல்) எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
 குடிபெயரும் பறவைகள், பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன.
 பறவைகள் குடிபெயரும் போது பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன.
 இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன. சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று ஒத்திகைகள்கூடப் பார்க்கின்றன. பிறகு ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு செல்லத் துவங்குகின்றன.
 இடம் பெயரும் பறவைகள் இருவிதமான நேர் உணர்வைப் பெற்றுள்ளன. ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது. மேலும் அவை புவிக்காந்தப்புலத்தைச் சார்ந்தது. ஆனால் உலகின் சில பகுதிகளில் தீர்க்க ரேகைகள் புவி காந்தப் புலத் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுவதில்லை.
 இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக் கொண்டு வசந்த காலத்திலும் இடம்பெயர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுகளின் படி கால, நேர, இட அடிப்படையில் அமையும் பறவைகளின் வான் பயண உத்திகள், வயதான பறவைகளுக்கு அதிகமாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ரீட்வார்ப்லர் என்ற இனப் பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன், இரு அச்சு வான் பயண முறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 பல வகையான தரைப் புலம் பெயர் பறவைகள் மிக நீண்ட தூரங்கள் இடம் பெயருகின்றன. இனப்பெருக்க காலத்தை மித வெப்பப் பகுதிகளில் அல்லது ஆர்ட்டிக் வட அரைக்கோளத்தில் கழிக்கின்ற பறவைகள், மற்றக் காலங்களில் வெப்ப வலயங்களை அல்லது தென் அரைக்கோளத்திலுள்ள மிதவெப்ப வலயப் பகுதிகளை நாடிச் செல்வதே மிகவும் பொதுவாகக் காணப்படும் புலப்பெயர்வு ஆகும்.
 சான்றாக வடக்கு ஐரோப்பாவிலுள்ள குருவிகள் ஆபிரிக்காவிலுள்ள குளிர்கால இடங்களை நோக்கி 6,800 மைல்கள் (11000 கி.மீ.) அல்லது அதற்கு அதிகமாகப் பறந்து செல்கின்றன. இவை தங்களுக்குள் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் ஒன்று மோதாமலும் சரியான இடைவெளியுடனும் ஒரு குறிப்பிட்ட வேகத்துடனும் பறந்து செல்கின்றன. வட பிரதேசக் கோடை காலத்தின் நீண்ட பகற்காலம், புதிதாகப் பொரித்த குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டது. இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும்.
 இலையுதிர் காலத்தில் பகற்காலம் சுருங்கி உணவு கிடைப்பதும் அரிதாகும் போது, பறவைகள் வெப்பப் பகுதிகளுக்கு வருகின்றன. இப் பகுதிகளில் பருவகாலங்களைப் பொறுத்து, உணவு கிடைப்பதில் அதிக மாற்றம் இருப்பதில்லை. இவ்வாறு புலம்பெயர்வதால் கிடைக்கும் நன்மைகள், களைப்பு, சக்திச் செலவு, புலம்பெயர்வின் போது ஏற்படும் ஆபத்துக்கள் என்பன போன்ற பாதக அம்சங்களை ஈடுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
 புலம்பெயர்வுக்கு முந்திய காலப் பகுதியில் பல பறவைகளில் அதிகரித்த செயற்பாடுகள் அல்லது புலம்பெயர்வு அமைதியின்மை காணப்படுகின்றது. அத்துடன் அதிகரித்த கொழுப்பு படிதல் போன்ற உடற் கூற்றியல் மாற்றங்களும் ஏற்படுகின்றன. கூண்டிலடைத்து வளர்க்கப்பட்ட பறவைகளும், பறக்கவிடும் போது, இயற்கையில் இவ்வினப் பறவைகள் புலப்பெயர்வின் போது பறக்கும் அதே திசையிலேயே பறக்க முயல்வது தெரிய வந்துள்ளது.
 அத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும் பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும் நிகழ்வது அறியப்பட்டுள்ளது. குடிபெயரும் உயிரினங்களில் பாலைவன வெட்டுக்கிளிப் பூச்சிகளும் அடங்குகின்றன. பெருந்திரள் கூட்டமாக இடம்பெயரும் போது ஒரு நாளைக்கு 3000 தொன் தாவரங்களை உண்ணுகின்றன.  ஒரு பெருந்திரள் கூட்டத்தில் சுமார் 50,000 மில்லியன் வரை பூச்சிகள் இருக்கும்.
 கடலில் வாழக்கூடிய மீன்கள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிலங்கிலம் ஆகியவையும் குடிபெயர்கின்றன. சால்மன் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடலிலிருந்து நன்னீரை நோக்கி 1500 மைல் (2400 கி.மீ) வரை பயணிக்கின்றன. இவ்வாறு நீண்ட தூரப் பயணத்தில் முற்றிலும் ஆற்றலிழந்த நிலையில் இனப்பெருக்கத்திற்குப் பின் பல மீன்கள் இறந்து விடுகின்றன. ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக நீண்ட தூரம் இடம்பெயர்கின்றன. குறிப்பாக பிரேசில் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக எட்டு வாரங்களில் 1250 மைல்கள் (2000 கி.மீ.) பயணிக்கின்றன.
 வட அமெரிக்காவிலுள்ள பாரன் மைதான மான்கள் 3700 மைல்களுக்கும் (5000 கி.மீ.) மேலாகப் பயணிக்கின்றன. இதுவே பாலூட்டிகளில் அதிக தூரம் நடைபெறும் வருடாந்த இடம்பெயர்வு ஆகும். கிரேக்க மேதை அரிஸ்டோட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பருவ கால இடம்பெயர்வைக் கண்டறிந்தார். கி.மு. 384 - 322 இல் எழுதிய ‘விலங்குகளின் வரலாறு’ என்ற நூலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். தற்காலிகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருகியுள்ளன.
 இவற்றிற்கென தனிப் படிப்புகளும் முனைவர் சலீம் அலி (1896 - 1987) என்பவர் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த பறவை நிபுணர் ஆவார். இவரின் ஆய்வுகள் மூலம் பறவைகள் பற்றிய பல்வேறு சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன.பறவைகள் தங்களது இடப்பெயர்ச்சிக்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன எனப் புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு சிலரின் ஆய்வுப்படி பறவைகளின் இடப்பெயர்வு வடக்கு, தெற்கு திசையில் அமைகின்றது.
 ரஷ்யாவில் உள்ள ரிபாஷி என்னுமிடத்தில் உள்ள உயிரியல் மையத்தில் ஆய்வாளர் நிகிதா சென்ஸ்டவ் வசந்த காலத்தில் பறவைகள் நெடுந்தொலைவு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் சென்று திரும்பும் போது கிழக்கு மேற்காக இடம்பெயர்கின்றன என்று தன் ஆய்வில் கூறியுள்ளார். இதிலிருந்து பறவைகள் எவ்வாறு அட்ச ரேகைகளைக் கண்டறிகின்றன என்பது தெரியவில்லை.
 ஆனால் தீர்க்க ரேகை என்பது வடக்கு, தெற்கு திசைகளில் செல்கிறது. இதை நடுப்பகலில் உள்ள சூரியனின் இருப்பிடத்தை வைத்தோ அல்லது பூமியின் காந்தப்புலத்தை வைத்தோ எளிதில் கண்டறியலாம் என்று சென்ஸ்டவ் விளக்கியுள்ளார். மூன்றாவதாக வானத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் இடம்பெயரும் பறவைகள், அவை செல்ல வேண்டிய இடத்தில் தீர்க்க ரேகையை அறிந்து இடம் பெயருகின்றன என்பர். ஆனால் இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.

அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...

அழிவின் விளிம்பில் நன்னீர் தாவரங்கள்

தாவரங்கள்தான் இந்த உலகின் முதன்மை உணவு உற்பத்தியாளர்கள். இதில் பயிர் செய்யப்படும் தாவரங்களின் நன்மைகளை ஓரளவுக்கு உணர்ந்திருக்கிறோம். ஆனால், இன்றளவும் காடுகளில் இருக்கும் தாவரங்கள் எண்ணற்ற நன்மைகளை நமக்குச் செய்துவருகின்றன. இந்தத் தாவரங்களில் பல, இனம் கண்டறியப்படுவதற்கு முன்பே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகின் மிகவும் குறிப்பிடத்தக்க பல்லுயிரிய மையமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருக்கும் சில அரிய வகைத் தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.

நன்னீர் தாவரங்களும் இதில் அடக்கம். இவற்றில் பெரும்பாலான தாவரங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் தண்ணீரைச் சுத்திகரிக்கும் பணியில் உள்ளதாக ஐ.யு.சி.என். அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பயன்கள்

நன்னீர் தாவரங்கள் மக்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் உள்ளன. பலவகையான தாவரங்கள் பாய், கயிறு தயாரிக்கக் காடுகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. சதுப்புநிலப் புல் வகையான லெப்டொசொலே நீசி என்ற தாவரம் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. லெம்னா ஜிபா என்ற தாவரம் அழுக்குத் தண்ணீரைச் சுத்திகரிக்கவும், எரிசக்தி உற்பத்திக்கும் முக்கியமாகப் பயன்படுகிறது. சைபரஸ் ட்டுபரோஸ் என்ற ஒரு நீர்வாழ் தாவரம் ஊதுவத்தி, வாசனை திரவியத் தயாரிப்பில் பயன்படுகிறது. இன்னும் அதிக எண்ணிக்கையிலான நன்னீர் தாவரங்கள் உரம் தயாரிப்பில் மூலப்பொருளாக உள்ளன.

நன்னீர் தாவரங்களில் சுமார் 175 மருத்துவக் குணம்கொண்டவையாகவும், 83 உணவுக்காகவும், 80 கால்நடை தீவனமாகவும் பயன்படுகின்றன. 3 தாவரங்கள் சாயம் தயாரிக்கவும், 14 தாவரங்கள் வேதிச்சேர்மங்கள் தயாரிக்கவும், 6 உயிர் எண்ணெய் தயாரிக்கவும், 9 நார் பொருள்கள் உருவாக்கவும், 16 அழகுக்காகவும், 37 தோட்டங்களில் வளர்க்கவும், 7 ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆபத்தில் உள்ள நன்னீர் தாவரங்கள்:

1. எரியோகோலன் பெக்டிநாட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் தாவரம் இது. நீலகிரி, கொடைக்கானல், பழனி மலைகளின் உயரமான பகுதிகளிலும் கேரளத்தின் ஆனைமுடியிலும் உள்ளது. சதுப்பு நிலப் புல்வெளி காடுகளில் வளரும் இயல்புடையது. காட்டுத்தீ, அந்நியத் தாவரங்கள் பெருக்கம், கட்டிட ஆக்கிரமிப்பு போன்றவை இது அழிவதற்கான காரணங்கள்.

2. ஹைகிரோபில்லா மதுரையன்சிஸ்

தமிழகத்தில் மட்டுமே காணப்படும் அரிய தாவரம். 1958-ல் மதுரை அருகே நல்லகுளம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இதன் பெயரில் மதுரையும் சேர்க்கப்பட்டது. இது எண்ணிக்கையில் மிகமிக குறைவாக இருப்பதாகவும், புதுக்கோட்டையில் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழிட அழிப்பு, மேய்ச்சல், சுருங்கிவரும் நன்னீர் நிலைகள், நகரமயமாக்கல் போன்றவை இது அழிவதற்கான காரணங்கள். மிகச் சிறிய சூழலியல் மாற்றம்கூட இந்தத் தாவரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றுவிடும்.

3. ஹைட்ரோகொட்டிலீ கொண்பர்டா

இந்த நீர்வாழ் தாவரம் நம் மலைகளில் மட்டுமே காணக்கூடிய அரிய வகைத் தாவரம். நீலகிரி, பழனி மலைகளில் மட்டுமே உள்ளது. மலை முகடுகளிலும், ஆற்றின் கரைகளிலும், காட்டின் ஓரங்களிலும் வளரும் தாவரம் இது. காட்டுத்தீ, ஒற்றை பயிர் பெருக்கம், சுற்றுலாவுக்காகக் காட்டை அழித்தல், கால்நடை மேய்ச்சல் போன்றவை இந்த இனம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் காரணங்கள்.

4. பியுர்னா சுவாமிய்

இந்த நீர் வாழ் தாவரம் மதுரை அருகில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால், சமீப காலமாக இந்தத் தாவரத்தை யாரும் பார்க்கவில்லை. இது சதுப்புநில, புல்வெளிகளில் வளரும் தன்மை கொண்டது. இந்த இனம் அழியும் நிலையில் உள்ளதாகப் பன்னாட்டு இயற்கை மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு (ஐ.யு.சி.என்.) சொல்கிறது.

5. பார்மேரியா இண்டிகா

மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக்கூடிய இந்தத் தாவரம் அழிவின் விளிம்பில் உள்ளது. இது தமிழ்நாட்டின் தாமிரபரணியிலும் கேரளத்தின் சில பகுதிகளிலும் மட்டுமே உள்ளது. மிகக் குறுகிய வாழிடத்தில் இது வாழ்கிறது. வாழிட அழிப்பு, ரசாயன விவசாயம், கட்டிடப் பெருக்கமும் இந்தத் தாவரத்தின் அழிவுக்குக் காரணமாக உள்ளன.

