Thursday, March 31, 2011

நமது நாடு 10. ஆரியர் தமிழர் போர்


   ஆரியருக்கும் தமிழருக்கும் இடையில் நீண்டகாலம் போர் நடந்தது. ஆரியர், தமிழரை வென்று சிறிது சிறிதாகப் பஞ்சாப் மாகாணம் முழுவதையும் கைப்பற்றினார்கள் அவர்கள் அம்மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கு அறு நூறு ஆண்டுகள் சென்றன. அவர்கள் தமக்கு வெற்றியை வேண்டித் தாம் வழிபட்ட கடவுளர் மீது பல துதிப்பாக்களைப் பாடிணார்கள். அப்பாடல்களில் அவர்கள் தாம் எதிர்த்துப் போராடிய தமிழர்களைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள். அக்கூற்றுக்களால் அக்காலத் தமிழரின் நாகரிகம் எவ்வகையினது என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவர்களுடைய பாடல்களில் தமிழர்தாசர் என்று கூறப்பட்டிருக்கின்றனர்.

   அக்காலத்தில் தமிழர் மதிலாற் சூலப்பட்ட பெரிய நகரங்களில் வாழ்ந்தார்கள். அவர்களிடத்தில் நிலம், ஆடு, மாடு முதலிய செல்வப் பொருள்கள் இருந்தன. மக்கள் பொன், வெள்ளி முதலியவைகளாற் செய்யப்பட்ட பலவகை அணிகலன்களைப் பூண்டார்கள். அவர்களின் கடவுளர் பொன், வெள்ளி, செம்பு முதலியவைகளாற் புனையப்பட்ட கோயில்களில் வைத்து வழிபடப்பட்டனர். தேர், குதிரை, காலாள் முதலிய படைகள், அவர்களிடத்தில் இருந்தன. இவ்வாறு ஆரியர் தாமே தமிழரின் செல்வத்தையும் நாகரிகத்தையும் பற்றித் தமது பாடல்களில் நன்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

     அக்கால ஆரியரது சிறந்த கடவுள் இந்திரன். அவர்கள், தமக்கு வெற்றியை அளிக்குமாறு இந்திரன் மீது பல பாடல்கள் பாடினார்கள். தமிழர் ஆரியரின் கடவுளர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இக்காரணத்தினாலும் அவர்களுக்கிடையில் போர் நடந்தன.

  படைஎடுப்பு வாணிகம் போன்ற காரணங்களால் பல சாதியினருக்கிடையே கலப்பு உண்டாகின்றது. ஆரியர் கலப்பின்றி நீண்டகாலம் வாழவில்லை. புறத்தே இருந்துவந்த ஆரியரிலும் பார்க்க இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர் மிகப் பலர். இவ்விரு சாதியினருக்கு மிடையில் கலப்புமணஞ் செய்வதில் தடை ஏற்படவில்லை. இரு மக்களுக்கு மிடையில் கலப்பு மணங்கள் நிகழ்ந்தன. புதிய மக்கள் தோன்றினார்கள். அவர்கள் தம்மை ஆரியர் என்றே சொல்லிக்கொண்டனர். அவர்கள் சிறிது சிறிதாகக் கங்கைச் சமவெளி வரையிற் சென்று தமது வெற்றியை நாட்டினர். ஆரியர் வழங்கிய மொழி பிராகிருதம் எனப்பட்டது. வடக்கே வாழ்ந்த தமிழர் பிராகிருதச் சொற்களைத் தமிழுடன் கலந்து பேசினர். பேசுமிடத்து அச்சொற்களைத் திரித்து வழங்கினர். ஆரியர் பிராகிருத்ததுடன் தமிழ்ச் சொற்களைக் கலந்து வழங்கினர். அவர்களும் தமிழ்ச் சொற்களைப் பிறழ உச்சரித்தனர். இக்காரணங்களால் வடக்கே பல மொழிகள் தொன்றலாயின. நாள் ஏற ஏற ஆரியர் தமிழரின் கொள்கைகளையே பின்பற்று வாராயினர். அவர்கள் தமிழரின், சிவன், உமை முதலிய கடவுளரை வழிபட்டனர். அவர்களின் இந்திரன், பிரமா, வருணன் முதலிய கடவுளர் தெய்வங்களாயினர். இவ்வாறு இந்திய மக்கள் எல்லோரது நாகரிகமும் தமிழர் நாகரிகமாக மாறியுள்ளது. தமிழரின் கொள்கைகள் அல்லாதன சிலவும் அதன் இடை இடையே காணப்படுகின்றன.

