Monday, December 6, 2010

சந்நியாசி நண்டு

சந்நியாசி நண்டு



  சொந்த,பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.
   இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..
   ""பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.
   புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.
   இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.
  புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
  இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.
   ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.
   இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது'' என்றார்.

நன்றி தினமணி...

Thursday, November 18, 2010

பூமி மிகப்பெரிய அதிசயம்

நாம் வாழ்ந்து கொணடிருக்கின்ற இந்தப்பூமி மிகப்பெரிய அதிசயம்.

பூமியில் மட்டுமே
   சூரியக்குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. மற்றக் கிரகங்களில் இதுவரை எந்த உயிரினங்களும் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். காரணம், உயிர் வாழ்வதற்கு அவசியமானவை காற்றும், நீரும். மற்ற கிரகங்களில் இல்லை. இரும்பினும், எதிர்காலத்தில் பிற கிரகங்களில் வாழ்வது குறித்து ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைப்பு
   பூமி, உருண்டை வடிவத்தில் அமைந்துள்ளது. இது தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வகையில் சுழன்று கொண்டிருக்கிறது. அத்துடன் சூரியனையும் சுற்றி வருகிறது. இரவு, பகல் என்ற வேறுபாடு தோன்றுகிறது. நம்முடைய பூமி, மிகப்பெரிய காந்தமாகத் திகழ்கிறது. அதன் மையப்பகுதியானது நிக்கல், இரும்பு மூலகத்தைக் கொண்டதாக இருக்கிறது. பூமியின் காந்த சக்திக்கு இதுதான் காரணம்.
நிலவினால் ஆபத்து
  நிலவினால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். காரணம் நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் இதில் ஓரளவுக்கு மட்டுமே உண்மை இருக்கிறது. அதாவது நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழற்சி வேகம் குறையும் என்பது உண்மை. ஆனால், பூமியின் சுழற்சி வேகம் இரண்டு மில்லியன் விநாடிகள் (ஏறத்தாழ 20 லட்சம் வினாடிகள்) மட்டுமே குறையுமாம். அதுவும் நூறு வருடங்களுக்கு ஒருமுறை. எனவே, பயப்படத் தேவையில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அப்படியானால் இப்போது உள்ளதைவிட ஏற்கனவே அதிக வேகத்தில் பூமி சுற்றியிருக்கும் அல்லவா? அப்போது ஒருநாளைக்கு 18 மணி நேரம்மட்டும் தானாம். அதேபோல் ஒரு வருடத்திற்கு 481 நாட்கள் இருந்ததாம்.
பூமியின் வாயுமண்டலம்
  பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு வாயு மண்டலம் தான் காரணம். இதிலிருந்து தான் நாம் சுவாசிப்பதற்கான பிராணவாயு என்று சொல்லக்கூடிய ஆக்சிஜன் கிடைக்கிறது. வாயுமண்டலத்தில் அதிகமாக இருப்பது நைட்ரஜன் வாயுதான் 70 சதவீதத்திற்கு அதன் பங்கு இருக்ககிறது. ஆக்சிஜன் 21சதவீதமும், மற்ற வாயுக்கள் அனைத்தும் சேர்ந்து 2சதவீதமும் உள்ளன. காற்றின் அழுத்தமும், அடர்த்தியும் பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல குறைந்து கொண்டே வரும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில்
   பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 14 கோடியே 96 லட்சம் கிலோமீட்டர்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய தோராயமாக 8 நிமிடங்கள் ஆகிறதாம்.
பூமி எங்கே இருக்கிறது
   பூமி எங்கே இருக்கிறது என்று கேட்டால் நம் காலடில் இருக்கிறது என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆனல், சூரியக்குடும்பத்தில் பூமி எங்கு இருக்கிறது சூரியனில் இருந்து மூன்றவதாக பூமி இருக்கிறது. இதுமட்டும் தற்போது சனிக்கிரகம் இருக்கும் 6-வது இடத்தில் இருக்குமானால், சூரிய ஒளி கிடைக்காமல் பூமியில் உயிரினங்களே தோன்றி இருக்காது. அல்லது சூரியனிலிருந்து மிக அருகில் இருந்திருந்தால், கடும் வெப்பத்தின் காரணமாகவும் உயிர்கள் தோன்றியிருக்காது. நாம் எவ்வளவு பெரிய அதிசயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்ததா?

சோ.ஞானசேகர்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

Thursday, November 4, 2010

தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உலகத் தமிழ் வலைப்பதிவு நன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Saturday, October 30, 2010

புதிய விலங்கினங்கள்

புதிய விலங்கினங்கள்
  உலகில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத அறிய விலங்கினங்கள் இருக்கின்றது அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சில புதிய உயிரினங்கள் பசிப்பிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாப்புவா நியூகினியா தீவில் 200-க்கும் மேற்பட்ட புதிய தாவர, விலங்கினங்களை வி்ஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் வெள்ளை வால் எலி, நீண்ட மூக்கு கொண்ட தவளை போன்ற விந்தை உயிரினங்களும் அடக்கம்.
   இந்த பாலூட்டிகள், இருவாழ்விகள், பூச்சிகள், தாவரங்கள் இதுவரை உலகம் அறியாதவை.
   இதுபற்றி ஆய்வாளர் ஸ்டீவ் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, "இன்று, முற்றிலும் புதுவகையான பாலூட்டிகளைக் கண்டுபிடித்திருப்பது மிகவும் அதிசயமானது. மரம் ஏறும் கங்காரு போன்ற உயிரினங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் இதுமாதிரியான விந்தையான சின்னச்சின்ன உயிரினங்களைக் காணும்போது நமது ஆச்சரியம் கூடுகிறது" என்கிறார்.
  இன்று உலகில் எஞ்சியிருக்கும் இரண்டு செழுமையான மழைக் காடுகளான அமேசான் காங்கோ வடிநிலப்பகுதி ஆகியவற்றுக்கு இணையானது பாப்புவா நியூகினியா மழைக்காடு.
  "பல்லுயிரினங்களின் கிடங்காகத் திகழும் பாப்புவா நியூகினியாவில் எண்ணற்ற புதிய உயிரினங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்" ரிச்சர்ட்ஸ் குழுவினர்.
   இவர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய உயிரினங்களில் 'மிகவும் அழகான' வெளளை வால் எலி, இரண்டு சென்டி மீட்டர் அளவுக்கு நீளமான மூக்குக் கொண்ட தவளை, பளிச்சென்ற மஞ்சள் நிறப் புள்ளிகள் கொண்ட தவளை ஆகியவை குறிபிடத்தக்கவை. மேலும் பூச்சியினங்கள், சிலந்திகளில் மட்டும் தலா 100 புதிய வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
   தவளைகள், ஊர்வனவற்றில் நிபுணரான ரிச்சர்ட்ஸ் கூறுகையில், ''பாப்புவா நியூகினியாவில் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நீங்கள் சாதாரணமாக ஓர் உலா சென்றாலே ஒரு புதிய உயிரினத்தையோ, அதிகம் அறியப்படத அதிசயமான ஒன்றையோ காணலாம்'' என்கிறார்.
  பாப்புவா நியூகினியாவின் கரடு முரடான, மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக அங்கு அதிகமாக உயிரியல் ஆய்வாளர்கள் செல்லவில்லை. தற்போது புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்திருக்கும் ஆய்வாளர்கள், இன்னும் இங்கு பெரும்பாலன பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.


சோ.ஞானசேகர்...

