Monday, July 28, 2014

இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்


 இந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது.

 உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன.

 இதேபோன்று, உலக அளவில் 13 சதவீத பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

 இவ்வாறு அபாயத்தில் இருக்கும் பறவையினங்கள் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.

 அதன்படி, உலக அளவில் இந்த ஆண்டில் சிவப்புப் பட்டியலில் 10,425 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 140 பறவையினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. 4 இனங்கள் பூர்விக இடத்தில் அழிந்துவிட்டன. 213 இனங்கள் மிக அரிதாகவும், 413 இனங்கள் அரிதாகவும் காணப்படுகின்றன.

 741 இனங்கள் அழிய வாய்ப்புள்ளவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பறவைகளின் வாழிடங்களை அழித்ததே அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி நாளிதள்.

வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Friday, July 25, 2014

சாணம் தின்னும் வண்டு

காடுகளில் விலங்குகளின் சாணக் கவிவுகளை உண்கின்ற வண்டுகள் நிறைய உள்ளன. இவை பல வடிவம் பல கலரிலும் உண்டு. இவை சாணக் கழிவுகளை எடுத்துச் செல்லும் அழகே தனி சாணக்கழிவை உருண்டையாக உருட்டி எடுத்துச் செல்லும்போது மேடான இடத்தில் படுகிற சிரமம், பல்லத்தில் உருள்வதும் செடி, கொடிகள் எற்படுத்தும் தடைகளையும் மீறி தன் இருப்பிடம் அடைகிறது. மேலும் விலங்குளின் கழிவுப் பொருள்களை கலைத்து   சாணத்தில் உள்ள விதைகள் முளைவிடுவதற்கு  உதவியதில் ஒரு முக்கியமான சுற்றுச் சூழல் பங்கு வகிக்கின்றன.

வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

காட்டுத்தீ

  உலகெங்கும் உள்ள காடுகளின் பெரிய வில்லன் காட்டுத்தீ மட்டுமே. மின்னல், எரிமலை, பாறைச்சரிவு ஆகியவற்றினால் ஏற்படும் உராய்வுகள் மற்றும் சிறு தீப்பொறி போன்றவைதான் காட்டுத்தீ ஏற்பட காரணமாக அமைகின்றன. இப்போது மக்கிய குப்பைகளின் வாயுக்களும், அணைக்கப்படாத சிகரெச் துண்டுகளும் தீ உருவாக காரணமாக உள்ளன.
  ஏறக்குறைய 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காடுகளில் உருவாகும் தீயினால் அவை அழிக்கப்படுகின்றன. எதிரிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக முந்தைய காலத்தில் ராணுவத்தினர் காடுகளுக்கு தீ வைப்பார்கள். மரங்கள் இருக்கும் இடத்தில் அதிக அளவில் சுத்தமான ஆக்சிஜன் இருக்கும். அதுவே தீ கொளுந்துவிட்டு எரியவும் காரணமாகி விடுகிறது. காடுகள் தீப்பற்றி எரிந்தால் அந்தப் பகுதியில் வீசும் காற்றின் வெப்பம் சுமார் 800 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அந்தப் பகுதியில் எரியாமல் இருக்கும் மரங்களில் உள்ள நீரும் ஆவியாகிவிடும். இதனால் அவை பசுமையை இழந்து விறகுக்கட்டைபோல மாறிவிடும்.
  காட்டுத்தீயின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டராக அதிகரிக்கும். புயல், பலத்த  காற்று வீசும் நிலையில் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த ஒரேவழி, அது பரவும் திசைக்கு எதிர் திசையில் நாம் தீ வைப்பதுதான். இதன் மூலம் அங்கிருக்கும் மரங்கள் எரிந்து விடுவதால், காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதற்கு வழி இல்லாத நிலை ஏற்படும். இதனால் தீயின் வேகம் குறைந்து அணைந்துவிடும்.
  ஆனாலும் காற்றின் திசைக்கு ஏற்ப காட்டுத்தீயும் திசை மாறும் என்பதால் அது எந்த திசைக்கு பரவும் என்பதை எளிதில் தீர்மானிக்க முடியாது. சில நாடுகளில் ஹெலிகாப்டர் மூலம் சில்வர் அயோடைடு பொடிகளை தூவி செயற்கை மழையை உருவாக்கி தீயை அணைப்பார்கள்.
  சில நாடுகளின் பொருளாதாரத்தையே காட்டுத்தீ ஆட்டம் காண வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தீப்பிடித்து எரிவதால் உருவாகும் கரியமில வாயு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் கேடு விளைவிக்கும். காட்டுத்தீ தொடர்ந்து எரிந்தால் வெப்பப் புயல் உறுவாகும். அது உலகின் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

Wednesday, July 23, 2014

அழிந்து வரும் கழுகு

 நாட்டில் எப்படி குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவாளர்கள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் காட்டில் துப்புரவாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள்தான் கழுகு. 
 காட்டில் எங்கு விலங்குகள் இறந்து கிடக்கிறதோ அங்கு கழுகுகள் நிச்சயம் இருக்கும். இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணும்.
பிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
 இந்தியாவில் நான்கு வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன; கழுகு, பிணந்தின்னிக்கழுகு, செந்தலைக்கழுகு, கோடாங்கிக்கழுகு. இறந்த விலங்குகளின் இறைச்சியை மட்டுமே புசிக்கும் இவை, சிறந்த இயற்கைத் துப்புரவாளர்கள். வீசியெறியப்படும் கால்நடை இறைச்சிகளை, கூட்டம் கூட்டமாகச் சென்றும் உண்ணும் இவை, இறைச்சி அழுகி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அழிந்து வரும் பிணந்தின்னிக்கழுகுகளை பாதுகாக்க, இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 அக்டோபர், நவம்பர் மாதங்களில் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போதுதான் கூடுகளில் இருக்கும். 45 நாட்கள் வரை அடை காக்கும். எனவே, மார்ச் வரை, கூடுகளில் எளிதாக பார்க்க முடியும். கழுகுகள் வேறு; பருந்துகள் வேறு. கழுகுகளுக்கு கழுத்தில் முடி இருக்காது.
 கேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது; ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது. நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது. நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. 