தொடரும்...



Wednesday, March 30, 2011

நமது நாடு 9. ஆரியர்


  நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய நாட்டுக்குப் புதிய மக்கட் கூட்டத்தினர் ஒருவகையினர் வந்தனர். அவர்கள் மத்திய ஆசியாவில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆடு மாடுகளை மேய்த்து அவை கொடுக்கும் பால் முதலிய பயன்களைக்கொண்டு வாழ்ந்தனர். ஒரு காலத்தில் பல ஆண்டுகள் மழை இல்லாமையால் அவர்களின் ஆடு, மாடுகள் மேய்வதற்கு எவ்விடத்தும் புல் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் கூட்டங் கூட்டமாகத் தமது ஆடு, மாடுகளுடனும் பெண்டு பிள்ளைகளுடலும் பல திசைகளை நோக்கிச் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்களுள் ஒரு கூட்டத்தினர் இந்தியாவின் வட மேற்கே உள்ள கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் புகுந்தனர். அவர்கள் புகுந்தபோது இந்தியா முழுவதும் வாழ்ந்துகொண்டிருந்தோர் தமிழ் மக்களேயாவர்.

     ஆரியர் நிறத்தில் வெண்ணிறமுடையோர். உலகில் மக்களின் நிறங்கள் வெவ்வேறாகக் காணப்படுவதற்குச் சில இயற்கைக் காரணங்கள் உண்டு. இவ்வுலகில் எல்லா இடங்களும் ஒத்த வெப்ப தட்ப நிலையுடையன வல்ல. இடங்களின் வெப்ப தட்ப நிலைகளுக் கேற்ப மக்களின் நிறம் மாறுபடுகிறது. பூமியின் நடுக்கோட்டை (மத்திய இரேகை) அடுத்த நாடுகள் மிக வெப்ப முடையன. நடுக்கோட்டில் இருந்து வடக்கு அல்லது தெற்கு நோக்கிச் செல்லச் செல்லப் படிப்படி கருமைகுறைந்து வெண்மை அடைந்த மக்களைக் காணலாம். மத்திய தரைக்கடலை அடுத்த நாடுகளில் தமிழர் சென்று குடியேறினார்கள் என முன் பதிவில் படித்தோம். அம்மக்களின் ஒரு கூட்டத்தினர் வட துருவ நாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்து வெண்ணிற மடைந்தனர். அவர்களே பின்னர் மத்திய ஆசியாவிற்றங்கிப் பின் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியராவர்.

  இந்தியாவை அடைந்த ஆரியர் அங்கு தமது மாடு முதலியன மேய்வதற்கு ஏற்ற புல் வளர்ந்திருப்பதைக் கண்டனர். தொடக்கத்தில் அவர்கள் இன்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் தங்கி வாழ்ந்தனர். அவர்கள் வந்த வழியைப் பின்பற்றி இன்னும் அவர் கூட்டத்தினர் பலர் வந்தடைந்தார்கள்.

  அவர்கள் அங்குத் தங்கிப் பெருகலாயினர். அவர்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களை வென்று நிலங்களைத் தமக்குச் தொந்தமாக்க விரும்பினார்கள். ஆரியர், தமிழரிலும் பார்க்க உடல் வலியும் முரட்டுத் தன்மையும் உடையவர்களாயிருந்தனர். அவர்களிடத்தில் குதிரைகளும் இருந்தன. ஆரியர் வருகைக்கு முன் தமிழர் குதிரையைப்பற்றி அறிந்ததில்லை. தமிழர் நாகரிக உயர்வும் அமைதியும் உடையவர்களாய் வாழ்ந்துகொண்டு இருந்தனர்.


தொடரும்..

Tuesday, March 29, 2011

சப்பாத்திக்கள்ளி

  
  சப்பாத்திக்கள்ளி இது ஒரு பாலைவனத்தாவரம் வறண்டபகுதியில் செழித்து, வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக்கள்ளி.  கள்ளிச் செடிகள் பலவகையுள்ளது. திருகுகள்ளி இலைக்கள்ளி,  சதுரக்கள்ளி, மண்டங்கள்ளி, சப்பாத்திக்கள்ளி
  