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

Wednesday, October 13, 2010

பறவைகள்

   பறவைகள் தன் இருப்பை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும், தன் இணைப் பறவைக்குத் தெரிவித்து அவற்றை கவர்ந்திழுக்கவும் பறவைகள் ஏற்படுத்துகின்ற இனிய ஓசைதான் பறவைகளின் பாட்டு என்று வழங்கப்படுகிறது.தங்கள் தொண்டையில் இருகின்ற ஸைரின்க்ஸ் (syrinx) எனும் உறுப்பின் உதவியுடன்தான் பறவைகள் பாடுகின்றன.தனித்துவமான இந்த உறுப்பு பறவைகளுக்கு மட்டும்தான் உள்ளது.
   பறவைகள் சில சமயம் வித்தியாசமான குரல் எழுப்பும். உணவு வேண்டி பறவைக் குஞ்சுகள் கொடுக்கும் குரலும், அபாய எச்சரிக்கை செய்வதற்காக எழுப்புகின்ற குரலும் வழக்கமான குரலைவிட வித்தியாசமாக இருக்கும்.
  பறவைகளில் ஆண், பெண் வித்தியாசத்தை மிகப் பொதுவாகவும், வெளிப்படையாகவும் பார்க்கலாம். தன் வண்ணத்தோகையை விரித்து அழகாக நடனமாடுபவை ஆண் மயில்கள். பல நிறங்களுடைய இறகுகளும் கொண்டையுமுடைய சேவல்தான் பெட்டைக் கோழியைவிட அழகாக இருககிறது.
   பறவை முட்டைகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிலவகைப் பறவைகளின் முட்டைகள் வெண்ணிறமாகவோ, அல்லது இளம் நிறமுடையதாகவோ இருக்கும். புறாக்கள், ஆந்தைகள், மரம் கொத்திகள், மீன் கொத்திகள் ஆகியவற்றின் முட்டைகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இப்பறவைகள், பொந்துகளிலோ மரக் கிளைகளிலோ கூடு கட்டி முட்டையிடுகின்றன. எனவே எதிரிகளால் அவ்வளவு விரைவாக கூட்டில் உள்ள முட்டைகளைக் கவர்ந்துவிட முடியாது.
  எனவே, இப்பறவைகளின் முட்டைகளின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நிறம் அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லலாம். வேறு சில பறவைகளின் முட்டைகள் அடர்ந்த நிறமுடையதாகவோ,புள்ளிகளுடையதாகவோ இருக்கும்.இவ்வகையான முட்டைகள் தரையிலோ, திறந்த வெளிகளிலோ பொரிய வேண்டியவையாக இருக்கும். எனவேதான் இவை சுற்றுச்சூழலிருந்து எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடர்ந்த நிறங்களுடனோ, புள்ளிகளுடனோ இருக்கின்றன. எதிரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்குதான் இந்த ஏற்பாடு.
  விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலவகைப் பறவைகள் மட்டுமே முட்டைகளின்மீது அமர்ந்து அடைகாப்பதில்லை. கருவளர்கிற சமயத்தில் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் நோக்கில்தான் பறவைகள் தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கின்றன. ஆனால் சில இடங்களில் பறவைகள் அடைகாக்காமலேயே தங்கள் முட்டைகளின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கின்றன.
  ஆஸ்திரேலியா, நியூகினி தீவுகள் ஆகிய இடங்களில் உள்ள 'Scrub fowl' எனும் ஒருவகைப் பறவைகள் புற்களையும், இளைகளையும், சிறிய செடிகளையும், மண் துகள்களையும் ஒன்று சேர்த்து பதினைந்தடி உயரமும் முப்பத்தைந்தடி பரப்பளவும் உள்ள ஒரு வகையான குவியலை உருவாக்குகின்றன. சில சமயம் பல் பறவைகள் சேர்ந்து தங்களுக்கான ஒரே குவியலை உருவாக்கின்றன. பிறகு குவியலில் மூன்றடி நீளமுள்ள சிறு சுரங்கங்களை உருவாக்கி அதனுள் முட்டையிடுகின்றன. அந்த தாவரக் குவியலிலிருந்து கிடைக்கிற வெப்பத்தால் முட்டைகள் பொரிகின்றன. வேறொரு வகை பறவையான 'mallee fowl' இலைகளுக்குப் பதிலாக மண்ணைப் பயன்படுத்தி குவியல் அமைக்கின்றன.
  தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்காத சில பறவைகள் உள்ளன. மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டுவிட்டு அவை பறந்துவிடும். அந்தக்கூட்டில் வசிக்கும் பறவை அது தன் முட்டைதான் என்று தவறாகக் கருதிக்கொண்டு அந்த முட்டையையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். வெளிவந்த குஞ்சை தன் சொந்தக் குஞ்சுபோல வளர்க்கும். காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயில் (indian cucoo) இதற்கு ஒரு உதரணம்.
   தங்கள் இறகுகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கும், ஒரு அளவு வரை இறகுகளின் ஈரம் சேராதிருக்கவும் பறவைகள் தங்கள் இறகுகளைக் கோதிக்கொள்கின்றன. இப்படி இறகுகளைத் தூய்மையாக வைத்திருப்பதனால் அவற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இறகுகள் வளரத் தொடங்கும்போதே பறவைக் குஞ்சுகள் கோதிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. சிறுவயதில் இதற்காக நிறைய நேரம் செலவிடுகின்றன பறவைகள்.
   முதிர்ந்த பறவைகள் இந்தப் பழக்கத்தை கடைசிவரை தொடர்கின்றன. அவற்றின் உடலின் பின் முனையில் வாலுக்குச் சற்று மேலுள்ள எண்ணெய்ச் சுரப்பியிலிருந்து எண்ணெயை அலகால் கொத்தியெடுத்து இறகுகளில் தடவிக் கொள்கின்றன. இந்த எண்ணெய்ப் பிசுபிசுப்பு இறகுகளில் திடிரென்று நீர் சேராமலும், இறகுகளின் மென்மையையும் காக்கிறது. இறகுகளின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது.
   இறகுகளைக் கோதிக்கொள்வதுடன் இவை மண்ணில் புரளவோ அல்லது தண்ணீரில் குளிக்கவோ செய்கின்றன. வாத்துக்கள் தலையைத் தண்ணீரில் முக்குகின்றன. பிறகு சிறகு விரித்து உடம்பை உதரிக் கொள்கின்றன,
   முதுகைச் சொறிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றும் போது, நமக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறதல்லவா. அதைப் போல பரவைகளுக்கும் தங்கள் உடலில் அலகு எட்டாத இடத்தில் எண்ணெய்த் தேய்ப்பதற்கு இணைப் பறவையின் உதவியை நாடுகின்றன.

சோ.ஞானசேகர்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்

Wednesday, October 6, 2010

பூச்சிகளும், வண்டுகளும்

பூச்சிகளுக்கும் பெர்சனாலிட்டி உண்டு
   நமது கண்களுக்கு எல்லா பூச்சிகளும், வண்டுகளும் ஒரே மாதிரிதான் தெரிகின்றன. ஆனால் அவற்றுக்கும் தனித்தனியான ஆளுமை (பெர்சனாலிட்டி) உண்டு. நம்பமுடியவில்லை அல்லவா? ஆனால் விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறுகின்றனர்.
   சில பூச்சிகள் மணிதர்களைப் போலவே 'கூச்ச சுபாவம்' உள்ளவையாக இருக்கின்றன, சில பூச்சிகளோ அதிரடிப் பார்ட்டிகளாக இருக்கின்றன என்று டெப்ரிசென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  "உறுதி, தடாலடியாகச் செயல்படுவது, சுறுசுறுப்பு, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுவது போன்றவை பூச்சியினங்களில் கணக்கிடப்பட்ட பொதுவான ஆளுமைப் பண்புகள். இவை, ஒவ்வொரு பூச்சி, வண்சுகளுக்கும் வேறுபடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பூச்சி, கூச்சமானதா அல்லது துணிவானதா என்பதை, அவை அபாயகரமான சூழலில் எப்படி செயல்படுகின்றன அல்லது தங்களின் இருப்பிடங்களில் இருந்து எவ்வளவு நேரத்தல் வெளியே வருகின்றன என்பதை கொண்டு அறியலாம்" என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரன எனிககோ கையரிஸ்.
   இந்த ஆய்வின்போது, ஒரு குறிப்பிட்ட பூச்சியின் வசிப்பிடத்தின் அருகே சில பொருட்களை விஞ்ஞானிகள் வைத்தர்கள். அப்போது எவ்வளவு வேகமாகப் பூச்சகள் அந்தப் பொருட்களை அடைகின்றன, ஆராய்கின்றன, எந்த வேகத்தில் அவை நகர்கின்றன என்று கவனமாகக் கண்கணித்தார்கள். அந்த ஆய்வில், ஒவ்வொரு பூச்சியும் ஒவ்வொரு விதமாக நடநது கொண்டது. ஒரு பூச்சி தயக்கம் கொண்டது அல்லது துணிச்சலானது என்று கண்டபிடிக்கப்பட்டல், அது எல்லா சூழ்நிலைகளிலும் அப்படியே நடந்து கொண்டது.
  'கிரிக்கெட்' பூச்சிகளில் ஆதிக்கம் செலத்தும், தலைவர்களைப் போல நடந்துகொள்ளும் ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகளை எளிதில் கவர்ந்து விடுவது தெரிய வந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