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Monday, July 21, 2014

தாவரங்களில் அற்புதங்கள்

   
   
 ஆப்பிள் பழத்தில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கும். அதனால்தான் ஆப்பில் தண்ணீரில் மிதக்கிறது.
   வெள்ளரி எண்பது காய்கறி கிடையைது பழவகையாகும். இதை எளிதாக கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. விதைகளை நடுவில் கொண்டிருக்கும் அனைத்துமே பழ வகையைச் சார்ந்தவையே!
  வாழைப்பழத்தில் அதிகமான சத்துப் பொரு்கள் உள்ளன. அதனால்தான் குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் உணவில் வாழையும் சேர்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் வாழையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயன பொருட்களும் உள்ளனவாம்.
  சீனாவிலும், ஜப்பானிலும் தர்பூசனி பழங்களை சிறந்த பரிசுப் பொருளாக வழங்குகிறார்கள்.
  குள்ள வில்லோ (Dwarf Willow)என்பதுதான் உலகின் சிறிய மர வகையாகும். கிரீன்லாந்தில் காணப்படும் இந்த வகைமரங்களின் மொத்த உயரமே 2 அங்குலம்தான். உலகின் உடரமான மரம் செக்கோயா. 360 அடிக்கும் அதிகமான உயரம் வளரக்கூடியவை இவை.
  உலக அளவில் மிகுதியாக விளையும் இரு காய்கறிகள் என்றால் அது தக்காளியும், உருளையும்தான். ஆனால் வெங்காயம்தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக உள்ளது. ஏனெனில் எல்லாவகை பதார்த்தங்களிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.
  உலகில் உள்ள மிகப்பழமையான மரங்கள் நிறைந்தது கலிபோர்னியா மாகாணம். இங்குள்ள பிரிஸ்டல்கோன் பைன் மரங்ளும், ராட்சத செக்கோயா மரங்ளும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் வயதான மரங்களாகும். ஆனால் உலகில் உயிருடன் நிற்பதில் அதிக வயதுடைய மரம் ஸ்வீடன் நாட்டில் உள்ளது. அதன் வேர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது 9 ஆயிரத்து 550 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
  'வீனஸ் பிளை' டிரேப் என்னும் பூச்சிகளை உண்ணும் செடிகள் அமெரிக்காவின் கரோலினா பகுதியில் காணப்படுகிறது.
  ஆப்பிரிக்காவில் யானைப் புல் என்று ஒருவகைப் பெரிய புற்கள் உள்ளன. இது4.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. யானைகள் மாலை வேளையில் இந்தப் புதர்களில் மறைந்து வாழ்வதால் இற்கு இந்தம் பெயர் வந்தது.
  "பாவ்பாப் மரம்" என்று ஒருவகை மரங்கள் ஆப்பிரிக்கா காடுகளில் உள்ளன. இதற்கு ஒரு சிறப்பு உண்டு. பஞ்சு போன்ற இதன் தண்டுப் பகுதியில் லிட்டர் கணக்கில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கும். அதிகப்பட்சம் ஆயிரம் லிட்டர் முதல் 11/4 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் இதன் தண்டில் சேமிக்கப்படுகிறது.
  மரங்கள் தங்களுக்கு தேவையான 90 சதவீத ஆற்றலை வளிமண்டலத்தில் இருந்தே பெறுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சூரிய ஒளிதான் அதன் முக்கிய ஊட்டம். 10 சதவீத சத்துக்களையே மண்ணில் இருந்து எடுத்துக் கொள்கிறது.
  ஒரு மரம் ஓராண்டில் வெளிப்யிடும் ஆக்சிஜன், 4பேர் கொண்ட குடும்பம் சுவாசிக்கப் போதுமானதாகும். அதனால்தான் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறார்கள்.
  வில்லோ மரத்தில் இருந்து கிரிக்கெட் மட்டை தயாரிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். உலகின் சிறந்த வலி நிவாரணி 'ஆஸ்பிரின்' மருந்து தயாரிப்பிலும் வில்லோ மரங்கள்தான் பயன்படுகின்றன. பேஸ்பால் மட்டைகள் கிக்கோரி மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
  'சாக்லெட்' கோகோ பீன் மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

Friday, July 18, 2014

இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

  கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.


 புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மீனினம் ஒன்று
இவற்றில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிழக்கு இமாயலப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டவை என்று அந்த ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கே வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உயிரினங்கள் (விலங்கினங்கள்) குறித்த கல்வியில் ஆர்வம் குறைந்து வருவது புதிய உயிரினங்களை கண்டறிவதில் பல இடையூறுகளை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பூச்சி
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினங்களில் (விலங்கினிங்களில்) கூடுதலானவை பூச்சிகளே என்று கூறும் அவர், இவற்றின் வாழ்விடங்களுக்கு, மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகள் காரணங்களால், அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளன என்றும் தெரிவித்தார்.
உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வு மேலும் கூடுதலாக முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தும் அவர், அந்த நடவடிக்கை இல்லாதபோது, பல அரிய வகையான உயிரினங்கள் (விலங்கினங்கள்) முற்றாக அழிந்துபோகக் கூடிய அபாயம் உள்ளன என்றும் கூறுகிறார்.