   இந்தச்செடி மற்ற செடிகள்போல் இலைகள் கிடையாது. இதன்தண்டுகள் வட்டவடிவில் ஒன்றுடன் ஒன்று இனைந்து எல்லா இடத்திலும் முட்கள் நிறைந்து இருக்கும். எழிதில்  தாவரங்களை உண்ணும் பிராணிகளிடமிருந்து தப்பிக்க யாரும் நெருங்கமுடியாத படி பாதுகாப்பாக இருக்கும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தனக்குத்தானே அந்தத் தாவரம் போட்டுக்கிட்ட வேலி தான் முட்கள். இந்தச் செடிகள் எல்லாமே பாலைவனத் தாவரங்கள். இதனால் இளையில் இருக்கிற தண்ணீர் முழுவதும் பாலைவனச் சூட்டுல ஆவியாகி வெளியேறிவிடும். எனவேதாண், கள்ளித்தாவரங்கள் தண்டிலேயே நீரைத் தேக்கி வச்சிருக்கும். அதேபோல இலைகள் செய்ய வேண்டிய உணவுத் தயாரிப்பையும் தண்டுகளே செய்துகொள்கிறது. 

   இதனுடைய பூ மிகவும் அழகாகயிருக்கும் இதன் பழம் சிவப்பு கலராக இருக்கும். பழம் சுவையாக இருக்கும். அந்த பழங்களை பறித்துச் சாப்பிடுவது அவ்வளவு எளிதல்ல முதலில் முட்கள் எதுவும் கையில் குத்தாமல் அந்தப் பழத்தை பறிக்க வேண்டும். பறித்தவுடன் எல்லாப் பழங்களையும் போல் சாப்பிட முடியாது அந்த பழங்களின் தோலைச் சுற்றிலும் மிக நுண்ணிய முட்கள் இருக்கும் அதை தேய்த்து நீக்க வேண்டும். பழத்தை இரண்டாக பிளந்தால் அதன் நடுவில் ரவுண்டாக ஒரு முள் இருக்கும். பின்பு மிகவும் கவனமாகச்சாப்பிட வேண்டும் மிகவும் சுவையாக இருக்கும். இந்தப்பழத்தை மிகவும் கவனமாகச் சாப்பிட வேண்டும் இல்லையென்றால் ஆபத்து. அதன்ல் இதை யாரும் எழிதில் நெருங்குவதற்கு பயப்படுவார்கள்.

  மாவுப்பூச்சி இந்தப்பூச்சிகள் நம் ஊரிலுள்ள சப்பாத்திக்கள்ளிகளை அழிப்பதற்காக வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சப்பாத்திக்கள்ளி ஒழிந்து விட்டது. ஆனால் இந்தப்பூச்சிகள் ஒழியவில்லை.
இந்தப்பூச்சி அவைகள் சாப்பிடுவதற்கு சப்பாத்திக்கள்ளிகள் இல்லாததால் எல்லாவற்றையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன.

  இதுபோல் நமது இயற்கை வழங்களை அழிப்பதற்கு நிறைய விஷச் செடிகள் மறைமுகமாக இறக்குமதியாகியுள்ளது......

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...

Monday, March 28, 2011

கொத்தமல்லி




                 உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும். 

  மக்கள் பிணி நீங்கி  நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன.  இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்.  மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும். 

   கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.  இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.
   
    நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.
கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள்.  அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம்.  ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.

  பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி.  இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர்.  இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.

   நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்.  இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது.   இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை.  இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.

   இது கார்ப்புச் சுவை கொண்டது.  குளிர்ச்சித் தன்மையுடையது.  சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.


கொத்தமல்லியின் பயன்கள்
·   சுவையின்மை நீங்கும். 
·   வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
·  செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.
· வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும்.  மலச்சிக்கல் நீங்கும்.   இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும்.  மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
·   புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.
·  கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்  கண் சூடு குறையும்.
·   சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும்.  மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.
· உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல்.  இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.  இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.
· நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.  மன அமைதியைக் கொடுக்கும்.
· உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.
· நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும்.  இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும்.  இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
·   வாய் நாற்றத்தைப் போக்கும்.  பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.
சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.


  கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.
5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

   கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.
   காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும்.  இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது. 
   இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால்  சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

நன்றி நக்கீரன் ஹெல்த் சாய்ஸ்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுவோம்...

Saturday, March 26, 2011

மின்மினிப்பூச்சி

   இரவு நேரங்களில் மின்னிக்கொண்டே செல்லும் சில பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். இதைத்தான் மின்மினிப்பூச்சி என்று அழைப்பார்கள். விலங்கினங்களைப் பொறுத்தவரை, ஒருசெல் உயிரியில் இருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பல்வேறு உயிரினங்கள் ஒளியை உமிழக்கூடிய ஆற்றல் பெற்றவையாக விழங்குன்றன. அவற்றுள் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக ஒளியை உமிழ்ந்து கொண்டு செல்வதைப் பார்க்க மிக அழகாக இருக்கும்.