படித்தது...

சோ.ஞானசேகர்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

Tuesday, October 5, 2010

கரையான் புற்றுகள்

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்
   கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
   கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.
   கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைநத தாவரவியல், நில அமைபபு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
  கரையான்கள் அதிக ஈரபபதமாகவும், அதிக உலர்வாகவம் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி சவான்னா நிலபபகுதியில் சீப்லைன்ஸ் எனப்படும் சரிவுகளில் கரயான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.
  கரயான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மணணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுடடிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியன தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எலலாம் புற்றுகள் மூலமே அறியமுடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

படத்தது..

சோ.ஞானசேகர்.

சுற்றுச்சூழலைப் பதுகாப்போம்.


Tuesday, September 14, 2010

இளநீர்

இளநீரால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பலன்கள்.

     இயற்கையன்னை நமக்கு கொடுத்த சிறந்த குடி நீர் இளநீர். இது நமக்கு இயற்க்கையின் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். இளநீரை சுவைக்காக உபயோகப்படுத்தும் பானம் என்று சொல்லமுடியாது. உலகில் சிறந்த இயற்கை மூலிகை பானமாக கூறப்படுகிறது.
இளநீரின் பலன்களைப்பற்றி சில குறிப்புகள்.
     இளரநீர் நம் உடலை குளுமையாகவும், சரியான தட்பவெப்ப நிலையிலும் வைக்கிறது. இளரநீர் ஒரு நோய் தடுப்பாற்றல் பானமாகும் இளநீரில் "மோனோலாரின்" என்னும் நோய் தடுக்கும் மருந்து உள்ளது. இதனால் நோய்தடுக்கும்சக்தி இதை குடித்தவுடன் நம் உடலில் பரவுகிறது. மேலும் ஒரு செல் உயிரினங்களினால் ஏற்படும் நோய்கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
    மேலும் கொடுமையான நோயாகிய ஹெச்ஐவி, ப்ளு போன்ற நோய்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி இளநீரில் உள்ளது. சிறு நீரகத்தில் ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்து இளநீர் நம்மை பாதுகாக்கிறது. சிறு நீரகத்தில் உண்டாகும் கற்களை கரைப்பதற்கு இது சிறந்த மருந்து.
  குழந்தை பருவத்தில் அதாவது 1முதல் 3வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான வயிறு சம்பந்தப்பட்ட நோய், புழுக்கள் பரவுதல் ஆகியவற்றைத் தடுக்கிறது. சிறு நீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை உட்கொள்வதால் சிறந்த பயன் அடையலாம்.மலேரியா, டைபாய்டு, வாந்தி போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
உடம்பு எடை அதிகாமா உள்ளவர்கள் இளநீரை உட்கொள்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இளநீரில் ஆக்கசக்கிகள் அதிகம்க உள்ளது.

இளநீரில் உள்ள வேதிப் பொருட்களின் அளவு
மொத்த திடப்பொருள் கி  % 6.5
குளுக்கோஸ், பிராக்டோஸ் மி.கி % 4.4
தாதுப்பொருட்கள் மி.கி  % 0.6
புரதச்சத்து  மி.கி % 0.01
கொழுப்புச்சத்து மி.கி % 0.01
அமிலத்தன்மை மி.கி 4.5
பொட்டாசியம் மி.கி % 290.0
சோடியம் மி.கி % 42.0
கால்சியம் மி.கி % 44.0
மக்னீசியம் மி.கி % 10.0
பாஸ்பரஸ் மி.கி % 9.2
இரும்புச்சத்து மி.கி % 106.0
காப்பர் மி.கி % 26.0

100 கிராம் இளநீரில் கொடுக்கும் கலோரி
அளவு 17.4
இளநீரின் இயல்புகள்
· இனிப்புச் சுவை நிறைந்தது.
· குளுமை தரக்கூடியது.
· எளிதில் ஜீரணமாகக்கூடியது.
· பித்த வாதத்தை குணப்படுத்தும் தன்மையுடையது.
· பசியைத் தூண்டக்கூடியது
· நீர்ப்பெருக்கியாக செயல்படக்கூடியது.
· புத்துணர்வு தரக்கூடியது.
· உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.
· உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறையைப் போக்கும் தன்மை கொண்டது

இவ்வளவு பயன் உள்ள இளநீரை உட்கொண்டு நோயற்றவாழ்வு வாழ்வோமாக!

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.

படித்ததை பகிர்கிறேன்.

சோ.ஞானசேகர்..



Monday, September 13, 2010

காட்விட் பறவை.

உணவில்லாமல் 11 ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் பறவை

      ஓய்வே எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தலை கிறுகிறுத்துவிடும். ஆனால் அந்தச் 'சாதனையைப்' புரிகிறது, 'காட்விட்' என்ற பறவை, தொடர்ந்து எட்டு நாள் பறக்கும் இப்பறவை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.
  ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு இந்த எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட்.
  இந்தப் பறவையானது இடைவிடாது தொடர்ந்து பறக்கிறது. ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது.
  ஸ்வீடனின்லண்ட் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழலியல் பேராசிரியர் ஆண்டர்ஸ் ஹெடன்ஸ்ட்ராம், எப்படி இந்தப் பறவை இனத்தால் இவ்வளவு தூரம் இடைவிடாமல் பறக்க முடிகிறது என்று வியந்தார், அதுகுறித்து ஆராய்ந்தார்.
  தொடர்ச்சியாக நீண்ட துரத்துக்குப் பறப்பதில், மனிதனால் உருவாக்கப்பட்ட விமானங்களை விட மிகச் சிறந்தது இந்தப் பறவை என்கிறார் ஆண்டர்ஸ்.
    தொடர்ந்து நீண்ட தூரம் பறந்த விமானத்துக்கான சாதனைக்குரிய கின்டிக் ஸெபர். அது ஓர் ஆளில்லாத சூரியசக்கி விமானம். அது தொடர்ந்து 82 மணி நேரம் காற்றில் பறக்கும். அதவது தொடர்ந்து மூன்றரை நாட்களுக்குப் பறந்து கொண்டே இருக்கும். ஆனால் காட்விக் பறப்பதோ தொடர்ச்சியாக எட்டு நாளைக்கு.
  ஆனால் இந்தப் பறவையை இடைநிற்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க வைப்பது எது? எப்படி 8 முழு நாட்களும் இவை உறக்கம் உணவின்றிச் சமாளிக்கின்றன?
    அதற்கான ஒரு விளக்கம், மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன என்பது. இப்பறவைகள் தாம் பறக்கும் ஒவ்வெரு மணி நேரத்துக்கும் ஒரு முறை தனது உடல் எடையில் 0.41 சதவீத அளவை உணவாகக் கிரகித்துக் கொள்கின்றன என்கிறார் ஆன்டர்ஸ்.
   "மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவான அளவு" என்று விளக்குகிறார் ஆண்டர்ஸ். இது தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முழுப் பயணத்துக்கும் சக்தியை எடுத்துச் செல்லும் வகையில் பறவையின் உடல் எடையும் அளவும் சரியான விகிதத்தில் இருப்பது முக்கியாமான ஒன்று.
  'காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் 'ஏரோடைனமிக்' உடல் அமைப்பும் உதவுகிறது என்று தெரியவந்திருகிறது.
  மற்று ஒருபறவை ஆராய்ச்சியாளராகிய ராபர்ட், "காட்விட்ச்' பறவையின் உடலில், "சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்'களை அமைத்தார். அந்த, "டிரான்ஸ் மிட்டர்' ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை, ஒன்பது நாட் களில் 11 ஆயிரம் கி.மீ., பறந்தது. "இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை' என, ராபர்ட் தெரிவித்துள்ளார்.