மேலும் ஒரு புதிய கடற்வாழ் உயிரினம்
நிலத்தில் வாழும் உயிரினங்களை (விலங்கினங்கள்) விட, நீரில் வாழ்பவை கூடுதலான அபாயங்களை எதிர்கொள்கின்றன எனவும்  தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Saturday, July 12, 2014

தேனீக்களைப் பாதிக்காத இயற்கைப் பூச்சிக்கொல்லி

 இன்று சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கவலைப் படுத்தும் விஷயங்களில் ஒன்று, தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவது. இது தொடர்பாக சுற்றுச்சூழலியலாளார்களின் கவலையில் அர்த்தமிருக்கிறது. மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருப்பவை தேனீக்கள். எனவே தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் உலக அளவில் உணவு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்.
 இயற்கைச் சூழல் அழிவு போன்ற பல காரணங்களில் தேனீக்களின் அழிவுக்கு மற்றொரு முக்கியகக் காரணம், பூச்சிக்கொல்லிகள். இந்நிலையில், தேனீ இனத்தை பாதிக்காமல் தாவரத்தைப் பாதுகாக்கும் விதமான பூச்சிக்கொல்லி மருந்தை தாம் கண்டு பிடித்திருப்பதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 ஆஸ்திரேலியாவில் 'புனல்' வடிவத்தில் வலை பின்னும் சிலந்தியிலிருந்து எடுக்கப்பட்ட டாக்சின் சுரப்பையும், ஸ்னோடிராப் எனப்படும் சிறு தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட புதிய ரசாயன மூலக்கூற்றையும் கொண்டு இந் பூச்சிக்கொல்லி மருந்து தாயாரிக்கப்பட்டிருக்கிறது.
 செயற்கை ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான பாதுகாப்பன மாற்றக இந்த இயற்கை வழி பூச்சிக் கொல்லி பயன்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடே உலகின் பல நாடுகளில் தேனீக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடையக் காரணம், எனவே இந்த இயற்கை பூச்சிக்கொல்லி நன்கு பலன் கொடுக்கும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.
 நமது உணவுத் தாவரங்களின் பெரும்பான்மையானவை மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களையே பெரிதும் நம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 "புரொசீடிங்ஸ் ஆப் த ராயல் சொசைட்டி" (Proceedings of the Royal Society) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

தேனீயின் முக்கியத்துவத்தை பலதடவை என்னுடைய இடுகையில் வெளியிட்டு இருக்கிறேன். தேனீ இல்லை என்றால் நமக்கு உணவு இல்லை. அதுமட்டும்மல்ல இயற்கை, மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, ஊர்வன, பூச்சிகள் அனைத்தையும் அழிக்காமல் அழிவில் இருந்து காப்பது நமது கடமை. 

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Friday, July 11, 2014

தும்பைப் பூ

 
  தமிழகமெங்கும் கிராமங்களில் சர்வ சாதாரமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப் பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான, தேன்சத்து நிறைந்த நாக்கு வடிவ மலர்கள் இவற்றைக் கொண்டு தும்பைச் செடிகளை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம். பெரும்பாலும் மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை விரும்பி வளர்கிறது. விவசாய நிலங்களில் இந்தச் செடி மழைக்காலங்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூக்கள் மருத்துவப் பயன் அதிகமானவை.

  தும்பை மலர்களில் உற்பத்தியாகும் தேனைக் குடிக்க எப்போதும் தேனீ, எறும்பு, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிறவகைப் பூச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். செடியைப் பிடுங்கினால் எளிதில் வேறுடன் வந்துவிடும். வேரில் மண் ஒட்டாமல் வெண்மையாகவே காணப்படுவது தும்பையின் சிறப்பு அம்சமாகும். மேலும், எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் தன்மையுடையது. கடவுள் வழிபாட்டிற்க்கு தும்பைப் பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத்தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகின்றன. முருகக் கடவுளுக்கு தும்பை மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுவதுண்டு. 

  தும்பை ஆனைத்தும்பை, பெருந்தும்பை என இருவகைப்படும். இதில் மலைப்பகுதிகளில் பெரிதாக காணப்படும் தும்பைக்கு மலைத்தும்பை என்றும், நிலத்தில் காணப்படும் தும்பையை நிலத்தும்பை என்றும் அழைக்கின்றனர். இரண்டிற்கும் மருத்துவ குணங்கள் ஒன்றுதான்.

மருத்துவக்குணங்கள்:

சளியைப்போக்க:
உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும். சளி பிடித்தால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் தும்பை இலையின் சாற்றில் தேன் கலந்து அருந்தினால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம்.

மலச்சிக்கல் தீர:
  மலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில் இரசாயனம் கலந்த உணவுகளை உண்பதாலும், அதிக மன அழுத்தத்தாலும், மலச்சிக்கல் ஏற்படுகிறது. இவர்கள் தும்பை இலையை நன்கு அலசி அதனுடன் புதினா, கொத்துமல்லி கலந்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வாயுத் தொல்லை நீங்க:
  வாயுவை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லயிலிருந்து விடுபட தும்பை இலையின் சாறை தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் அருந்திவரக் குணம் தெரியும்.

தலைவலிபோக:
  தும்பை இலையை நன்றாக கசக்கி தலையின் பொட்டுகளிலும், நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் தடவி வந்தால் தலைவலி குணமாகும்.

பித்தம் குறைய:
பித்தம் குறைக்கும் தன்மை இதற்கு அதிகமுண்டு.