   மின்மினி ஒளியை உமிழ்வது உயிர் வேதியியல் செயலாகும். இந்தப் பூச்சிகள், சுவாசத்துளைகளின் வழியாகச் செல்லும் சுவாசக் குழல்கள் மூலம் சுவாசிக்கின்றன. இவற்றின் அடிவயிற்றுப் பகுதியில் தனிச்சிறப்பு மிக்க செல்கள் காணப்படுகின்றன. இந்தச் செல்களில் லூஸிபெரின் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. இந்தச் செல்களுடன் சுவாசக்குழல்கள் தொடர்பு கொண்டிருப்பதால், இதனுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து ஒளியைத் தருகிறது. இந்த வேதிவினைக்கு ஆற்றலும் தேவைப்படுகிறது. இந்தப் பூச்சிகள் பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு என பல்வேறு வகையான ஒளியை உமிழ்கின்றன.

காட்டைவளர்த்து நாட்டைக்காப்போம்...

Saturday, March 19, 2011

நமது நாடு 8. மேற்கு ஆசியாவிற் குடியேறிய தமிழர்


    தமிழ்நாட்டினின்றும் சென்ற வேறு மக்கட் கூட்டத்தினர் சிலர் மேற்கு ஆசியாவின் வெவ்வேறு இடங்களிற் குடியேறினார்கள். இவர்கள் பாலஸ்தீனியர், பொனீசியர், சீரியர், அசீரியர், சின்ன ஆசிய மக்கள் என்போர். இவர்கள் நாடுகளைப் முதல் அத்தியாயத்தில் உள்ள படத்தில் பாருங்கள். பாலஸ்தீனியர், யூதர் அல்லது எபிரேயர் எனவும் படுவர். இவர்கள் தமிழர்களைப்போலவே பிறப்பு இறப்பினால் தீட்டு உண்டு என்றனர், தீட்டுக்காலங்களில் அவர்கள் ஆலயங்களுட் செல்வதில்லை, தூய பொருட்களைத் தீண்டுவதும் இல்லை.

 அவர்கள் மரங்களின் கீழ் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். சிவன் என்னும் கடவுளையும் அவர்கள் வழிபட்டார்கள். சிவன் என்பது அம்மக்களின் மொழியில் சியன் எனத் திரிந்து வழங்கிற்று. இடபத்தையும், பாம்பையும் அவர்கள் வழிபட்டார்கள். நமது ஆலயங்களிலும் இடபம், பாம்பு முதலிய சிலைகள் உள்ளன. இவை மாத்திரமல்ல இன்னும் அவர்களின் பழக்க வழக்கங்களும் தமிழ்நாட்டிற் காணப்படுவன போன்றன.

  பாலஸ்தீனத்துக்கும மேற்பகுதியில் குடியேறினோர் பொனீசியர் எனப்பட்டார்கள். பொனீசியா என்பது பனை நாடு என்பதன் திரிபு என்று கருதப்படுகின்றது. அங்குப் பேரீந்து எனப்படும் பனைகள் அதிகம். அவர்கள் தென்னாட்டு ஆலயங்களைப்போலவே பெரிய கோயில்கள் கட்டினார்கள். அங்கு அவர்கள் சிவலிங்கங்களை வைத்து வணங்கினார்கள். அவர்களின் எழுத்து பிராமி எனப்பட்ட முற்காலத் தமிழ் எழுத்தினின்றும் பிறந்தது. பிராமி எழுத்து மொகஞ்சொதரோ எழுத்தினின்றும் தோன்றியது.

   பொனிசியாவுக்கு வடக்கே குடியேறிய மக்கள் சீரியர் எனப்பட்டனர். இங்கு இடபத்தின் மீது நிற்கும் சிவன் சிலைகள் காணப்படுகின்றன, சிங்கத்தின் மீது வீற்றிருக்கும் தாய்க்கடவுள் வடிவங்களும் இருக்கின்றன. இவர்களின் கடவுள் வழிபாடு தமிழரின் கடவுள் வழிபாட்டை மிக ஒத்தது. அவர்கள் நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகம் போன்றதே. சீரியாவுக்கு வடகிழக்கிற் குடியேறிய மக்கள் அசீரியர் எனப்பட்டனர். தமிழரில் ஒரு பிரிவினர் அசுரர் எனப்பட்டார்கள்.இரணியன், சூரன் எனப் புராணங்களிற் கூறப்படுவோர் அசுரர். இவர்கள் அக்காலத்தில் சிறந்த நாகரிகமும் வலிமையும் பெற்றிருந்தனர். இவர்கள் சிவனையே வழிபட்டனர். அசுரரில் ஒரு பிரிவினரே அசீரியர் என்று கருதப்படுகின்றனர்.