படித்தது..

சோ.ஞானசேகர்..

Wednesday, September 8, 2010

தேனீக்கள் குறைவதால் உணவு உற்பத்தி பாதிப்பு


  தேனீக்கள் குறைந்து வருவதால் செடிகளில் மகரந்த சேர்க்கையும் குறைந்து உலக அளவில் இது உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை எற்படுத்தும் என்று கனடாவை சேர்ந்த விஞ்ஞானி வருத்தம் தெரிவித்துள்ளார். கனடாவில்டோரண்டோ பல்கலை ஆராய்ச்சியாளர் ஜெம்ஸ் தாமஸ். இவர் கொலராடோவின் பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக தேனீகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இவரது ஆராய்ச்சியில், பிரிட்டனில் தேனீக்கள் பெரிய அளவில் குறைந்து செடிகளில் மகரந்தசேர்க்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இது பெரிய அளவில் உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை எற்படுத்தும். பிரிட்டனில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது. மற்ற நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

  பிரிட்டனில் தான் தேனீக்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. பட்டாம்பூச்சி மற்றும் சில பூச்சிகள் இருப்பிட பற்றாக்குறை, சீதோஷண மாற்றம் போன்ற காரணங்களால் குறைந்து வருகின்றன என்று தெதிவித்துள்ளார்.

நன்றி தினகரன்..

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.


சோ.ஞானசேகர்.

Saturday, September 4, 2010

இயறக்கை நமக்கு என்ன தருகிறது?

    இயற்கைதான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், பூமி தோன்றியது முதல் தாய் போல அனைத்து உயிரினங்களையும் காலங்காலமாக சந்தோஷமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பொழுதைக் கழிப்பதற்ககு பணம் சேர்ப்பதற்கு இற்கைதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

   காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், கடற்கரையோர கழிமுகப் பகுதிகள், மீன்வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள் உள்பட இற்கையின் பல்வேறு அம்சங்கள், நாம் உயிர் வாழத்தேவையான காற்று, நீர், உயிர்சத்து, ஊட்டச்சத்து போன்ற வற்றை உற்பத்தி செய்து வருகின்றன. நம்மிடம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாரமல் இவ்வளவையும் செய்து கொண்டிருகின்றன. இவை அனைத்தின் உற்பத்தியும் அதிவேகமாகக் குறைந்து வருவதைப் பற்றித்தான் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

  உலகிலுள்ள 650 கோடி பேரும் இயற்கையைச் சார்ந்தே வாழ்க்கை நடத்தினாலும் அதிலிருந்து நாம் வெகுதுரம் விலகி வந்துவிட்டோம். இற்கை வளங்களின்றி நம்மால் வாழ முடியாது என்பதை இந்த நிலையிலும் உணர மறுக்கிறோமா? ''இற்கை இன்றி நம்மால் வாழ முடியுமா?'' இந்தக் கேள்வியை மீண்டும் ஒரு முறை நமக்குள்ளேயே சிந்தித்துப் பார்ப்போம்.இயற்கையைப் பாதுகாப்போம்.

இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.


நன்றி தினமணி, சிறுவர்மணி.

சோ.ஞானசேகர்.

Friday, August 6, 2010


கேள்விக்குறி
  "?' - இந்தக் கேள்விக்குறி, புராதன கிரேக்க-லத்தீன் மொழிகளிலிருந்து வந்தது. தொடக்க காலத்தில் நிறுத்தற் குறிகள் (Punctuation), வாசகங்களின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்வதற்காக பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் உரக்க வாசிப்பதுதான் வழக்கமாக இருந்தது. வாசிக்கும்போது, வாக்கியத்தின் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது எப்படி, தற்காலிகமாக எங்கே இடைநிறுத்தி மூச்சுவிட்டுக் கொள்ள வேண்டும் போன்றவற்றை குறிப்பிடத்தான் நிறுத்தற் குறிகள் பயன்படுத்தப்பட்டன.

  லத்தீன் மொழியில் ஒரு வாக்கியத்தின் முடிவில் கேள்வியைக் குறிப்பிடுவதற்காக "கொஸ்டியோ' (Questio)  என்று எழுதுவார்கள். அச்சு இயந்திரங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, புத்தகங்களை கையால் பிரதி எடுப்பதுதான் வழக்கமாக இருந்தது. எழுதும் வேலையைக் குறைப்பதற்காக பல வார்த்தைகளுக்கு சுருக்கெழுத்துகளை ஏற்படுத்தினார்கள். அப்படி Questio என்பது முதலில் Qo என்றானது. ஆனால் இது மற்ற சில சுருக்கெழுத்துகளுடன் சேர்த்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு இருந்ததால்  O வின் மேலே Q என்றெழுதத் தொடங்கினார்கள். விரைவிலேயே Q வரையப்பட்டதைப் போன்ற ஒரு அடையாளம் ஏற்பட்டது. அதன் கீழுள்ள O ஒரு புள்ளியாக மாறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் கிரிகோரியன் ஸ்துதி கீதங்கள் பாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட நிறுத்தற் குறிகளில் இன்றைய கேள்விக் குறியும் இருந்தது. ஆனால், அது சற்று வலது பக்கம் சரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, அது அன்றைய முற்றுப் புள்ளியைக் குறித்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சிடுவது தொடங்கப்பட்டதோடு முற்றுப்புள்ளி, ஆச்சரியக்குறி போன்ற நிறுத்தற் குறிகளைத் தொகுக்க வேண்டி வந்தது. 1566-இல் ஆல்டொமனுஸியோ என்பவர் முதலாவது நிறுத்தற் குறி நூலைப் பிரசுரித்தார். அதில் இன்றைய கேள்விக்குறி இருந்தது.


சோ.ஞானசேகர்.