கண் நோய் அகல:
  கணிணியில் வேலை செய்பவர்களின் கண்கள் வேகமாக சோர்வடையும். இதனால் கண்களில் ஒரு விதமான வலி ஏற்படும். இதனைப் போக்கவும், கண்களில் ஏற்படும்நோய்களை அகற்றவும் தும்பை இலையின் சாறே சிறந்த மருந்தாகும்.

தொண்டைச் சதை வளர்ச்சியை போக்க:
  டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை வளர்ச்சியை தடுத்து விடும் தன்மையும் இதற்கு உண்டு. தும்பையின் இளம் இலைகளை பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேக வைத்து பின்னர் புளி கரைசலை ஊற்றி சிறிது நேரம் கழித்து தாளித்து கடைந்து சாப்பிட்டால் தொண்டைச் சதை வளர்ச்சி தடுக்கப்பட்டு விடும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது:
  வாரம் இரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்போது நல்லெண்ணெயில் தும்பைப் பூக்களைப் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஜலதோஷம், தலைப்பாரம், சிருரோகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீரும். கண்களுக்கு நல்ல ஒளியைத் தரும்.

குழந்தைகளுக்கு:
   தும்பைப் பூவின் சாறு - 4 துளி, உத்தாமணிச் சாறு - 4 துளி, மிளகுத்தூள் - 3 கிராம் இம் மூன்றையும் தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளும், மாந்தம், பேதி போன்ற நோய்களும் குணமாகும்.

பெண்களுக்கு:
  வாயுப்பிரச்சினையால் சில பெண்களுக்கு மாதவிடாய் தடைப்பட்டு தாமதமாகும். இவர்கள் தும்பை இலை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் 3 கிராம் அளவு, பசும்பாலுடன் கலந்து சாப்பிட மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். இதைச் சாப்பிடும் காலங்களில் புளி, காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது.

விஷம் முறிய:
  எப்படிப்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மை தும்பை இலைக்கு உண்டு. பாம்பு கடிபட்டவர்களுக்கு தும்பை இலைச்சாறு 20 முதல் 30 மில்லி வரையில் கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் பாம்பு கடிபட்டவருக்கு இரண்டு மூன்று முறை பேதியாகும், வாந்தி சளியுடன் வெளியேறும். அப்போது அவருடைய உடல் மீண்டும் உஷ்ணமாகும். இதுவே குணமாவதற்கான அறிகுறியாகும்.
குறிப்பு இந்த மருந்து சாப்பிடுபவர்கள் சுமார் 24 மணி நேரம் வரையில் உறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவாக புதிய மண் பானையில் பச்சை அரிசியும், பாசிப்பயறும் கலந்து சமைத்து சாப்பிட வேண்டும். உப்பு, புளி, காரம் உணவில் மூன்று நாட்களுக்கு சேர்க்கக் கூடாது.

தேள் கடிக்கு:
  தேள் கொட்டியவுடன் வலி தாங்காமல் துடிப்பவர்களுக்கு தும்பை இலைச்சாற்றை 4 துளிகள் எடுத்து சிறிது தேனில் கலந்து உள்ளுக்குக் கொடுத்து கொட்டிய இடத்தில் தும்பை இலைச் சாற்றில் தேய்த்து விட வலி குறைந்து விஷம் முறிந்து விடும். சகல விஷப் பூச்சிக்கடிக்கும் இந்த முறையைக் கையாளலாம்.
  எங்கும் கிடைக்கும் தும்பையை நாம் சாதாரண செடி போல நினைக்காமல், அதன் மருத்துவப் பயன்களை பயன்படுத்தி நோயின்றி வாழ முயற்சிப்போம்.

இயற்கை எழில் கூடிய அருமையான பகுதி. ...

Thursday, July 10, 2014

இலந்தைப் பழம்

சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.

பொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.

இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு.

இந்த இதழில் இலந்தைப் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்.

இலந்தைப் பழம் என்றதும் கவியரசர் கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தப் பாடலில் அவர் கூறியதுபோல் 

எல்லோரும் வாங்கும் பழம்..

இது ஏழைக்கின்னே பொறந்த பழம்.. என்பார்

இந்தப் பழத்தின் தன்மை இப்போது புரிகிறதா..

இன்று தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.

இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.

தமிழ் - இலந்தைப் பழம்

ஆங்கிலம் - சீன தேதி 

தெலுங்கு - றெஜி பாண்டு 

மலையாளம் - Ilanta 

இந்தி - pitni பெருகும் 

சமஸ்கிருத - கோலா 

தாவரவியல் பெயர் - Ziziphus mauritiana


Botanical name - Ziziphus mauritiana

பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி

மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த

உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்

இலந்தை நெறுங்கனியை யெண்

- அகத்தியர் குணபாடம்

நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.

எலும்புகள் வலுப்பெற

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

பித்தத்தைக் குறைக்க

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

வாந்தி குறைய

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல் வலியைப் போக்க

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...

திராட்சைப் பழம்

 
  ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

  புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோய்

  கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். பெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினருக்கு 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள். மூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப் பொடியை கலந்து அருந்தி வரச்சொன்னார்கள்.

  சில நாட்களுக்குப் பின்னர் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்கு குணமாகி இருந்தது. அதிக அளவு திராட்சைப் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களைவிட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டு குணப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றலுடன் செயல்படும்

  தினசரி 50 முதல் 100 கிராம் வரை திராட்சைப் பழங்களை மென்று உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப்பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது...

செர்ரி பழம்

கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாமைனர் மண்டலங்களில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப் பொருட்களையும், நோய் எதிர்ப் பொருட்களையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் சத்துப் பட்டியலை அறிந்து கொள்வோம். 

  இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரி பழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். 

  இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம்மிக்க சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. 

  'ஆன்தோசயனின் கிளைகோசிட்' எனும் நிறமி செர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது. 

  உடலில் சைக்ளோஆக்சிஜனேஸ் 1, சைக்ளோஆக்சிஜனேஸ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையை 'ஆன் தோசயானின்' நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் பணிகளில் பங்கெடுக்கிறது. கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும். 

  புற்றுநோய், உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. 

  'மெலடானின்' எனும் சிறந்த நோய் எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது. இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோய்த் தடுப்புபணியை செய்கிறது. 

  பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுஉப் புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது. பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும். 

  புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டாகரோட்டின் போன்ற ஆரோக்கியம் பழங்கும் ஆன்டி-ஆக்சி டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும்பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை. வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. 

  மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் 'அசெரோலா' வகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரி பழங்களைவிட 'வைட்டமின் சி' மற்றும் 'வைட்டமின் ஏ' மிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி'யும், குறிப்பிட்ட அளவில் 'வைட்டமின ஏ' யும் உள்ளது. 

சாப்பிடும் முறை:....... 

  செர்ரி பழங்களை நேரடியாக சாப்பிடலாம். 

  பீச் பழம், அன்னாசிப் பழம், திராட்சை போன்ற கனிகளுடன் செர்ரியை சேர்த்து பழக்கலவையாகவோ, பழ சாலட்டாகவோ செய்து சுவைக்கலாம். 

  கேக், ரொட்டி, பிஸ்கட், ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் உலர்த்தப்பட்ட செர்ரி சேர்க்கப்படுகிறது.  

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.


Wednesday, July 9, 2014

வெள்ளை மயில்

 
மயில்களில் மூன்று வகை உண்டு. இந்திய மயில்கள், பச்சை மயில்கள் மற்றும் காங்கோ மயில்கள்.

  இந்திய மயில்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் காணப்படுகின்றன.

  பச்சை மயில்கள் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் காங்கோ மயில் மத்திய ஆஃப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. காங்கோ மயில்கள் வான்கோழிகள் போல இருக்கும்.

  இந்தியாவின் தேசியப் பறவையாக மயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்துப் புராணங்களில் மயில் புனிதமான பறவையாக உள்ளது. அதன் தோகையில் காணப்படும் கண்கள் கடவுளின் கண்களாகக் கருதப்படுன்றன.

  மயில்களில் ஆண் மயில்கள் தோகைகளைக் கொண்டிருக்கும். பெண் மயிலுக்குத் தோகை கிடையாது. பச்சை, நீலம், கரிய நிறம் மின்னும். சராசரியாக 200 இறகுகளை ஆண் மயில் கொண்டிருக்கும். பெண் மயில் ஆண் மயிலை விட சிறியதாகவும் பழுப்பு நிறத்துடனும் இருக்கும்.

  இந்திய மயில்களின் தோகைகள் மட்டுமே பிரகாசிக்கும் நிறங்களைக் கொண்டிருப்பவை. பெண் மயில்களை ஈர்ப்பதற்காகத் தன் அழகிய தோகைகளை ஆண் மயில்கள் பயன்படுத்துகின்றன.

  ஆண் மயிலின் நீளமான தோகை, அதன் உடல் நீளத்தில் 60 சதவீதம். பெண் மயில்கள் தங்கள் ஆண் இணைகளைத் தோகையின் அளவு, வண்ணம் மற்றும் தோகையை விரிக்கும் அழகு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கும்.

  பூச்சிகள், தாவரங்கள் மற்றும் சிறு உயிர்களை உணவாக மயில்கள் உட்கொள்ளும்.

  ஆண் மயில் தன் தோகைகளை ஆண்டுதோறும் உதிர்த்து விடும். பல நாடுகளில் இந்த இறகுகளை அரிய பொருளாக சேகரிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் தோகைக்காக மயில்கள் கொல்லப்படுவதில்லை.

  இந்திய வகை மயில்களில் உயிரியல் ரீதியாக நிறக் குறைபாடு ஏற்பட்டு பிறப்பவையே வெள்ளை மயில்கள்.

இயற்கை அண்ணை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

விந்தைப் பூக்கள்

 
பிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின் நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.

  பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மலர் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில் ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.

  ‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.

  சோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன. முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன. மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.

  அசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர் போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே தோற்றமளிக்கும்.

  ஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின் பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு அச்சமூட்டுவதாக காணப்படும்.

  நைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின் மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.

  வாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும் இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து காலையிலேயே அது காயாகிவிடும்.

  ஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப் என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக் குறிக்கும் அறிகுறியாம்.

 நன்றி: அதிசய மலர்கள் 1000, 
ஆசிரியர் : கடல் நாகராசன்,

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

பனை உழவாரன்

நமது ஊர்ப்புறங்களில் வில் போலத் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை, குறிப்பாக பனைமரங்களின் அருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆங்கிலத்தில் Palm Swift என்று அறியப்படும் பனை உழவாரன்கள்தான் அவை. இவை பறந்துகொண்டே காற்றில் பறக்கும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணக் கூடியவை.