  சின்ன ஆசிய மக்களின் மொழி தமிழுக்கு இனமுடையதாகக் காணப்படுகிறது. அந் நாட்டு மக்கள் சிவனையும் காளியையும் வழிபட்டனர். இடபத்தின் மீது நிற்கும் சிவன் கடவுட்சிலைகளும் சிங்கவாகனத்தின் மீது இருக்கும் தாய்க்கயவுளின் சிலைகளும் அங்கு கானப்படுகின்றன. மேற்கு ஆசியா முழுமையிலும் வாழ்ந்த எல்லா மக்களின் நாகரிகமும் ஒரு வகையினது.

    கிரீசுக்குத் தெற்கில் கிரேத்தா என்னும் ஒரு தீவு இருக்கின்றது. அங்கு வாழும் மக்களும் தமிழ் நாட்டினின்றும் சென்று குடியேறினோராவர். இவர்கள் தமிழர் என்றே முக்காலத்தில் மற்றவர்களால் சொல்லப்பட்டார்கள். இவர்கள் நாகரிகம் மொகஞ்சொதரோ மக்களின் நாகரிகம் போன்றது. ஸ்பெயின் தேசத்திலும் தமிழ் மக்கள் குடியேறியிருந்தார்கள். அங்கு வழங்கிய பழைய மொழி பாஸ்க்கு எனப்பட்டது. அது தமிழோடு மிக ஒற்றுமையுடையது. இத்தாலியில் வாழ்ந்த மக்களும் தமிழர்களேயாவர். ஒரு காலத்து இந்தியா முதல் அயர்லாந்து வரையும் தமிழர் பரவியிருந்தனர்.

Thursday, March 17, 2011

நமது நாடு 7.சுமேரியர்


    மேற்கு ஆசியாவிலே தைகிரஸ் யூபிரதர்ஸ் என்னும் இரண்டு ஆறுகள் ஒன்று சேர்ந்து பாரசீகக் குடாக்கடலுள் விழுகின்றன. அந்த ஆறுகளின் ஓரங்கள் மிகச் செழிப்பு வாய்ந்தன. அங்குக் கூலப்பொருள்கள் (தானியங்கள்) நன்கு விளையும். தமிழ் நாட்டினின்றும் வந்த மக்களின் ஒரு கூட்டத்தினர் அங்குத் தங்குவாராயினர். முன்னர்க் கூறப்பட்ட சிந்து,நீல ஆற்று ஓரங்களிற் போலவே அங்கும் மக்கள் பெருகினார்கள், நாடு நகரங்கள் உண்டாயின. அங்கு வாழ்ந்த மக்களுடையவும் தமிழருடையவும் நாகரிகங்கள் எல்லாவகையாலும் ஒரே வகையின. அங்குச் சென்று குடியேறிய மக்களின் தலைவர்கள் உவண்ணா என்னும் பெயர் தமிழரின் ஒரு பிரிவினராகிய துளுவ மக்களின் இடையே வழங்குகின்றது. அதற்குப் பூவின் அண்ணன் என்பது பொருள்.

    அம்மக்கள் குடியேறி வாழ்ந்த நாட்டுக்குச் சுமேரியா என்று பெயர். சுமேரியாவின் தலைநகரம் சுசா. அவர்கள் ஆற்று நீரை வாய்க்கால் வழியே வயல்களுக்குப் பாய்ச்சி வேளாண்மை செய்தனர்.
 
    மொகஞ்சொதரோ மக்கள் வழிபட்ட பெரிய கடவுளுக்கு ஆண் என்று பெயர்.சுமேரியரும் தமது பெரிய கடவுளை ஆண் என்னும் பெயர் கொடுத்து வழிபட்டனர். ஆண் எண்பதிலிருந்தே ஆண்டவன் என்னும் பெயர் வந்திருக்கலாம். அவர்களுடைய தாய்க் கடவுளின் பெயர் அம்மா. நம் தாய்க்கடவுளை நாம் இன்றும் அம்மன் என வழங்குகின்றோம்.