Monday, August 2, 2010

தேனீ
      தேனீ அதன் மூக்காலோ,​​ வாயாலோதான் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.​ அது உண்மையில்லை.​ தேனீயிடமிருந்து வரும் ரீங்கார ஓசை, அதன் இறகுகளின் மிக விரைவான துடிப்பால்தான் ஏற்படுகிறது.​ அப்படி இறகுகள் துடிப்பதன் மூலம்தான் தேனீ பறக்கிறது.​ அதன் இறகுகள் நொடிக்கு நானூறு முறை துடிக்கின்றன.​ அதிவிரைவான இந்த அசைவு காற்றில் உண்டாக்குகிற அதிர்வு நம் காதை அடையும் போது நாம் அதை ரீங்காரமாக உணர்கிறோம்.
     சமூக வாழ்க்கை நடத்தும் தேனீக்களின் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீதான் இருக்கும்.​ அந்தக் கூட்டில் அதுதான் சர்வாதிகாரி.​ கூட்டில் இன்னும் இரண்டு வகை தேனீக்களும் இருக்கும்.​ கூட்டை நிலைக்கச் செய்வதற்காகப் பாடுபடும் பெண் தேனீக்கள் ஒரு வகை.​ இவை இனப்பெருக்க திறனற்றவை.​ இன்னொரு வகை தேனீக்கள்,​​ சோம்பேறியான ஆண் தேனீக்கள்.
       ராணித் தேனீ,​​ மற்ற தேனீக்களைவிட உருவத்தில் பெரியதாக இருக்கும்.​ வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான் தேனும்,​​ மகரந்தப் பொடியும் சேகரிக்கும்.​ மெழுகால் கூடு கட்டுவது,​​ கூட்டைச் சுத்தப்படுத்துவது,​​ குஞ்சுத் தேனீக்களுக்கும்,​​ ராணித் தேனீக்கும் உணவு கொடுப்பது முதலான பல வேலைகளையும் பெண் தேனீக்கள்தான் செய்கின்றன.​ ​
   வேலைக்காரத் தேனீக்கள் சேகரித்து வைத்த தேனைக் குடிக்கின்ற வேலையைத்தான் சோம்பேறிகளான ஆண் தேனீக்கள் செய்யும்.​ ஆண் தேனீக்களின் உடல் அமைப்பும்,​ தேனோ மகரந்தமோ சேகரிப்பதற்கு ஏற்ற விதத்தில் இருக்காது.​ இவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.​ இவை குறிப்பிட்ட காலங்களில் ராணித் தேனீயுடன் இணை சேர்கின்றன.​ தேனீக்களின் சமூக வாழ்க்கை நிலைப்பதற்கு ஆண் தேனீக்கள் மிகவும் அவசியம்.​ ராணித் தேனீக்கள் கூட்டின் அதிபதிகள் என்பதில் சந்தேகம் இல்லை.​ ஆனால் இவை அத்தனை வேலைக்காரத் தேனீக்களையும் சார்ந்து வாழ்கின்ற "முட்டையிடும் இயந்திரங்கள்" மட்டுமே.
   ராணித் தேனீக்களின் மூளை,​ வேலைக்காரத் தேனீக்களின் மூளையைவிட சிறியதாக இருக்கும்.​ ஆனால்,​​ ராணித் தேனீ மட்டும்தான் முட்டையிடும் திறன் பெற்றிருக்கிறது.​ கூட்டில் ஒன்றிற்கும் அதிகமான ராணிகள் இருப்பதற்கு,​​ ஏற்கனவே கூட்டில் இருக்கும் ராணி அனுமதிப்பதில்லை.​ ராணித்தேனீ முட்டையிடும்.​ முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ராணியாக வேண்டுமா அல்லது வேலைக்காரர்கள் ஆகவேண்டுமா என்று முடிவு செய்வது வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான்.
      வேலைக்காரத் தேனீக்கள் குறிப்பிட்ட காலங்களில் சில முட்டைகளை கூட்டின் கீழ் முனையில் அமைத்திருக்கிற "ராணியறை'களுக்கு மாற்றுகின்றன.​ ஒவ்வொரு தேன் கூட்டிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் ராணியறைகள் இருக்கும்.​ ஆனால் அவை மற்ற அறைகளைவிட மிகப் பெரிதாக இருக்கும்.​ ராணியறைகளில் பிறக்கின்ற குஞ்சுகளுக்கு வேலைக்காரத் தேனீக்கள் பிரத்தியேகமான உணவை ஊட்டுகின்றன.​ இங்கே வளர்ந்து வருகிற பெண் தேனீக்கள்தான் எதிர்காலத்தில் ராணித் தேனீக்களாக இருக்கும்.​ ராணித் தேனீக்களின் பிரத்தியேகத் தன்மைகளுக்கு முக்கியக் காரணம்,​​ அவற்றின் உணவு முறையில் உள்ள மாற்றம்தான்.
     புதிய ராணி வெளியே வரும்போது,​​ ஏற்கனவே இருக்கும் ராணி கூட்டமான வேலைக்காரத் தேனீக்களுடன் இடத்தை விட்டுச் சென்றிருக்கும்.​ அவை வேறொரு இடத்தில் புதிய கூடமைத்து வாழத் தொடங்குகின்றன.​ சில சமயம் அறைகளின் மேல் படலத்தைத் திறந்து வெளிவரும் புதிய ராணிகள் இதுபோன்று வேலைக்காரத் தேனீக்களுடன் இடம் விட்டுச் செல்கின்றன.​ ஒன்றிற்கு மேற்பட்ட ராணிகள் ஒரே நேரத்தில் வெளியே வரும்போது,​​ அவர்களுக்கிடையே மிகக் கடுமையான சண்டை நடக்கும்.​ ஒரு ராணி மட்டுமே மிஞ்சும்வரை இந்தப் பலப்பரீட்சை தொடரும்.​ புதிதாக வெளியே வந்த ராணிக்கும்,​​ கூட்டில் ஏற்கனவே இருந்துகொண்டிருந்த ராணிக்கும் இடையே யாராவது ஒருவர் வெற்றி பெறுவதுவரை போட்டி நடக்கிறது.​ அதனால் ஒரு தேன் கூட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட ராணிகள் இருக்கும் நிலை ஏற்படுவதில்லை.
   தேனீக்கள் நிறைய தேன் உள்ள பூக்களுடைய ஒரு இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, திரும்பி வந்து அந்தச் செய்தியை மற்ற தேனீக்களிடம் தெரிவிக்கின்றன.​ இத்தகைய கருத்துப் பரிமாற்றத்திற்காக,​​ அவை குறிப்பிட்ட விதமான நடன முறையைக் கையாள்கின்றன.​ ஒன்று,​​ வட்டத்திற்குள் வட்டமாகப் பறப்பது.​ இந்த நடன முறைக்கு,​​ தேனுள்ள இடம் கூட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ளது என்று அர்த்தம்.​ இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் நடனத்தை ஆடிக்கொண்டே அந்தத் தேனீக்கள்,​​ தான் சேகரித்த உணவை கூட்டினுள்ளே இருக்கும் மற்ற தேனீக்களுக்குக் கொடுக்கும்.​ இதன்மூலம்,​​ நூறு மீட்டர் தொலைவில் அது கண்டுபிடித்த உணவின் சுவையையும்,​​ மணத்தையும் மற்ற தேனீக்கள் புரிந்துகொள்ளும்.​ உடனே அனைத்துத் தேனீக்களும் நாற்புறமும் பறந்து அந்த பூக்களைத் தேடிப் போகும்.​ இந்த "வட்ட நடன'த்திலிருந்து,​​ நூறு மீட்டர் தொலைவில் பூக்கள் இருக்கின்றன என்று அறிந்துகொள்ளலாமே தவிர,​​ பூக்கள் இருக்கும் சரியான இடத்தை ​ புரிந்துகொள்ள முடியாது.​ அதனால்தான் அவை குறிப்பிட்ட இலக்கு நோக்கிச் செல்லாமல் நாற்புறமும் பறந்து தேடப் போகின்றன.
   தேனுடைய பூக்கள் இருக்கும் இடத்தைச் சரியாகத் தெரிவிக்கும் நடனமுறை ஒன்றும் தேனீக்களிடம் உண்டு.​ இந்த முறைக்கு "வேகல்' (waggle)​​ நடனம் என்று பெயர்.​ முதலில் தேனீ நேர்க் கோடாக பலமாக நடுங்கிச் செல்லும்.​ சற்று மேலாகச் சென்ற பிறகு ஒரு புறமாகத் திரும்பி கீழே வந்து மீண்டும் முதலாவது நேர்க்கோடு வழியே மேலே செல்கிறது.​ பிறகு முதலில் திரும்பியதற்கு எதிர்த்திசையில் திரும்பி ​ கீழே வந்து மீண்டும் நேர்க்கோட்டில் திரும்பி மேலே செல்கிறது .​ நடனமாடும் தேனீ,​​ இந்த நடனத்தின் மூலமாக மற்ற தேனீக்களுக்கு இரண்டு விஷயங்களைத் துல்லியமாக அறிவிக்கிறது.​ ஒன்று,​​ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவு கிடைக்கும் இடம்,​​ கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்ற விஷயம்.​ இரண்டு,​​ சூரியனையும்,​​ கூட்டையும் தொடர்புபடுத்துகிற நேர்க்கோட்டிலிருந்து எத்திசையில் எவ்வளவு சரிவான கோணத்தில் அந்த இடம் அமைந்திருக்கிறது என்பது.
நடனத்தின் வேகத்திலிருந்தும்,​​ அதே நடனத்தை திரும்பத்திரும்பச் செய்வதிலிருந்தும் உணவு இருக்கும் இடம் எத்தனை தொலைவில் இருக்கிறது என்று மற்ற தேனீக்களுக்குத் தெரிந்துவிடும்.​ அது மட்டுமல்ல,​​ போகவேண்டிய இடம் கூட்டிலிருந்து சூரியனுக்கு நேராக இருக்கிறதா?​ அல்லது எதிர்திசையில் இருக்கிறதா?​ பக்கவாட்டில் இருக்கிறதா என்பதுபோன்ற விவரங்களும் சரியாகப் புரிந்துவிடும்.​ நடனம் அதிக நேரம் நீடித்தால் உணவு மிக நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.
   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கால்வோன்ப்ரிஷ் எனும் உயிரியல் விஞ்ஞானிதான் ஆய்வு செய்து,​​ தேனீக்களின் இந்த செய்திப் பரிமாற்றத்தைக் கண்டுபிடித்தார்.​ ​ ​ ​
  தேனீக்களின்,​​ அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவருகிற லார்வாக்களின் முக்கிய உணவு தேன்தான்.​ பூவிலுள்ள தேனும்,​​ தேன் கூட்டிலுள்ள தேனும் வித்தியாசமானவை.​ தேனீ,​​ பூவிலிருந்து தேனெடுத்த பிறகு அந்தத் தேன் நேராக,தேனீயின் வயிற்றிலுள்ள இரண்டு அறைகளில் முதலாம் அறைக்குச் செல்லும்.​ ஒரு சிறிய "வால்வி 'ன் செயல்பாட்டினால் இந்தத் தேன் இரண்டாவது அறைக்குக் கடப்பதில்லை.​ பூவிலிருந்து சேகரித்த தேனுடன் கூட்டை அடைகிற தேனீ,​​ இந்தத் தேனை கூட்டில் உள்ள சில பிரத்தியேக தேனீக்களுக்குக் கொடுக்கிறது.​ அவை ஒன்றுக் கொன்று இந்தத் தேனை "கை'மாற்றிக் கொள்கின்றன.​ இந்த செயல்களுக்கிடையில் அதில் சில நொதிகள் (enzyme)​ சேரும்.
  அதன்பிறகு இந்தத் தேன்,​​ கூட்டின் பிரத்தியேக அறைகளில் பாதுகாக்கப்படுகிறது.​ சில பிரத்தியேக தேனீக்கள்,​​ அவற்றின் சிறகுகளை விசிறியாகப் பயன்படுத்தி தேனில் உள்ள நீர்மையின் அளவைக் குறைக்கின்றன.​ இப்போது தேன் கூட்டில் தேன் தயாராகிறது.​ ஒரு சாதாரண தேன் கூட்டில் 45 கிலோகிராம் வரை தேன் சேகரிக்கலாம்.​ ஒரு கிலோகிராம் தேனுண்டாக்க ஒரு தேனீ ஒரு கோடி பூக்களிலிருந்து தேன் சேகரிக்கவேண்டும்.​ ஒரு பயணத்தில் ஒரு தேனீ 600 பூக்களைச் சந்திக்கும்.​ பூக்களிலிருந்து மட்டுமல்ல,​​ தேன் உண்கிற சில உயிரினங்களின் எச்சங்களிலிருந்தும் தேனீ தேன் சேகரிப்பதுண்டு.​ தேனீக்களுக்கு தேன்தான் முக்கியமான உணவு.​ எனவேதான் அவை தேன் சேகரித்து கூட்டில் பாதுகாக்கின்றன