இந்த பறவை வகையைச் சேர்ந்த, அதேநேரம் பனை உழவாரன்களைவிட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவை அதிசயிக்க வைத்திருக்கிறது. அல்பைன் உழவாரன்கள் ஆண்டில் சுமார் 200 நாட்களுக்கு (சுமார் 6 மாதங்களுக்கு மேல்) தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் அறிஞர்கள் தங்களது சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

உலகம் சுற்றும்

பிப்ரவரி முதல் மே மாதங்கள்வரை மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் ஆனைமலைப் பகுதிகளில் இப்பறவைகள் பறந்து திரிவதை பார்த்திருக்கிறேன். வில்லில் இருந்து புறப்பட்டுப் பாயும் அம்பைப் போல காற்றைக் கிழித்துக்கொண்டு, அதிவேகமாக அங்குமிங்கும் சட்சட்டென வளைந்து திரும்பி பறக்கும் இயல்புடையவை. வலசை போகும் பண்பு கொண்ட இவை, இந்தியாவில் இமயமலைப் பகுதிகளிலிருந்து கிழக்கே பறந்து வருவதும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் உயரமான இடங்களிலிருந்து கீழேயும் இவை வலசை வருவதாகத் தெரிய வந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அல்பைன் உழவாரன்கள் சகாரா பாலைவனத்தைக் கடந்து மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வலசை போகின்றன.

பொதுவாக வலசை போகும் பண்பை அறிய பறவைகளைப் பிடித்து அவற்றின் காலில் ஒரு வளையத்தை மாட்டிவிடுவார்கள். ஒவ்வொரு வளையத்துக்கும் ஒரு பிரத்யேக எண்ணும் வளையமிடும் நிறுவனத்தின் பெயரும் இருக்கும். உலகின் வேறு பகுதியில் அந்தப் பறவை பிடிக்கப்பட்டால், அவ்வளையத்தில் உள்ள தகவல்களை வைத்து, எங்கு எப்போது வளையமிடப்பட்டது என்பதை அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு அறிய முடியும்.

தொழில்நுட்ப உதவி

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கைக்கோள் பட்டையை (Satellite collar) பறவையின் முதுகில் பொருத்தி, அவை போகுமிடங்களை ஆராய்ச்சிக்கூடத்தில் உட்கார்ந்துகொண்டே கணினியில் பார்த்து அறிந்துவிட முடிகிறது. ஆனால், இக்கருவி விலையுயர்ந்தது. உருவில் பெரிய, பருமனான (வாத்து, நாரை, கொக்கு போன்ற) பறவைகளின் உடலில் மட்டுமே செயற்கைக்கோள் பட்டையைப் பொருத்த முடியும். இதனால் சிறிய பறவைகளின் வலசைப் பண்பை அறிவது, இயலாத காரியமாக இருந்தது.

இந்நிலையை மாற்றியது ஒளி-அளவி இடங்காட்டி (Light-level geolocator) அல்லது பறவை இடப்பதிவி (Bird logger). இந்த கருவி செய்வதெல்லாம், பொருத்தப்பட்ட பறவை இருக்குமிடத்தின் சூரிய ஒளிவீச்சின் அளவை (Measure of irradiance) ஒளி உணர்கருவியின் (light sensor) உதவியால் பதிவு செய்வதே ஆகும். சூரிய ஒளியின் தீவிரம், ஒரு நாளின் நேரத்தைப் பொருத்து மாறுபடுகிறதல்லவா? இதை வைத்து நேரத்தை கணக்கிடமுடியும். நேரத்தைக் கணக்கிட்டு, அதன் மூலம் பூமியில் எந்தப் பகுதியில் அந்த நேரத்தில் மதியமாக இருந்தது, காலைக் கருக்கல், அந்தி மாலை என்றெல்லாம் கணிக்கமுடியும். இந்த விவரங்களைக் கொண்டு அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் கணக்கிடலாம். ஆக, ஒளியின் அளவை பதிவு செய்வதால் பறவையின் இருப்பிடம் நமக்குத் தெரிந்துவிடும்.

சுவிஸ் ஆய்வு

இதுபோன்ற ஒரு கருவியை சுவிட்சர்லாந்தில் உள்ள 6 அல்பைன் உழவாரன்களுக்கு பொருத்தினார்கள். கூடு கட்டும் இடத்திலேயே அவை பிடிக்கப்பட்டன. ஏனென்றால், அவை வலசை போய் திரும்ப அங்கேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் இவற்றை எளிதில் பிடித்து பறவை இடப்பதிவியை மீட்டெடுக்க வசதியாக இருக்கும். அவர்கள் பொருத்திய இக்கருவியின் எடை மிகமிகக் குறைவு, வெறும் 1.5 கிராம். அவர்கள் பொருத்திய இந்தக் கருவிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது ஒளியின் அளவை மட்டும் பதிவு செய்யாமல் அப்பறவைகள் பறக்கும் வேகத்தையும், உடலசைவையும்கூட பதிவு செய்யும் முடுக்கமானியையும் (Accelerometer) கொண்டிருந்தது. இந்தத் தகவலின் மூலம் அவை இறக்கை அடித்துப் பறக்கின்றனவா? இறக்கையடிக்காமல் காற்றில் தவழ்ந்து பறக்கின்றனவா? அல்லது ஓய்வெடுக்கின்றனவா என்பதையெல்லாம் கணிக்கமுடியும்.

இக்கருவி பொருத்தப்பட்ட 6 பறவைகளில், சுமார் 10 மாதங்கள் கழித்து மூன்றை மட்டும் மீண்டும் பிடிக்க முடிந்தது. அவற்றின் முதுகில் கட்டிவைக்கப்பட்டிருந்த பறவை இடப்பதிவியில் பதிவான தகவல்களை ஆராய்ந்ததில், அந்த மூன்று பறவைகளும் தரையிறங்காமலேயே சுமார் 6 மாத காலம் வானில் சுற்றித் திரிந்த ஆச்சரிய சங்கதி தெரியவந்தது.