   குல நூலார் சுமேரியரும் தமிழரும் ஒரு பொதுத் தோற்றத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறுகின்றனர். இதற்கு, இரு மக்களின் நாகரிகம், மொழி, எழுத்து ஆதியன சான்று பகர்கின்றன.

   தைகிரஸ், யூபிரதர்ஸ் என்னும் ஆறுகளின் வடக்கேயுள்ள நாடுகளில் இன்னெரு மக்கட் கூட்டத்தினர் குடியேறி வாழ்ந்தனர். அவர்கள் தமது நாட்டுக்குச், சால்தியா எனப் பெயர் இட்டனர். சால்தியா என்பது சோழ தேசம் என்பதன் திரிபு. சோழ நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்கள் தமது தாய் நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்கள் தமது தாய் நாட்டின் பெயரையே குடியேற்ற நாட்டிற்கும் இட்டு வழங்குவாதாயினர்.

  பிற்காலங்களில் சால்தியாவும் சுமேரியாவும் இணைக்கப்பட்டுப் பபிலோனியா என்னும் பெயர் பெற்றன. பபிலோனியா என்பதற்குப் பகற் கடவுளின் நாடு என்பது பொருள். அது முன்னைக் காலத்தில் தமிழ் மக்களால் பவேரு என வழங்கப்பட்டது. புத்தரின் பழம் பிறப்பைக் கூறும் சாதகக் கதைகள் என்னும் பழைய நூல் ஒன்று உண்டு. அதில் பவேருவைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்காலங்களில் இந்திய மக்கள் மரக்கலங்கள் வழியாகப் பவேருவுக்குச் சென்றார்கள். அங்கு பறவைகளைக் காண்பது அருமை. இந்திய வணிகர் ஒருமுறை காகம் ஒன்றைப் பவேருக்குக் கொண்டு சென்றனர். அந்நாட்டு மக்கள் அதன் வடிவைக் கண்டு அதனைக் கொண்டாடினார்கள். அடுத்த பயணத்தில் அவர்கள் ஆடும் மயில் ஒன்றைக் கொண்டு சென்றார்கள். அதன் அழகைக் கண்ட மக்கள் காக்கையின் வடிவினால் வியப்படையவில்லை. இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகட்கு முன் பவேருவில் கடை வைத்து வாணிகம் செய்த தமிழர் ஒருவரின் கணக்கு சூலையிட்ட களிமண் ஏட்டில் காணப்படுகிறது. அத்தமிழரின் விலாசம் மு.ர.சு.வ.ரா. பபிலோன் மக்கள் கனத்த களிமண் தட்டுகளில் குச்சிகளால் எழுதினார்கள், எழுதியபின் அவைகளைச் சூளையிட்டுக் காப்பாற்றினார்கள். இவ்வாறு களிமண் ஏடுகளில் எழுதப்பட்ட நூல்கள் பல பபிலோன் நாட்டிற் கண்டுபிடிக்கப்பட்டன.



Wednesday, March 16, 2011

எலி



   எலிகள் "கொறித்துண்ணும் பாலூட்டி' இனத்தைச் சேர்ந்தவை. அணிலும், முள்ளம் பன்றியும் இதே இனத்தைச் சேர்ந்தவைதான். மேல் தாடையில் உள்ள வெட்டுப் பற்கள் (இவற்றை உளிப் பற்கள் என்றும் சொல்வார்கள்) தொடர்ந்து வளர்ந்துகொண்டிருப்பதுதான் இவற்றின் முக்கியமான சிறப்பம்சம். இந்தப் பற்கள் தாமாகவே கூர்மையடையும். வெட்டுப் பற்களின் முன் பகுதியில் மட்டுமே எனாமல் இருக்கும். அதனால் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அந்தப் பற்களின் பின்புறம் தேய்ந்துகொண்டிருக்கும். அப்படித்தான் பற்கள் உளிபோன்று கூர்மையாகின்றன. நமது முன்    பற்களையும் வெட்டுப் பற்கள் என்று சொல்லலாம். என்றாலும் அவை எலிகளின் வெட்டுப் பற்களைப்போன்றவை அல்ல. 

   கொறித்துண்ணும் இனத்தைச் சேர்ந்தவற்றின் முன் பற்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும். எனவே அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த முன் பற்கள் மிகவும் நீளமாக வளர்ந்துவிடும். பிறகு எதையும்  கடிப்பதற்கு இயலாமல் போய்விடும்.