நன்றி - தினமணி....

சோ.ஞானசேகர்.

Saturday, July 24, 2010

சப்தங்கள்


          பெரிய ஓசைகள் மனிதர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. ஓசை ஒரு அளவு வரை ஆரோக்கியகரமாகும். குறைந்த அளவுடைய ஓசை, கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், செயல்படுவதற்கும் தடையாக இருக்காது. அமைதியான சூழ்நிலையைவிட தாலாட்டுப் பாடல்தான் குழந்தையைத் தூங்கவைக்க உதவுகிறது. நகரச் சாலைகளிலிருந்து வரும் பேரோசைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. வாகனங்களும், சைரன்களும், கட்டடம் கட்டும்போது வரும் ஓசைகளும், பலவிதமான மணியோசைகளும், ஒலிபெருக்கிச் சப்தங்களும் ஓலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. நகரத்தில் வசிப்பவர்கள் வழக்கமாக இதுபோன்ற சப்தங்களைக் கேட்டுவருவதால், இது அவர்களுக்குப் பழகிப் போயிருக்கும். தொந்தரவாக இருக்காது. ஆயினும் இது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் ஆபத்தானது.

   டெசிபல் எனும் வார்த்தை ஒலியின் அளவைக் குறிக்கிறது. 90 டெசிபலுக்கு அதிகமான சப்தம் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 95 டெசிபலுக்கு அதிகமான ஓசையை வருடக் கணக்காகக் கேட்டுவரும் பட்சத்தில் காதுகள் செவிடாகிவிடும். தொடர்ச்சியான சப்தம் உறக்கத்தைத் தடை செய்கிறது. 130 டெசிபலுக்கு அதிகமான ஓசை, காதுகளுக்கு வலி தருகிறது. மனஅமைதியைக் குலைக்கிறது. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட சப்தங்களை ஏற்படுத்தாதபடி சட்டத்தின் மூலம் தடை செய்திருக்கிறார்கள்.

இலைகள் சலசலக்கும் ஓசை - 10 டெசிபல்

ரகசியம் பேசும் குரல் - 20 டெசிபல்

மெதுவான உரையாடல் - 40 டெசிபல்

கூட்டமான ஒரு கடையில் உள்ள ஓசை - 60 டெசிபல்

நகரத் தெருக்களின் சப்தம் - 70 டெசிபல்

தொழிற்சாலையின் ஓசை -100 டெசிபல்

ஒலி பெருக்கிச் சப்தம் - 110 டெசிபல்

விமானத்தின் ஓசை -120 டெசிபல்


படித்தது.


சோ.ஞானசேகர்.