6. முர்டானியே லேன்சியோலேட்டா

தமிழ்நாடு, கேரளத்தின் ஒரு சில மலைகளில் மட்டுமே காணக்கூடிய அரிய வகை நீர் வாழ் தாவரம் இது. தோட்டங்கள், அதைச் சார்ந்த புல்வெளிகளில் வளரும் இயல்புடையது. பெருகிவரும் தொழிற்சாலைகள், வீடுகளின் அபரிமிதப் பெருக்கம் காரணமாக இந்த இனம் அச்சுறுத்தலில் உள்ளது.

அழிவின் விளிம்பில்

வாழிட அழிப்பும், வேகமான நகரமயமாக்கலும், அந்நியத் தாவரங்களின் ஆதிக்கமும் நன்னீர் தாவர எண்ணிக்கை குறையவும் அழிவுக்கும் காரணமாக உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கும், விலங்குகளுக்கும் குறிப்பாக இந்த உயிர் சூழலுக்கும் அதிகம் பயனளிக்கும் நன்னீர் தாவரங்கள் பல அச்சுறுத்தலில் உள்ளன.

நம் நாட்டில் பெருவாரியான மக்கள் இந்த நன்னீர் சூழல், நன்னீர் உயிரினங்களை நம்பியே வாழ்கின்றனர். நம்மைச் சுற்றி உள்ள, அதிகம் கவனிக்கப்படாத இந்த நன்னீர் உயிரினங்களையும் தாவரங்களையும் அவை செய்துவரும் சூழலியல் நன்மைகளையும் நாம் உணர வேண்டும். ஒருங்கிணைந்த வாழிடப் பாதுகாப்பு, தனி மனிதச் சூழலியல் அக்கறை, மாசுபாடு மேலாண்மை, முறைப்படுத்தப்பட்ட சுற்றுலா, மேம்படுத்தப்பட்ட சூழலியல் விழிப்புணர்வு, சட்டங்கள், தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் போன்றவற்றால் மூலமே அழிவிலுள்ள நன்னீர் உயிரினங்களைக் காப்பாற்ற முடியும்.

தமிழ்.திஇந்து.....

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Monday, August 4, 2014

பலூன் மீன்

சாதாரண மீன்களைப் போலவே கடலில் நீந்தித்திரியும் இந்த மீன்கள் எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டால் பலூன் போல உருண்டை வடிவமாகி விடுவதால் இதற்கு பலூன் மீன் எனப் பெயர் வந்தது. 

""மீனவர்களால் செல்லமாக பேத்தை மீன் என அழைக்கப்படும் இதன் விலங்கியல் பெயர் டெட்ராடான். லத்தீன் மொழியில் டெட்ராடான் என்பதற்கு 4 பற்கள் என்று அர்த்தமாகும். மனிதப் பல்லைப் போலவே இம்மீனின் வாயில் மேலும், கீழுமாக தலா இரு பற்கள் வீதம் மொத்தம் 4 பற்கள் இருக்கின்றன.கடலுக்கடியில் வாழும் சங்குகள்,சிப்பிகள், நண்டுகள் இவற்றைப் பிடித்து அதன் உறுதியான மேலோடுகளை உடைத்து அதனுள்ளே இருக்கும் சதைகளை இப்பற்களின் உதவியால் சாப்பிடுகின்றன.

இம்மீனின் வயிற்றுப்பகுதியில் மட்டும் டெட்ராடாக்ஸின் எனும் மிகக் கொடிய விஷம் இருக்கும். ஆனால் ஜப்பானிலும் கொரியாவிலும் இந்த விஷம் உள்ள பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து விட்டு மற்றவற்றை சுவையுள்ள உணவாக்கி சாப்பிடுகின்றனர்.

தனித்தனியாக இருக்கும் இதன் இரு கண்களும் எல்லாப்பக்கமும் அசையும் சக்தியுடையது.

 தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக் கொள்ளும் விசித்திர ஜீவன். உலகம் முழுவதும் 121 வகைகள் இருப்பதாகவும் அவற்றில் சில பிறப்பு முதல் இறப்பு வரை கடலில் மட்டுமே வாழும் தன்மையுடையதாகவும் சில உணவுக்காகவும் இனப்பெருக்கத்துக்காகவும் முகத்துவாரங்கள் வழியாக ஆறுகளில் சென்றும் வாழ்கின்றன.

குளிர் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர மற்ற எல்லாக் கடல்களிலும் இவ்வினங்கள் காணப் படுகின்றன. இவை நீந்தும்விதம் இவற்றை மற்ற மீன்களிலிருந்து தனித்து பிரித்துக் காட்டுகிறது.

ஏனெனில் இதன் பக்கவாட்டு மற்றும் மேல்,கீழாக இருக்கும் செதில்கள் மூலமாக மிக மெதுவாக நீந்துகிறது. மற்ற மீன்களைவிட சற்று வித்தியாசமான தோற்றமளிக்கும் இம்மீன்கள் மெதுவாக நீந்துவதால் எதிரிகளுக்கு எளிதில் இரையாகி விடுகின்றன. எதிரிகள் இதனருகில் வந்து பயமுறுத்தும்போது நீரை உடனடியாக உடலுக்குள் உள்ளிழுத்து ஒரு பலூனைப்போல, உருண்டையாக பந்தைப் போல மாறி தண்ணீரில் உருள ஆரம்பித்து விடுகின்றன.

மற்ற எதிரி மீன்கள் இதன் செயல்பாடுகளைப் பார்த்துப் பயந்து உடனே அந்த இடத்தை விட்டு அகன்று ஓடிவிடும். இம்மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து விட்டால் காற்றை வாய் வழியாக உடலுக்குள் உள்ளிழுத்து அப்போதும் பலூன் போன்று உருமாறிவிடும்.

இந்த தற்காப்பு நடவடிக்கையையும் மீறி எதிரிகள் விழுங்கிவிட்டால் அதன் வாயை அடைத்துக் கொண்டு நின்று விடும். இதனால் வாயில் சிக்கிக் கொண்ட இந்த மீனை எதிரி மீன்கள் எப்படியாவது வெளியில் துப்பிவிடத் துடிக்கும்.

வெளியில் வந்தவுடன் தனது வயிற்றில் இருக்கும் காற்றையோ அல்லது நீரையோ வெளியேற்றிவிட்டு சாதாரண நிலைக்கு வந்து பின் தப்பித்துச் சென்று பாறைகளின் ஊடே பதுங்கிக் கொள்ளும் விநோத ஜீவன் இது''

சுற்றுச்சூழலைப் பதுகாப்போம்.