ஆச்சரிய உண்மை

இதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? இந்த இடத்தில் இவ்வகைப் பறவைகளின் உடலமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவற்றின் கால்கள் மிகவும் சிறியவை, மேலும் அந்தக் கால்கள் எதையாவது பிடித்துத் தொங்குவதற்காகவே தகவமைந்துள்ளன. ஆகவே, ஒரு வேளை அவை கீழிறங்கினாலும் அவை அமரும் இடம் ஏதாவது குகையாகவோ அல்லது மரக்கிளையாகவோதான் இருக்க முடியும். அப்படி அவை ஓய்வெடுத்தால் அந்த இடத்தில் ஒளியின் அளவும் மாறுபடும் அல்லவா? அப்படியிருந்தால், அவற்றின் உடலில் பொருத்தப்பட்ட கருவி அதைப் பதிவு செய்திருக்கும். ஆனால், ஒளி அளவில் அப்படிப்பட்ட பெரிய ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. பதிவுகள் அனைத்தும் சுமார் 6 மாதங்களுக்கு சீராக இருந்ததை வைத்தே, இவை வானிலேயே பறந்து திரிந்தன என்பதை அறிய முடிந்தது.

என்னதான் பறக்கச் சிறகு இருந்தாலும், எப்படி ஒரு பறவையால் கீழிறங்காமலேயே இருக்க முடியும்? சாப்பாட்டுக்கு என்ன செய்யும்? அவை காற்றில் இருக்கும் பூச்சிகளையே உணவாகக் கொள்கின்றன. ஆகவே, கீழிறங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

அதெல்லாம் சரி, உடலுக்கு ஓய்வு வேண்டாமா? தூங்க வேண்டாமா? உழவாரன்களுக்கு ஒரு விசித்திரமான பண்பு உண்டு, அந்தரத்தில் தூங்குவதுதான் அது! ஆம், ஆங்கிலத்தில் இதை Aerial roosting என்கிறார்கள்.

உழவாரன்கள் தம் வாழ்வின் பெரும்பகுதியை வானிலேயே கழிக்கின்றன, கூடமைக்கும் காலத்தைத் தவிர. பறவையியலாளர்களிடையே பல காலமாக இருந்து வந்த இந்த அனுமானம், ஆராய்ச்சியின் விளைவால் இப்போது அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் உண்மையாகிவிட்டது.

தி இந்து  கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்-

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Monday, July 7, 2014

மீன்கள் சில உண்மைகள்

* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

* முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம்.

* மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.

* ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.

* மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.

* பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

* மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.

* மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன.

* காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

* மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இது 18 மீட்டர் நீளம் இருக்கும்.

* ‘லங் ஃபிஷ்’ என்ற மீன் நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.

* ஆழ்கடலில் ஒளியை உமிழும் மீன்கள் வசிக்கின்றன.

* பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரத்திற்குத் தாவிச் செல்லக்கூடியவை.

* மிக வேகமாகச் செல்லக்கூடியது செயில் ஃபிஷ்

* பெரிய மீன்களின் வாயையும் உடலையும் சுத்தம் செய்யக்கூடியது ‘க்ளீனர்’ மீன்.

* ‘பஃபர் ஃபிஷ்’ தட்டையாக இருக்கும். எதிரியைக் கண்டதும் தண்ணீரைக் குடித்து உருண்டையாகிவிடும். அதைக் கண்ட எதிரி பயந்து ஓடும்!

* ‘சூரிய மீன்’ என்ற வகை மீன் கோடிக்கணக்கில் முட்டைகள் இடும்.

* ‘சர்ஜன் மீன்’ என்ற மீனின் வால் பகுதியில் இரு பக்கமும் சிறிய கத்தி போன்ற அமைப்பு உள்ளன.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...

Thursday, July 3, 2014

நா‌ட்டு‌ச் சர்க்கரை

 
நம் இல்லங்களில் கடந்த 30 வருடங்களாக நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது வெள்ளைச் சர்க்கரை. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகத்திற்கு வந்ததோ, அன்றைக்கே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.
நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை வயிறு, அதாவது ஜீரணம் கெடுவதுதான். இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளைச் சர்க்கரையைச் சொல்லலாம்.

இந்த வெள்ளைச் சர்க்கரை வருவதற்கு முன்னர் நாம் எதை பயன்படுத்திக்கொண்டிருந்தோம். கரும்புச் சர்க்கரை (நா‌ட்டு‌ச் ச‌ர்‌க்கரை), வெல்லம், பனை வெல்லம் போன்ற இயற்கைத் தன்மை எந்த விதத்திலும் கெடாத இனிப்பை.

கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும். இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.

டாக்டர் போர்பஸ்ராஸ் (Dr.Forbesross) தனது CANCER - ITS CAUSE AND CURE நூலில் கரும்புச் சாறு மற்றம் கரும்புச் சர்க்கரையின் மகத்துவத்தைச் சொல்வதைக் கேளுங்கள்:

1. மேற்கிந்தியத் தீவுகளில் கரும்புத் தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட உணவில் கறும்புச் சாறு இடம் பிடித்துள்ளது. மேலும் கறுப்பு நிறக் கரும்புச் சர்க்கரையை அவர்கள் தினம்தோறும் உட்கொள்கிறார்கள். இதனால் இவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது மேலும் கேன்சர் நோய் இவர்களில் யாருக்குமே இல்லை என்கிறார்.

2. கரும்புச் சாற்றில் உள்ள கனிமச் சத்துகள் கரையக்கூடிய வகையைச் சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது. அதுவுமில்லாமல் கரும்புச் சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது. அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்.

3. அதுவுமில்லாமல் உடலில் நோயை உண்டு பண்ணும் அமிலத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை வழங்கிறதாம்.