Monday, July 19, 2010

அதிகாலைக் குரல்

     அதிகாலையில் பறவைகள் குரலெழுப்புவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, பெரும்பாலும் எல்லா உயிரினங்களிலும் உள்ளிலுள்ள உயிரியல் கடிகார இயக்கம். இரண்டு, உணவு. மூன்று, தம் எல்லையில் அதிகாரத்தை நிலைநாட்டுவது. THE EARLY BIRD CATCHES THE WORM (அதிகாலையில் எழுகின்ற பறவை இரை பிடிக்கும்) எனும் ஆங்கிலப் பழமொழி, பறவைகளின் காலை நேரக் கூச்சல்களை விளங்குகிறது. அதிகாலையில் பறவைகள் இரை தேடுவதற்கான பரபரப்பில் இருக்கும். ஆயினும் குறைவான வெப்ப நிலையும், மங்கிய வெளிச்சமும் அதிகாலையில் இரை தேடுவதற்குத் தடையாக இருக்கின்றன. இரை குறைகின்ற காலகட்டங்களில்தான் பறவைகள் மிக உரக்கக் கத்துகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

÷காலையில் எழுந்தவுடன் பறவைகள் அலைந்து திரியும். உணவு கிடைக்கும் வாய்ப்புடைய இடங்களைக் கண்டுபிடித்து, அந்த இடத்தின் மீது தங்கள் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கும். அப்படியான இடங்களுக்கு மற்ற பறவைகள் வந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் அவை ஓசை எழுப்புகின்றன. பறவைக் குழுவிலிருக்கும் வலிமையான ஆண் பறவைதான் அதிக உரத்த குரலில் கூவும், அல்லது பாடும். தான்தான் இந்தப் பறவைகளின் தலைவன் என்று அறிவிப்பதற்காகத்தான் அது இவ்வாறு செய்யும். தட்டிக் கேட்பதற்கு ஒரு தலைவர் அந்த இடத்தில் உண்டென்று அறிந்தால் மற்ற பறவைகள் அங்கே அவ்வளவு சுலபமாக வந்துவிடுவதில்லை. இது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்திருக்கிறது. பறவைக் கூட்டத்தின் தலைவரை கூட்டத்திலிருந்து விலக்கி அங்கே ஒரு ஒலி பெருக்கி வைக்கப்பட்டது. அதன் வழியே தலைவரின் குரல் ஒலிபரப்பப்பட்டது. அந்த இடத்திற்கு வர முற்பட்ட பல பறவைகளும் அந்தக் குரலைக் கேட்டு திரும்பிப் போய்விட்டன. ஆனால் அதிக எதிர்ப்புத் தன்மை கொண்ட சில பறவைகள், ஒலி பெருக்கியைத் தாக்க முற்பட்டன. ஒலி பெருக்கி வைக்காத இடங்களில், மற்ற பறவைகள் நிறைய வந்து சேர்ந்தன.

÷இதைப்போன்று, சூரியன் உதிக்கும்போது சேவல் கூவுவதற்கும் மூன்று காரணங்கள் உள்ளன. சேவலின் உயிரியல் கடிகாரம், உணவு தேடுவதற்கான ஆயத்தம், தன் அதிகார எல்லையை மற்றவர்களுக்கு அறிவிப்பது ஆகியவையே அவை.

படித்தது..

சோ.ஞானசேகர்.

Saturday, July 17, 2010

பறவைகள் தக்க சூழ்நிலையைத் தேடி இடம் பெயர்தல்.


      பறவைகளும் விலங்குகளும், தக்க சூழ்நிலையைத் தேடி இடம் பெயர்ந்து செல்வது "வலசை' போவது எனப்படும். பறவை உலகின் பல அற்புதமான சம்பவங்களில் ஒன்று இது. வலசைப் பறவைகளின் பயணங்கள் ராணுவ ஒழுங்குடன் துல்லியமாக நடைபெறும். ஏறக் குறைய, தெற்குத் திசையை நோக்கியும் வடக்குத் திசையை நோக்கியும்தான் இவை பயணம் செய்யும். பூமத்திய ரேகைக்கு வடக்கிலுள்ள பல இனத்தைச் சேர்ந்த நிறைய பறவைகள் குளிரின் கடுமையிலிருந்து தப்புவதற்காக தெற்கு நோக்கிப் பயணம் செய்கின்றன. ஏறத்தாழ ஆறு மாத காலம் அங்கே தங்கிய பிறகு அவை தங்கள் பழைய இடத்திற்கே திரும்பிச் செல்கின்றன.

வலசைப் பறவைகளில் மிகவும் திறமையானது ஆர்ட்டிக் டெர்ன் என்ற பறவைதான். வட துருவத்திற்குச் சுற்றிலுமுள்ள இடங்களில் இனப் பெருக்கம் செய்த பிறகு இவை தெற்கு நோக்கிப் புறப்பட்டு, ஏறத்தாழ 18,000 கிலோ மீட்டர் தூரம் பறந்து தென் துருவப் பிரதேசங்களை அடைகின்றன. ஒரு மீட்டரின் மூன்றில் ஒரு பங்கு நீளம்தான் இருக்கும் இந்தப் பறவை. இவ்வளவு தொலைவு பயணம் செய்கிற பறவைகள் குறைவு. ஆயினும் 3,000 அல்லது 4,000 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து வருகின்ற பறவைகள் இருக்கின்றன. இது போன்ற பறவைகளை குளிர் காலத்தில் நம் நாட்டிலும் பார்க்கலாம்.

உயரமான மலைகளில் வசிக்கின்ற பல வகையான பறவைகள், வடக்கு தெற்காக பயணம் செய்வதற்குப் பதிலாக, உயரத்திலிருந்து கீழ்ப் பகுதிக்கு வருகின்றன. குளிர் காலம் முடிந்ததும் மீண்டும் உயரத்திற்குச் சென்றுவிடுகின்றன.

வலசைப் பறவைகள் , வழி தவறாமல் பெரிய மலைகளையும் கடல்களையும் கடந்து, எல்லா வருடமும் வருகிற அதே இடத்தைச் சரியாக அடைகின்றன. பறவைகளால் இது எப்படி முடிகிறது என்பதை இப்போதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. சூரியனின் நிலையையும், இரவு நேரங்களில் நட்சத்திரங்களின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டுதான் அவை பயணம்போகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற நீண்ட பயணம் போவதற்கான சக்தி பறவையின் மூளையில் எங்கே, எப்படி ஒளிந்திருக்கிறது என்று இப்போதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாக, நாளின் நீளத்திலுள்ள வித்தியாசமும் - இனப் பெருக்கத்தோடு தொடர்புடைய உள் உணர்வும்தான் பறவைகளை வலசை போகத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். அவற்றின் மரபான குணங்கள்தான், பயணம் போவதற்கான நேரத்தையும், திசையையும், தூரத்தையும் முடிவு செய்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பறவைகள் மட்டுமல்ல, சால்மன் எனும் மீனும், மோனார்க் எனும் வண்ணத்துப் பூச்சியும் நெடுந்தூரம் பயணம் போவதில் மிகவும் திறமை பெற்றவை.


படித்தது.

சோ.ஞானசேகர்.

Tuesday, April 13, 2010

உணவு சமைப்பதற்கு விறகு உண்டு
சமைப்பதற்கு உணவுதாணியம்,
பயிர் செய்ய நிலம் எங்கே?
சீமைக்கருவேலமரம் (வேலிகத்தான்மரம்)
     செடி, கொடி இது எல்லாமே நமக்கு இந்த பூமிக்கு நன்மை உடையதாகவே இருக்கும். ஆனால் நாம் இந்த இயற்கையை அழித்து கொண்டு இருக்கிறோம். அதனால் பூவி மண்டலம் வெப்பமயமாகிறது. இதுஒருபுரம் இருக்க நிலத்தில் வளரும் ஒரு தாவரத்தினால் நமது புவி வெப்பம் அடைவதுடன் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து, மற்ற தாவரங்கள் வளரவிடாமல் தடுத்து நிலத்தில் பயிர் செய்யமுடியாமல் பாலை நிலமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறது. உங்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறதா, இல்லையா பாருங்கள். அதுதான் சீமைக்கருவேலை. இதற்க்கு இந்த பெயர் வரக் காரனம் அந்தக் காலத்தில் வெளி நாட்டை சீமை என்று குறிப்பிடுவார்கள் அங்கு இருந்து கொண்டுவந்தது அதனால்தான் அந்தப்பெயர்

    இந்த சீமைக்கருவேலமரம்
இது இந்திய மண்ணிற்கு பூர்வீகமானது அல்ல இதன் தாயகம் தென் அமெரிக்கா. வேளான் பல்கலைகழகத்தால் கொண்டு வரப்பட்டது. மிதமான வெப்ப, மற்றும் வெப்பமான வறண்ட பிரதேசங்களில் இதனை காண முடியும். இந்த மரம் மிகவும் வறண்ட சூழலையும் தாக்கு பிடித்து வளரக்கூடியது.