மின்சார விலாங்கு மீன்


   உருண்டு, நீண்ட உடலோடு இருக்கிற விலாங்கு மீனைப் பத்தி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். பார்ப்பதுக்குதுக்கு பாம்பு போலவே இந்த மீன் இருக்கும். இதி்ல் பல வகையான வினோதங்கள் உண்டு. அதில் ஒன்று, மின்சார விலாங்கு மீன்.

    இதன் விலங்கியல் பெயர் எலக்ட்ரோபோரஸ் எலக்ட்ரிக்கஸ் என்பதாகும்.  இதனுடைய மேற்புரம் கரும் சாம்பல் நிறத்துலயும், அடிவயிறு மஞ்சள் நிறத்துலயும் இருக்கும். சேத்துக்கு அடியில வாழ விரும்புற இந்த மீன், வெளிக்காற்றையும் சுவாசிக்கும். 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேலே வந்து காற்றைச் சுவாசித்து விட்டு, மறுபடியும் சேத்துக்கு அடியில் போயிடும்.

   ஜிம்னோடிடே குடும்பத்தைச் சேர்ந்த இது சுமார் 2.5 மீட்டர் நீளமுடைய மீன்கள் தான் அதிகமாக இருக்கும். சுமார் 20 கிலோ எடை வரைக்கும் இந்த மீன் வளருமாம். இந்த மீன், ஷாக் அடிக்குற அளவுக்கு ஏறக்குறைய 600 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யுது. இதற்காகவே அதோட உடம்பில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எலக்ரோபிளேட்டுகள் இருக்கிறது. எதுக்காக இந்த மீனோட உடம்புல மின்சாரம் உற்பத்தி ஆகுது என்றால் தனக்கு வேண்டிய உணவு மீனை அதிர்ச்சியடைய வைத்து பிடிக்குறதுக்கும், எதிரி மீன்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் தான் மிந்சாரம் உற்பத்தி செய்கிறது. அதுக்காக இந்த மீனைப் பயன்படுத்தி வீட்டுல விளக்கெல்லாம் எரிய வைக்க முடியாது.


 இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...

கடல் விலாங்கு மீன்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பார்ப்பதற்கு பாம்பைப் போலவே தோற்றமளிக்கும் கடல் விலாங்கு.

பல கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று கடல் விலாங்கு மீன். சுவை மிக்க மீன் வகையாக இருப்பதால் உலக அளவில் இதனை விரும்பி வேட்டையாடுகின்றனர்.

ஆனால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இவற்றைப் பிடிப்பதில்லை என்பதால் பவளப்பாறைகளின் இடுக்குகளில் இவை கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.

ஆங்குயில் பார்ம்ஸ் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இவ்வினங்களில் சுமார் 800 வகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. குளங்களில் வாழும் விலாங்கு மீன்களைப் போலவே கடலில் வாழும் விலாங்கு மீன்களும் தோற்றமளிக்கின்றன. கடலில் வாழும் இவ்வினமோ சுமார் 5 செ.மீ முதல் 4 மீட்டர் வரை நீண்டதாகவும் பாம்புகளைப் போல உருவத்தை உடையதாகவும் இருக்கின்றன.

உருவத்தில் மிகவும் பெரியதாகவுள்ள முரே விலாங்கு மீனின் எடை சுமார் 25 கிலோ வரைகூட இருக்கும். இதன் முன் பகுதியிலும் வால் பகுதியிலும் துடுப்புகள் இருந்தாலும் அவையும் பக்கவாட்டில் இணைந்து ரிப்பன் போல வளைந்து உடலோடு உடலாக ஒட்டியிருக்கும்.

இத்துடுப்புகளே விலாங்கு மீன்கள் இடம் பெயரவும் உதவியாக இருக்கின்றன.

ஆழமற்ற கடல் பகுதிகள், மணல், சகதி நிறைந்த இடங்கள், பாறைகள் மற்றும் பவளப்பாறைகளின் இடுக்குகளிலும் பொந்துகளிலும் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன. இவற்றில் சில வகைகள் மட்டும் கடலில் 13ஆயிரம் அடி வரையுள்ள ஆழத்திலும் வாழ்கின்றன. ஆங்குலிடே என்ற குடும்பத்தை சேர்ந்த விலாங்கு மீன் நல்ல தண்ணீரிலும் வாழும் தன்மையுடையது. முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கடலில் இருந்து ஆற்றுக்கு வந்து குஞ்சு பொரித்தவுடன் மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும்.

இதன் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் கடலின் மேற்புறத்தில் மிதந்து கொண்டே பனித்துளிகளையும் கடல் நுரையையும் சாப்பிடும். பின்னர் கண்ணாடி போன்ற புழுவாக மாறி துள்ளிக் குதிக்கவும் நீந்தவும் கற்றுக் கொள்கின்றன. பின்னர் படிப்படியாக உருமாறி தாயைப் போலாகியவுடன் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகின்றன.

அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பா, நியுசிலாந்து, இத்தாலி, ஹாங்காங், நெதர்லாந்து, சுவீடன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த விலாங்கு மீன்களைக் கொண்டு சுவை மிக்க உணவுப் பதார்த்தங்கள் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் சுவைக்காகவே சில நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன் சுவைக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் அழிந்து வரும் உயிரின வகைகளில் சிவப்புப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

சிறுத்தை போன்ற புள்ளிகளையுடைய விலாங்கு மீன், முரே விலாங்கு மீன் ஆகியன கடலுக்குள் நீந்தி செல்லும் ஸ்கூபா டைவர்களை பயமுறுத்தும் மீன்களாகவும் இருக்கின்றன. இம்மீன்கள் நீளமாக இருப்பதால் உடலை வளைத்துக் கொண்டு குழிகளிலும், பாறைகளிலும் மறைந்திருந்தாலும் தலையை மட்டும் வெளியில் நீட்டி வாயை திறந்து வைத்துக் கொண்டேயிருக்கும்.
தினமணி:

மரம் வளர்ப்போம் புவிகாப்போம்

Saturday, August 2, 2014

அழிவின் விளிம்பில் எறும்புத்தின்னிகள


 உலகில் இருக்கும் எட்டுவகையான எறும்புத்தின்னிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
காரணம் இந்த எறும்புத்தின்னிகளின் இறைச்சிக்கும் அவற்றின் செதில்களுக்கும் சீனா மற்றும் வியட்நாமில் இருக்கும் மிகப்பெரிய கிராக்கி காரணமாக அவை பெருமளவில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாக இயற்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள் தெரிவித்துள்ளன.
 கடந்த பத்து ஆண்டுகளில் பத்துலட்சத்துக்கும் அதிகமான எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். குறிப்பாக பெரிய செதில்களைக்கொண்ட பங்கோலின் என்று அழைக்கப்படும் எறும்புத்தின்னிகள் அதிகம் அழிக்கப்பட்டிருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.
 உலக உயிரினங்களில் அதிகபட்சமாக உடலெங்கும் செதில்களைக்கொண்ட ஒரே பாலூட்டி இனமாக வர்ணிக்கப்படும் பங்கோலின் ரக எறும்புத்தின்னிகள் தான் இன்றைய நிலையில் உலக அளவில் சட்டவிரோதமாக விற்கப்படும் முதன்மையான விலங்கு என்கிறார்கள் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள்.
 சீனாவிலும் வியட்நாமிலும் இந்த பங்கோலின் ரக எறும்புண்ணியின் மாமிசம் மிகவும் விரும்பி உண்ணப்படும் மாமிசமாக இருக்கிறது. இவற்றின் செதில்கள் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
 இத்தனைக்கும் இந்த பங்கோலின் ரக எறும்புத்தின்னிகளின் செதில்கள் மனித நகங்களைப்போலவே வெறும் கெராடின் என்கிற வேதிப்பொருளால் ஆனது தான் என்றாலும் அதற்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக சீன மருத்துவர்கள் நம்புவதால் அதற்கு சீன மருத்துவர்கள் மத்தியில் மிகப்பெரிய கிராக்கி நிலவுகிறது.
 இப்படி உணவுக்காகவும் பாரம்பரிய சீன மருத்துவ தேவைகளுக்காகவும் உலகின் எறும்புண்ணிகள் பெருமளவில் சட்டவிரோதமாக கொல்லப்பட்டு கடத்தப்படுகிறது என்பது இயற்கை பாதுகாவலர்களின் கவலையாக இருக்கிறது.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

நாம் நமது வருங்கால சந்ததியினருக்காக செய்யும் கடமை

 காடுகளை அழித்தல், நதிகளை மாசடையச் செய்தல் என மனிதன் செய்த பல தவறுகளால், சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப மாறுதல் ஏற்பட்டு, மனித குலம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துக் கொண்டு உள்ளது. அதில் முக்கியமானதும், மனிதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதும் என்றால் அது தண்ணீர் பிரச்னையாகும்.

 மனித வாழ்க்கைக்கு நீர் ஆதாரம் என்பது மிகவும் அவசியமானதாகும். எண்ணெயைப் போல அதற்கு எந்த மாற்றும் கிடையாது. மனிதனுக்கு மிகவும் தேவைப்படும் தண்ணீரின் ஆதாரம் தற்போது மிகவும் சுருங்கி வருகிறது. தண்ணீர் ஆதாரம் குறைந்து கொண்டே இருக்கும் அதே நேரத்தில் மக்கள் தொகை பெருக்கம் பிரச்னையை இன்னும் சிக்கலாக்குகிறது. உலக பொருளாதாரமே உயர்ந்தாலும், மனிதனின் தாகம் தணிய தண்ணீரைத்தான் நாட வேண்டும்.

 தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து பணக்காரரோ, ஏழையோ, தென் பகுதியில் வசிப்பவரோ, வட பகுதியில் வசிப்பவரோ யாரும் தப்பிக்க இயலாது. பல நாடுகளில் உள்ள தண்ணீர் ஆதாரங்கள் பத்தில் ஒரு பங்காக சுருங்கி விட்டது. குறிப்பாக ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு கட்டடங்கள் வந்துவிட்டன. ஆறுகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

 ஆற்று மணலை களவாட, ஆறுகளை வற்றவிட்ட நம் மக்கள், நாளை நமக்கே தண்ணீர் கிடைக்காமல் போகப் போகிறது என்பதை இன்னமும் உணரவில்லை.


தண்ணீர் பற்றாக்குறை என்பது வெறும் குடிநீர் அல்லது பயன்பாட்டுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவது மட்டும் அல்லாமல்,  மறைமுகமாக பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் என்பது பலரும் அறியாத உண்மை. அதாவது, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சுகாதாரமற்ற தண்ணீரை ஏழை நாடுகளின் மக்கள் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, அங்கு மலேரியா, காசநோய் போன்ற நோய்கள் அதிகமாகப் பரவுவதும், உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, உணவுப் பஞ்சம் ஏற்படுவதும் தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் பிரச்னைகளே.

 சரி இதற்கெல்லாம் தீர்வு காண நம்மால் என்ன முடியும் என்று நினைக்காமல், ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்துவைத்தால், நாம் நிச்சயம் இந்த பிரச்னையில் இருந்து ஒரு சில ஆண்டுகளாவது தப்பித்துக் கொள்ளலாம்.

 தொழிற்சாலைகளை நடத்துவோர், அதில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்படியே நதியில் கொட்டாமல், அதனை சுத்திகரித்து வெளியேற்றுவதும், மரங்களை வெட்டாமல், இருக்கும் இடத்தில் மரங்களை வளர்ப்பதும் மனிதனின் கடமையாகிறது.

 வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் தண்ணீரின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவதும், தண்ணீர் மாசுபடுவதை தடுப்பதும், நீர் ஆதாரங்களை மேலும் சுருக்காமல் பெருக்குவதும் மனிதன் மனிதனுக்காக, அவனது வருங்கால சந்ததியினருக்காக செய்யும் கடமையாக இருக்கும்.

இன்றே அதற்கான பணிகளை துவக்குவோம்...

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.

Monday, July 28, 2014

இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்


 இந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது.

 உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன.

 இதேபோன்று, உலக அளவில் 13 சதவீத பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

 இவ்வாறு அபாயத்தில் இருக்கும் பறவையினங்கள் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.

 அதன்படி, உலக அளவில் இந்த ஆண்டில் சிவப்புப் பட்டியலில் 10,425 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 140 பறவையினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. 4 இனங்கள் பூர்விக இடத்தில் அழிந்துவிட்டன. 213 இனங்கள் மிக அரிதாகவும், 413 இனங்கள் அரிதாகவும் காணப்படுகின்றன.

 741 இனங்கள் அழிய வாய்ப்புள்ளவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பறவைகளின் வாழிடங்களை அழித்ததே அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி நாளிதள்.

வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Friday, July 25, 2014

சாணம் தின்னும் வண்டு

காடுகளில் விலங்குகளின் சாணக் கவிவுகளை உண்கின்ற வண்டுகள் நிறைய உள்ளன. இவை பல வடிவம் பல கலரிலும் உண்டு. இவை சாணக் கழிவுகளை எடுத்துச் செல்லும் அழகே தனி சாணக்கழிவை உருண்டையாக உருட்டி எடுத்துச் செல்லும்போது மேடான இடத்தில் படுகிற சிரமம், பல்லத்தில் உருள்வதும் செடி, கொடிகள் எற்படுத்தும் தடைகளையும் மீறி தன் இருப்பிடம் அடைகிறது. மேலும் விலங்குளின் கழிவுப் பொருள்களை கலைத்து   சாணத்தில் உள்ள விதைகள் முளைவிடுவதற்கு  உதவியதில் ஒரு முக்கியமான சுற்றுச் சூழல் பங்கு வகிக்கின்றன.

வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

காட்டுத்தீ

  உலகெங்கும் உள்ள காடுகளின் பெரிய வில்லன் காட்டுத்தீ மட்டுமே. மின்னல், எரிமலை, பாறைச்சரிவு ஆகியவற்றினால் ஏற்படும் உராய்வுகள் மற்றும் சிறு தீப்பொறி போன்றவைதான் காட்டுத்தீ ஏற்பட காரணமாக அமைகின்றன. இப்போது மக்கிய குப்பைகளின் வாயுக்களும், அணைக்கப்படாத சிகரெச் துண்டுகளும் தீ உருவாக காரணமாக உள்ளன.
  ஏறக்குறைய 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காடுகளில் உருவாகும் தீயினால் அவை அழிக்கப்படுகின்றன. எதிரிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக முந்தைய காலத்தில் ராணுவத்தினர் காடுகளுக்கு தீ வைப்பார்கள். மரங்கள் இருக்கும் இடத்தில் அதிக அளவில் சுத்தமான ஆக்சிஜன் இருக்கும். அதுவே தீ கொளுந்துவிட்டு எரியவும் காரணமாகி விடுகிறது. காடுகள் தீப்பற்றி எரிந்தால் அந்தப் பகுதியில் வீசும் காற்றின் வெப்பம் சுமார் 800 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அந்தப் பகுதியில் எரியாமல் இருக்கும் மரங்களில் உள்ள நீரும் ஆவியாகிவிடும். இதனால் அவை பசுமையை இழந்து விறகுக்கட்டைபோல மாறிவிடும்.
  காட்டுத்தீயின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டராக அதிகரிக்கும். புயல், பலத்த  காற்று வீசும் நிலையில் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த ஒரேவழி, அது பரவும் திசைக்கு எதிர் திசையில் நாம் தீ வைப்பதுதான். இதன் மூலம் அங்கிருக்கும் மரங்கள் எரிந்து விடுவதால், காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதற்கு வழி இல்லாத நிலை ஏற்படும். இதனால் தீயின் வேகம் குறைந்து அணைந்துவிடும்.
  ஆனாலும் காற்றின் திசைக்கு ஏற்ப காட்டுத்தீயும் திசை மாறும் என்பதால் அது எந்த திசைக்கு பரவும் என்பதை எளிதில் தீர்மானிக்க முடியாது. சில நாடுகளில் ஹெலிகாப்டர் மூலம் சில்வர் அயோடைடு பொடிகளை தூவி செயற்கை மழையை உருவாக்கி தீயை அணைப்பார்கள்.
  சில நாடுகளின் பொருளாதாரத்தையே காட்டுத்தீ ஆட்டம் காண வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தீப்பிடித்து எரிவதால் உருவாகும் கரியமில வாயு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் கேடு விளைவிக்கும். காட்டுத்தீ தொடர்ந்து எரிந்தால் வெப்பப் புயல் உறுவாகும். அது உலகின் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

Wednesday, July 23, 2014

அழிந்து வரும் கழுகு

 நாட்டில் எப்படி குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவாளர்கள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் காட்டில் துப்புரவாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள்தான் கழுகு. 
 காட்டில் எங்கு விலங்குகள் இறந்து கிடக்கிறதோ அங்கு கழுகுகள் நிச்சயம் இருக்கும். இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணும்.
பிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
 இந்தியாவில் நான்கு வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன; கழுகு, பிணந்தின்னிக்கழுகு, செந்தலைக்கழுகு, கோடாங்கிக்கழுகு. இறந்த விலங்குகளின் இறைச்சியை மட்டுமே புசிக்கும் இவை, சிறந்த இயற்கைத் துப்புரவாளர்கள். வீசியெறியப்படும் கால்நடை இறைச்சிகளை, கூட்டம் கூட்டமாகச் சென்றும் உண்ணும் இவை, இறைச்சி அழுகி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அழிந்து வரும் பிணந்தின்னிக்கழுகுகளை பாதுகாக்க, இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 அக்டோபர், நவம்பர் மாதங்களில் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போதுதான் கூடுகளில் இருக்கும். 45 நாட்கள் வரை அடை காக்கும். எனவே, மார்ச் வரை, கூடுகளில் எளிதாக பார்க்க முடியும். கழுகுகள் வேறு; பருந்துகள் வேறு. கழுகுகளுக்கு கழுத்தில் முடி இருக்காது.
 கேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது; ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது. நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது. நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. 

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Monday, July 21, 2014

தாவரங்களில் அற்புதங்கள்

   
   