டாக்டர் லூயிஸ்குன், டாக்டர் சிரில்ஸ்காட், டாக்டர் லஸ்ட் என்று நிறைய பேர் இதன் அருமையைச் செல்லியிருக்கிறார்கள்.

உடனே கரும்பு ஜூஸ் கடையை நோக்கி ஓடாதீர்கள். நாள்தோறும் 4 டம்ளர் கரும்பு ஜூஸ் குடித்தேன் ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள். ரோட்டில் விற்கும் கட்டை கறும்பை முறுக்கி பிழிந்து குடித்துவிட்டால் சத்து சேர்ந்து விடாது. விஷயத்தைச் சொல்லிவிட்டோம். நல்ல கறும்பில்தான் சாறு பிழிந்தார்களா என்று சோதிப்பது உங்கள் வேலை! அதே போல் கறும்புச் சர்க்கரையின் தரம் பார்த்து வாங்குவதும் உங்கள் வேலை! கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது. வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என்ற நினைப்பு நம்மை விட்டு ஒழிய வேண்டும்.

நாடு கடத்தப்பட்ட நல்லவற்றை (கரும்புச் சர்க்கரையை) நாம் முதலில் நம் பழக்கத்திற்கு கொண்டு வருவோம்.

இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது...

சீதாபழம்

சீதாபழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து,  பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையு‌ம் அடங்கியுள்ளது.

இ‌வ்வளவு ச‌த்து‌க்க‌ள் ‌சீதாபழ‌த்‌தி‌ல் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது. 

மரு‌த்துவ குண‌ங்க‌ள்!

சீதாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.

சீதாபழச் சதையோடு உப்பை‌க் கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.

விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.

சீதாபழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

சீதாபழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

சீதாபழம் விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. 

சிறுவர்களுக்கு சீதாபழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும்.

சிறிதளவு வெந்தயம், சிறு பயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீதாபழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும். 

சீதாபழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். 

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

கரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்



இதுபோன்ற அபூர்வ பவளப் பாறைகள் அழிந்துவிடும் என்று அச்சங்கள்

  கரீபியக் கடல் பகுதியில் இருக்கும் பவளப் பாறைகள் 20 ஆண்டுகளுக்குள் முற்றாக அழிந்துவிடக் கூடும் என இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (ஐயுசிஎன்) கூறியுள்ளது.

35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளில் கிடைத்த தகவல்களின்படி, 1970களில் இருந்ததைவிட 50 சதவீதம் இந்தக் பவளப் பாறைகள் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. அதிக அளவிலான மீன் பிடித்தலும் நோய்களுமே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில், இந்த அழிவு தொடரும் என்றும் ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பவளப் பாறைகள் மீண்டும் வளரும் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மக்களின் நலன்களுக்கு பவளப் பாறைகள் முக்கியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

“பவளப் பாறைகள் பல நாடுகளையும் மக்களையும் பாதுகாக்கின்றன. அங்கு வசிக்கும் மக்களின் நலனுக்கு இந்த பவளப்பாறைகளின் நலன் மிக முக்கியமானது. தவிர, அவை மிக அழகானவை” என்கிறார் ஐயுசிஎன்னைச் சேர்ந்த கார்ல் குஸ்டாஃப் லண்டின்.
இந்த ஆய்வுக்காக 1970லிருந்து 2012 வரை பவளப்பாறைகள் இருக்கும் 90 இடங்களில் திரட்டப்பட்ட தகவல்கள் ஆராயப்பட்டன.
கரீபியக் கடல் பகுதியில் இருக்கும் பெரும்பாலான பவளப் பாறைகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகிவருகின்றன. அதாவது, உயிரோட்டமான, வண்ணமயமான தோற்றத்திலிருந்து ஆல்கேக்கள் படர்ந்த வெற்றுப் பவளப் பாறைகளாக அவை மாறிவருகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த பவளப் பாறைகளில் வசித்துவந்த பல உயிரினங்கள் இல்லாமல் போனதுதான் இந்த பாதிப்பிற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
1980களில் பனாமா கால்வாயில் இருந்து பரவியதாகக் கருதப்படும் ஒரு நோயால், அந்தக் கடல் பகுதியில் இருந்த கடல் முள்ளெலிகள் பெரும் எண்ணிக்கையில் அழிந்தன. அதேபோல, பவளப் பாறை இருக்கும் பகுதியில் நடந்த அதிக அளவிலான மீன்பிடித்தலால், கிளி மூக்குக் கொண்ட ஒரு வகை மீனினமும் வெகுவாகக் குறைந்துபோனது.

மீன்களுக்கும் உணவளிக்கிறது இந்தப் பவளப் பாறைகள்

  இந்த இரண்டு உயிரினங்களுமே பவளப் பாறைகளில் மேயக்கூடியவை. இந்த இரண்டு உயிரினங்களும் அழிந்து போனதால் அவற்றை ஆல்கேக்கள் மூடி மறைத்தன.
இருந்தபோதும், இந்த பவளப் பாறைகள் பாதுகாக்கப்பட்டால், பாதிப்படைந்த பவளப் பாறைகள் மீண்டும் உயிர்க்கும் என்கிறது இந்த ஆய்வு.
கரீபியக் கடல் பகுதி மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இம்மாதிரி பவளப் பாறைகள் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. கடலின் வெப்ப நிலை உயர்வும் இந்த சேத்த்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.
கடலின் வெப்பம் உயர்ந்தால், பவளப் பாறைகளின் திசுக்களில் வசிக்கும் ஒரு வகை மெல்லிய ஆல்கேக்களை அவை இழந்துவிடும். இதன் காரணமாக, அவை வெண்ணிறமாக மாறிவிடும்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...