  வறட்சியிலும் இந்த மரம் வாடாது. காரணம், நிலத்தடியில் நீர் இல்லையெனில், காற்றில் இருக்கும் நீர் சத்தை உறிஞ்சி வாழும் சக்தி இந்த மரத்திற்கு உண்டு.

  காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், இந்த மரம் வளர்ந்துள்ள பகுதிகள் பெரும்பாலும் வெப்பமாகவும் வறட்சியாகவே இருக்கும். எனவெ அந்த பகுதிகளிள் மழை பெய்யும் அளவு குறையும்.

  தான் வளர்ந்துள்ள நிலத்தை வேறு ஏதும் விளையாத தரிசு நிலமாக மாற்றிவிடும்.

   இந்த மரத்தின் முள் குத்தினால் அந்த புண் புரையோடிவிடும்.சிலருக்கு காலவே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

   உணவு சமைப்பதற்காக இந்த மரத்தை இங்கு கொண்டு வந்தார்கள் உணவு சமைப்பதற்கு விறகு உண்டு சமைப்பதற்கு உணவுதாணியம் பயிர் செய்ய நிலம் இல்லை. இப்படியே போனால் இன்னும் 10, 15 வருடங்களில் உணவு உற்பத்தி செய்ய நிலங்களே இல்லாமல் போய்விடு்ம் நிலை ஏற்படும்.


   தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, இன்னும் பல ஊர்களின் நிலமை இந்த சீமைக்கருவேலமரத்தினால் விவசயம் செய்யமுடியாமல் இந்த மரத்தை வெட்டி கரிமூட்டம் செய்து வாழ்க்கையை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை யார் களை எடுப்பார்கள் என்று தெரியவில்ல. இதை படிக்கும் அன்பர்கள் உங்களுக்கு சீமைக்கருவேலமரம் பற்றிய தீமையை தெரிந்ததை உங்கள் இடுகயில் வெளியிடவும் மற்றவர்களையும் எச்சரிக்கவும். ஒவ்வொருவதும் ஒரு சீமைக்கருவேலமரத்தை அழிக்கவும் நாட்டை பாலை நிலமாக்கிவிடாமல் காக்கவும்.

படித்ததும் தொகுத்ததும் அனுபவித்த அனுபவமும்.

நன்றி..

சோ.ஞானசேகர்.

Saturday, April 3, 2010

ஆப்பிள்
   மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp.

   அனேகமாக, ஆரஞ்சு வகை மரங்களுக்கு அடுத்ததாக, ஆப்பிள்தான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் மரமாகும்.

  உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 7ஆயிரத்து 500 வகையான ஆப்பிள்கள் மொத்தம் 6 கோடி 'டன்' அளவுக்கு விளைவிக்கப்படுகிறது.

      ஆப்பிள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் 10-வது இடம் வகிக்கிறது.

   அமெரிக்க் கிறிஸ்தவ மத போதகரான சாமுவேல் 'சத்யானந்த் ஸ்டோக்ஸ்' இல்லாவிட்டால் இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்காது.

      1904-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த சாமுவேலுக்கு இந்தநாட்டையும், இந்தநாட்டு மக்களையும் மிகவும் பிடித்துப்போனது. அவர் தனது மதபோதகர் பணியைத் துறந்துவிட்டு இந்தியப் பெண் ஒருவரை மணந்தார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா அருகில் உள்ள கோட்கர் கிராமத்தில் மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார்.

   கோட்கர் ஓர் ஏழ்மையான கிராமம். அங்குள்ள மக்களில் பெரும்பாலனவர்கள் அடிமை தொழிலாளர்களாக இருந்தனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என்று சாமுவேல் நினைத்தார்.

    கோட்கர் பகுதி மண், ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்றது என்று சாமுவேல் கண்டுபிடித்தார். அவர், தனது தாய்நாடான அமெரிக்காவில் லிருந்து 'கோல்டன் டெலிசியஸ்' ஆப்பிள் வகைச் செடிகளை வரவழைத்தார். அவற்றை தனது தோட்டத்தில் நட்டு வளர்த்தார். நான்காண்களுக்கு பின் அவற்றில் மிகவும் ருசியான ஆப்பிள்கள் காய்த்தன.

    பிறகு உள்ளுர் விவசாயிகளுக்கும் சாமுவேல் ஆப்பிள் செடிகளைக் கொடுத்தார். அதன் விளைவாக, சில ஆண்டுகளில் அப்பகுதி முழுவதும் ஆப்பிள் தோட்டங்கள் உருவாயின. மக்களின் பொருளாதர நிலையும் வெகுவாக உயர்ந்தது.

  இன்று, இமாச்சலப் பிரதேசம் இந்தியாவின் 'ஆப்பிள் மாநிலமாகவும்', கோட்கர், ஆப்பிள் தொழில்துறையின் இதயமாகவும் விளங்குகிள்றன.

படித்தது..

சோ.ஞானசேகர்

Wednesday, March 31, 2010

பப்பாளி
பப்பாளி ஒரு பழந் தரும் மரமாகும் பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் சுவையா இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு மிளகு போல் இருக்கும்.

விட்டமீன் ஏ அதிகமாக உள்ளது. சிறிதளவு பி1, பி2 உள்ளது.  நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.  பித்தத்தைப் போக்கும் நிறைய நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

இப்போது பப்பாளியில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வேறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படித்தது..

சோ.ஞானசேகர்...
    வாழைப்பழம்
வாழை மரம் இது மனிதனை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது இதனுடைய இலை, காய், பழம், பூ, தண்டு, நார் எல்லா பகுதிகளும் நமக்கு பயண்படுகிறது.

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடுயது.

வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் உள்ளது எளிதில் ஜீரணம் ஆகும். இது பழைய கதை. இப்போது இதில் எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழங்களில் லேக்டின் என்னும் ஒரு வகைப்புரதம் உள்ளது. இது எய்ட்ஸ் கிருமியான எச்.ஜ.வி. வைரசை ஒடுக்கும் தன்மை உடையது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், லேக்டின் புரதம் நோய் எதிர்ப்பு சக்கியை வழங்கும். அத்துடன் எச்.ஜ.வி. கிருமி உட்புகுந்தால் அவற்றை சூழ்ந்து ஒரு உறையை ஏற்படுத்தி செயல் இழக்கச் செய்யும் ஆற்றலையும் லேக்டின் தருகிறது.

நல்ல பலன்தரும் வாழைப்பழத்தை சாப்பிட்டு நாமும் நலமுடன் இருப்போமே!

சோ.ஞானசேகர்..

Saturday, February 6, 2010


ஆரோக்கிய உணவு வகையில் இடம் பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது. குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் சிறந்த உணவு.

தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது. அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்த கொழுப்புசத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ., இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.

ஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். தற்போது ஒமேகா-3ன் உட்பிரிகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது.

இ.பி.ஏ. என்ற வேதிப்பொருள், மூளையுடன் சம்பந்தப்பட்டது. எனவே நினைவுத்திறனில் பாதிப்பு வருவதற்கு இ.பி.ஏ. குறைபாடும் ஒரு காரணம். அதேபோல் இரு ரசாயனங்களும் நரம்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புபடலமாக இருப்பதால் நரம்பு மண்டல உறுதிக்கும் அவை காரணமாக இருக்கிறது.

எனவே தேவையான அளவு மீன் உணவு சாப்பிட்டு ஒமேகா-3 அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நரம்பு மண்டலம் உறுதிபெரும். நரம்பு மண்டலம் பலப்பட்டால் உடலும் உறுதிபெரும் என்பது உண்மை.

படித்தது

சோ.ஞானசேகர்..