 ஆப்பிள் பழத்தில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கும். அதனால்தான் ஆப்பில் தண்ணீரில் மிதக்கிறது.
   வெள்ளரி எண்பது காய்கறி கிடையைது பழவகையாகும். இதை எளிதாக கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. விதைகளை நடுவில் கொண்டிருக்கும் அனைத்துமே பழ வகையைச் சார்ந்தவையே!
  வாழைப்பழத்தில் அதிகமான சத்துப் பொரு்கள் உள்ளன. அதனால்தான் குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் உணவில் வாழையும் சேர்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் வாழையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயன பொருட்களும் உள்ளனவாம்.
  சீனாவிலும், ஜப்பானிலும் தர்பூசனி பழங்களை சிறந்த பரிசுப் பொருளாக வழங்குகிறார்கள்.
  குள்ள வில்லோ (Dwarf Willow)என்பதுதான் உலகின் சிறிய மர வகையாகும். கிரீன்லாந்தில் காணப்படும் இந்த வகைமரங்களின் மொத்த உயரமே 2 அங்குலம்தான். உலகின் உடரமான மரம் செக்கோயா. 360 அடிக்கும் அதிகமான உயரம் வளரக்கூடியவை இவை.
  உலக அளவில் மிகுதியாக விளையும் இரு காய்கறிகள் என்றால் அது தக்காளியும், உருளையும்தான். ஆனால் வெங்காயம்தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக உள்ளது. ஏனெனில் எல்லாவகை பதார்த்தங்களிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.
  உலகில் உள்ள மிகப்பழமையான மரங்கள் நிறைந்தது கலிபோர்னியா மாகாணம். இங்குள்ள பிரிஸ்டல்கோன் பைன் மரங்ளும், ராட்சத செக்கோயா மரங்ளும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் வயதான மரங்களாகும். ஆனால் உலகில் உயிருடன் நிற்பதில் அதிக வயதுடைய மரம் ஸ்வீடன் நாட்டில் உள்ளது. அதன் வேர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது 9 ஆயிரத்து 550 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
  'வீனஸ் பிளை' டிரேப் என்னும் பூச்சிகளை உண்ணும் செடிகள் அமெரிக்காவின் கரோலினா பகுதியில் காணப்படுகிறது.
  ஆப்பிரிக்காவில் யானைப் புல் என்று ஒருவகைப் பெரிய புற்கள் உள்ளன. இது4.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. யானைகள் மாலை வேளையில் இந்தப் புதர்களில் மறைந்து வாழ்வதால் இற்கு இந்தம் பெயர் வந்தது.
  "பாவ்பாப் மரம்" என்று ஒருவகை மரங்கள் ஆப்பிரிக்கா காடுகளில் உள்ளன. இதற்கு ஒரு சிறப்பு உண்டு. பஞ்சு போன்ற இதன் தண்டுப் பகுதியில் லிட்டர் கணக்கில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கும். அதிகப்பட்சம் ஆயிரம் லிட்டர் முதல் 11/4 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் இதன் தண்டில் சேமிக்கப்படுகிறது.
  மரங்கள் தங்களுக்கு தேவையான 90 சதவீத ஆற்றலை வளிமண்டலத்தில் இருந்தே பெறுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சூரிய ஒளிதான் அதன் முக்கிய ஊட்டம். 10 சதவீத சத்துக்களையே மண்ணில் இருந்து எடுத்துக் கொள்கிறது.
  ஒரு மரம் ஓராண்டில் வெளிப்யிடும் ஆக்சிஜன், 4பேர் கொண்ட குடும்பம் சுவாசிக்கப் போதுமானதாகும். அதனால்தான் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறார்கள்.
  வில்லோ மரத்தில் இருந்து கிரிக்கெட் மட்டை தயாரிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். உலகின் சிறந்த வலி நிவாரணி 'ஆஸ்பிரின்' மருந்து தயாரிப்பிலும் வில்லோ மரங்கள்தான் பயன்படுகின்றன. பேஸ்பால் மட்டைகள் கிக்கோரி மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
  'சாக்லெட்' கோகோ பீன் மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

Friday, July 18, 2014

இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

  கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.


 புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மீனினம் ஒன்று
இவற்றில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிழக்கு இமாயலப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டவை என்று அந்த ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கே வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உயிரினங்கள் (விலங்கினங்கள்) குறித்த கல்வியில் ஆர்வம் குறைந்து வருவது புதிய உயிரினங்களை கண்டறிவதில் பல இடையூறுகளை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பூச்சி
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினங்களில் (விலங்கினிங்களில்) கூடுதலானவை பூச்சிகளே என்று கூறும் அவர், இவற்றின் வாழ்விடங்களுக்கு, மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகள் காரணங்களால், அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளன என்றும் தெரிவித்தார்.
உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வு மேலும் கூடுதலாக முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தும் அவர், அந்த நடவடிக்கை இல்லாதபோது, பல அரிய வகையான உயிரினங்கள் (விலங்கினங்கள்) முற்றாக அழிந்துபோகக் கூடிய அபாயம் உள்ளன என்றும் கூறுகிறார்.

மேலும் ஒரு புதிய கடற்வாழ் உயிரினம்
நிலத்தில் வாழும் உயிரினங்களை (விலங்கினங்கள்) விட, நீரில் வாழ்பவை கூடுதலான அபாயங்களை எதிர்கொள்கின்றன எனவும்  தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Saturday, July 12, 2014

தேனீக்களைப் பாதிக்காத இயற்கைப் பூச்சிக்கொல்லி

 இன்று சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கவலைப் படுத்தும் விஷயங்களில் ஒன்று, தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவது. இது தொடர்பாக சுற்றுச்சூழலியலாளார்களின் கவலையில் அர்த்தமிருக்கிறது. மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருப்பவை தேனீக்கள். எனவே தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் உலக அளவில் உணவு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்.
 இயற்கைச் சூழல் அழிவு போன்ற பல காரணங்களில் தேனீக்களின் அழிவுக்கு மற்றொரு முக்கியகக் காரணம், பூச்சிக்கொல்லிகள். இந்நிலையில், தேனீ இனத்தை பாதிக்காமல் தாவரத்தைப் பாதுகாக்கும் விதமான பூச்சிக்கொல்லி மருந்தை தாம் கண்டு பிடித்திருப்பதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 ஆஸ்திரேலியாவில் 'புனல்' வடிவத்தில் வலை பின்னும் சிலந்தியிலிருந்து எடுக்கப்பட்ட டாக்சின் சுரப்பையும், ஸ்னோடிராப் எனப்படும் சிறு தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட புதிய ரசாயன மூலக்கூற்றையும் கொண்டு இந் பூச்சிக்கொல்லி மருந்து தாயாரிக்கப்பட்டிருக்கிறது.
 செயற்கை ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான பாதுகாப்பன மாற்றக இந்த இயற்கை வழி பூச்சிக் கொல்லி பயன்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடே உலகின் பல நாடுகளில் தேனீக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடையக் காரணம், எனவே இந்த இயற்கை பூச்சிக்கொல்லி நன்கு பலன் கொடுக்கும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.
 நமது உணவுத் தாவரங்களின் பெரும்பான்மையானவை மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களையே பெரிதும் நம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 "புரொசீடிங்ஸ் ஆப் த ராயல் சொசைட்டி" (Proceedings of the Royal Society) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

தேனீயின் முக்கியத்துவத்தை பலதடவை என்னுடைய இடுகையில் வெளியிட்டு இருக்கிறேன். தேனீ இல்லை என்றால் நமக்கு உணவு இல்லை. அதுமட்டும்மல்ல இயற்கை, மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, ஊர்வன, பூச்சிகள் அனைத்தையும் அழிக்காமல் அழிவில் இருந்து காப்பது நமது கடமை. 

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Friday, July 11, 2014

தும்பைப் பூ

 
  தமிழகமெங்கும் கிராமங்களில் சர்வ சாதாரமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப் பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான, தேன்சத்து நிறைந்த நாக்கு வடிவ மலர்கள் இவற்றைக் கொண்டு தும்பைச் செடிகளை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம். பெரும்பாலும் மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை விரும்பி வளர்கிறது. விவசாய நிலங்களில் இந்தச் செடி மழைக்காலங்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூக்கள் மருத்துவப் பயன் அதிகமானவை.

  தும்பை மலர்களில் உற்பத்தியாகும் தேனைக் குடிக்க எப்போதும் தேனீ, எறும்பு, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிறவகைப் பூச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். செடியைப் பிடுங்கினால் எளிதில் வேறுடன் வந்துவிடும். வேரில் மண் ஒட்டாமல் வெண்மையாகவே காணப்படுவது தும்பையின் சிறப்பு அம்சமாகும். மேலும், எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் தன்மையுடையது. கடவுள் வழிபாட்டிற்க்கு தும்பைப் பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத்தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகின்றன. முருகக் கடவுளுக்கு தும்பை மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுவதுண்டு. 

  தும்பை ஆனைத்தும்பை, பெருந்தும்பை என இருவகைப்படும். இதில் மலைப்பகுதிகளில் பெரிதாக காணப்படும் தும்பைக்கு மலைத்தும்பை என்றும், நிலத்தில் காணப்படும் தும்பையை நிலத்தும்பை என்றும் அழைக்கின்றனர். இரண்டிற்கும் மருத்துவ குணங்கள் ஒன்றுதான்.

மருத்துவக்குணங்கள்:

சளியைப்போக்க:
உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும். சளி பிடித்தால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் தும்பை இலையின் சாற்றில் தேன் கலந்து அருந்தினால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம்.

மலச்சிக்கல் தீர:
  மலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில் இரசாயனம் கலந்த உணவுகளை உண்பதாலும், அதிக மன அழுத்தத்தாலும், மலச்சிக்கல் ஏற்படுகிறது. இவர்கள் தும்பை இலையை நன்கு அலசி அதனுடன் புதினா, கொத்துமல்லி கலந்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வாயுத் தொல்லை நீங்க:
  வாயுவை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லயிலிருந்து விடுபட தும்பை இலையின் சாறை தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் அருந்திவரக் குணம் தெரியும்.

தலைவலிபோக:
  தும்பை இலையை நன்றாக கசக்கி தலையின் பொட்டுகளிலும், நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் தடவி வந்தால் தலைவலி குணமாகும்.

பித்தம் குறைய:
பித்தம் குறைக்கும் தன்மை இதற்கு அதிகமுண்டு.

கண் நோய் அகல:
  கணிணியில் வேலை செய்பவர்களின் கண்கள் வேகமாக சோர்வடையும். இதனால் கண்களில் ஒரு விதமான வலி ஏற்படும். இதனைப் போக்கவும், கண்களில் ஏற்படும்நோய்களை அகற்றவும் தும்பை இலையின் சாறே சிறந்த மருந்தாகும்.

தொண்டைச் சதை வளர்ச்சியை போக்க:
  டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை வளர்ச்சியை தடுத்து விடும் தன்மையும் இதற்கு உண்டு. தும்பையின் இளம் இலைகளை பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேக வைத்து பின்னர் புளி கரைசலை ஊற்றி சிறிது நேரம் கழித்து தாளித்து கடைந்து சாப்பிட்டால் தொண்டைச் சதை வளர்ச்சி தடுக்கப்பட்டு விடும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது:
  வாரம் இரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்போது நல்லெண்ணெயில் தும்பைப் பூக்களைப் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஜலதோஷம், தலைப்பாரம், சிருரோகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீரும். கண்களுக்கு நல்ல ஒளியைத் தரும்.

குழந்தைகளுக்கு:
   தும்பைப் பூவின் சாறு - 4 துளி, உத்தாமணிச் சாறு - 4 துளி, மிளகுத்தூள் - 3 கிராம் இம் மூன்றையும் தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளும், மாந்தம், பேதி போன்ற நோய்களும் குணமாகும்.

பெண்களுக்கு:
  வாயுப்பிரச்சினையால் சில பெண்களுக்கு மாதவிடாய் தடைப்பட்டு தாமதமாகும். இவர்கள் தும்பை இலை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் 3 கிராம் அளவு, பசும்பாலுடன் கலந்து சாப்பிட மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். இதைச் சாப்பிடும் காலங்களில் புளி, காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது.

விஷம் முறிய:
  எப்படிப்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மை தும்பை இலைக்கு உண்டு. பாம்பு கடிபட்டவர்களுக்கு தும்பை இலைச்சாறு 20 முதல் 30 மில்லி வரையில் கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் பாம்பு கடிபட்டவருக்கு இரண்டு மூன்று முறை பேதியாகும், வாந்தி சளியுடன் வெளியேறும். அப்போது அவருடைய உடல் மீண்டும் உஷ்ணமாகும். இதுவே குணமாவதற்கான அறிகுறியாகும்.
குறிப்பு இந்த மருந்து சாப்பிடுபவர்கள் சுமார் 24 மணி நேரம் வரையில் உறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவாக புதிய மண் பானையில் பச்சை அரிசியும், பாசிப்பயறும் கலந்து சமைத்து சாப்பிட வேண்டும். உப்பு, புளி, காரம் உணவில் மூன்று நாட்களுக்கு சேர்க்கக் கூடாது.

தேள் கடிக்கு:
  தேள் கொட்டியவுடன் வலி தாங்காமல் துடிப்பவர்களுக்கு தும்பை இலைச்சாற்றை 4 துளிகள் எடுத்து சிறிது தேனில் கலந்து உள்ளுக்குக் கொடுத்து கொட்டிய இடத்தில் தும்பை இலைச் சாற்றில் தேய்த்து விட வலி குறைந்து விஷம் முறிந்து விடும். சகல விஷப் பூச்சிக்கடிக்கும் இந்த முறையைக் கையாளலாம்.
  எங்கும் கிடைக்கும் தும்பையை நாம் சாதாரண செடி போல நினைக்காமல், அதன் மருத்துவப் பயன்களை பயன்படுத்தி நோயின்றி வாழ முயற்சிப்போம்.

இயற்கை எழில் கூடிய அருமையான பகுதி. ...

Thursday, July 10, 2014

இலந்தைப் பழம்

சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.

பொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.

இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு.

இந்த இதழில் இலந்தைப் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்.

இலந்தைப் பழம் என்றதும் கவியரசர் கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தப் பாடலில் அவர் கூறியதுபோல் 

எல்லோரும் வாங்கும் பழம்..

இது ஏழைக்கின்னே பொறந்த பழம்.. என்பார்

இந்தப் பழத்தின் தன்மை இப்போது புரிகிறதா..

இன்று தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.

இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.

தமிழ் - இலந்தைப் பழம்

ஆங்கிலம் - சீன தேதி 

தெலுங்கு - றெஜி பாண்டு 

மலையாளம் - Ilanta 

இந்தி - pitni பெருகும் 

சமஸ்கிருத - கோலா 

தாவரவியல் பெயர் - Ziziphus mauritiana


Botanical name - Ziziphus mauritiana

பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி

மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த

உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்

இலந்தை நெறுங்கனியை யெண்

- அகத்தியர் குணபாடம்

நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.

எலும்புகள் வலுப்பெற

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

பித்தத்தைக் குறைக்க

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

வாந்தி குறைய

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல் வலியைப் போக்க

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...