   எப்போதாவது, மேல் வரிசை வெட்டுப் பற்கள்  வளர்ந்து வாயைத் துளைத்துக்கொண்டு கீழே வந்துவிடுவதும் உண்டு. எனவே, எதையாவது கடித்துக்கொண்டிருப்பதைத் தவிர எலிகளுக்கு வேறு வழி இல்லை. முக்கியமாக, எலிகள் மென்மையான உணவுகளையே அதிகம் தின்றுகொண்டிருக்கும்போது பற்களின் நீளம் அதிகமாகும்.  அதுபோன்ற சூழ்நிலைகளில் மரம், பிளாஸ்டிக், கம்பி ஆகியவற்றைக் கடித்துக் கடித்து, பற்களின் நீளம் அதிகரிக்காமல் எலிகள் பார்த்துக்கொள்ளும்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுவோம்...

Friday, March 11, 2011

வரிக்குதிரை


   வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.

  வரிக்குதிரைகள் குகிரை இனத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் குணயியல்பைப் பொருத்தவரை குதிரைகளுக்கும் வரிக்குதிரைகளுக்கும் மிகவும் வித்தியாசம் உண்டு.  வரிக்குதிரைகள் மனிதர்களுடன் இசைந்து பழகாத குணயில்புடையவை. மனிதர்களின் கட்டளைகளைக் குதிரைகள் ஏற்று நடப்பதைப்போல, வரிக்குதிரைகள் நடக்காது. வாய்ப்புக் கியைத்தால் மனிதர்களைத் துன்புறுத்தவும் தயங்காதவை. இவை, குதிரைகளைப் போல அமைதியாகவும் அல்ல. பயம் என்பதே இவற்றிக்குக் கிடையாது. எப்போதும் மிரட்சியடைந்ததைப் போலத்தான் நடந்துகொள்ளும். ஓட்டமெடுத்தால், கட்டுப்படுத்த முடியாத பயங்கர வேகத்தில்தான் ஓடும். இத்தகைய காரணங்களால்தான், வரிக்குதிரைகள் காட்டிலேயே வாழட்டும் என்று மனிதர்கள் விட்டுவிட்டார்கள். வரிக்குதிரைகள் மனிதர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவையாக இருந்தால், நமக்கு குதிரை வண்டிகளுக்குப் பதிலாக வரிக்குதிரை வண்டிகள் இருந்திருக்கும்.

மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....

Thursday, March 10, 2011

நமது நாடு 6. எகிப்தியர்


    தமிழ் நாட்டினின்றும் புறப்பட்ட இன்னெரு கூட்டத்தினர் மேற்கு நோக்கிச் சென்றனர், அவர்கள் செங்கடல் வழியாக வட ஆப்பிரிக்காவை அடைந்தனர். அங்கு என்றும் நீர் வற்றாத ஆறு ஒன்று உண்டு. அதற்கு நீல ஆறு (நைல்) எனேபது பெயர். அதன் பள்ளத்தாக்குகள் பயிர் இடுவதற்கு மிகவும் வாய்ப்புடையன. இவ்வாற்றேரங்களில் வந்து அக்கூட்டத்தினர் தங்கினர், நாடு நகரங்கள் உண்டாயின. அங்கு எழுந்த நகரங்களுள் மெம்பிஸ், தீப்ஸ் என்னும் பட்டினங்கள் சிறந்திருந்தன. அம்மக்கள் குடியேறிப் பெருகிய இடம் எகிப்து எனப் பெயர் பெற்றது. எகிப்தில் வாழ்ந்த மக்கள் எகிப்தியர் எனப்பட்டனர்.

   எகிப்தியர் பைபிரஸ் என்னும் ஒருவகைத் தாளில் எழுதினார்கள். அவர்கள் நூல்களில் அவர்கள் பண்டு நாட்டினின்றும் வந்து குடியேறினார்கள் எனக் கூறப்படுகின்றது. பண்டு என்பது பாண்டிநாட்டின் பழைய பெயர்.

    ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் எகிப்தியர் தென்னிந்தியாவோடு வாணிகம் நடத்தினார்கள். குரங்குக்கும் யானைத் தந்தத்துக்கும் அவர்கள் மொழியில் வழங்கிய பெயர்கள் இன்றும் தமிழில் காணப்படுவன. அவை கவு, எவு என்பன. இவை கவி, இபம் என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபுகள். தமிழர்களிடையும் பழைய எகிப்தியரிடையும் காணப்பட்ட பழக்கவழக்கங்கள் பெரும் பாலும் ஒரே வகையின. அவர்கள் எழுதுவதற்கு ஓவியங்களைப் பயன்படுத்தினர். ஓவியங்களே தமிழ் மக்களின் எழுத்துக்களாக ஒருகாலத்தில் இருந்தன. அவர்கள் தினமும் பருகும் ஏனங்களைச் (பாத்திரம்) சுத்தஞ் செய்தார்கள். குருமார் தோய்த்துலர்ந்த ஆடையுடுத்தினர், ஒவ்வொரு மூன்றாவது நாளும் உடல் முழுவதையும் மழித்துக்கொண்டனர், காலில் மிதியடி தரித்தனர், இடபத்துக்கும் ஞாயிற்றுக் காடவுளுக்கும் பூசை செய்தனர், விரதமிருந்தனர், மரணத்துக்குப்பின் உயிர் நிலைபெறுவதை நம்பினர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது உணவும், அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் பக்கத்தேவைக்கப்பட்டன. எகிப்தியர் வழிபட்ட தாய்க்கடவுளுக்கு ஊர்தி சிங்கம். எகிப்தியரின் மரக்கலங்கள் இன்றும் இந்தியநாட்டில் காணப்படுவன போன்றவை.

   எகிப்திய மக்கள் ஆறாயிரம் ஆண்டுகளின் முன் பெரிய கூர்நுதிக் கோபுரங்களைக் கட்டினார்கள். இவை அரசரின் உடலை அடக்கஞ் செய்வதற்காகக் கட்டப்பட்டன. இவை இன்னும் உலக வியப்புகளுள் ஒன்றாக விளங்குகின்றன. இவர்களின் நாகரிகம் மிகப் பழமையுடையது.

Monday, March 7, 2011

மலர்கள் மணம் பரப்புவது ஏன்?


  எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. சில செடிகளில் வென்னிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள் சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.

  மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான் தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.
பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்திற்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.

   மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் எந்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.
சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின் போது உற்பத்தி செய்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.
எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிகிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நருமணமும்  நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.

மரம் வளர்ப்போம் புவி காப்போம...

நமது நாடு 5. மொகஞ்சொதரோத் தமிழர்

  தென்னிந்தியாவிலே மக்கள் பெருகத் தொடங்கினார்கள். அவர்கள் வடக்கே செல்ல முடியாதபடி தண்டகம் என்னும் பெரிய காடு கிடந்தது. கடற்கரைப் பக்கங்களில் வாழ்ந்த மக்கள் பலர் குடியேற்ற நாடுகளை நாடி கடல் வழியே சென்றனர். இவ்வாறு சென்றவர்களுள் ஒரு சிலர் சிந்துநதி முகத்துவாரத்தை யடைந்தனர். அவ்வாற்றோங்கள் மிகச் செழிப்புடையன அங்கு இம்மக்கள் தங்கினார்கள், ஆற்றினின்றும் நீரை வாய்க்கால்களாற் பாய்ச்சி வேளாண்மை செய்தார்கள். தானியங்கள் நன்றாய் விளைந்தன அங்கு குடியேரிய மக்களின் தொகை பெருகத் தொடங்கிற்று. அவர்கள் சிறிது சிறிதாக சிந்து நதி வெளி முழுமையிலும் குடியேறி வாழ்ந்தார்கள். இம்மக்கள் கட்டி வாழ்ந்த இரண்டு பெரிய பட்டினங்கள் மண்ணினால் மூடுண்டு நீண்ட காலம் அறியப்படாமற் கிடந்தன. அண்மையில் அந்நகரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட்ன. அப்பட்டினங்கள், இப்பொழுது அரப்பா, மொகஞ்சொதரோ என்று வழங்குகின்றன. பட்டினங்கள் இரண்டிற்கும் இடையிலுள்ள தொலைவு நானூறுமைல்.இரண்டு நகரங்களிலும் வாழ்ந்த மக்களின் நாகரிகமும் ஒரே வகையாகவுள்ளது. இதனால் அக்காலத்தே தமிழ் மக்கள் மிக அகன்ற இடப்பரப்பிற் குடியேறி யிருந்தார்கள் என விளங்குகின்றது.
  
    இப் பட்டினங்களில் பழந் தமிழரின் நாகரிகக் குறிகள் பல கிடைத்தன, இவைகளைக் கண்டு உலகமே வியப்படைந்தது. இக்கால மக்கள் தாமும் அவ்வகை  அழகிய நகரங்களை அமைக்க மாட்டார்கள். நகரங்களின் இடையிடையே அகன்ற வீதிகளின் இரு பக்கங்களிலும் வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டன. சூளையிட்ட செங்கற்கள் கட்டிட வேலைக்குப் பயன்படுத்தப் பட்டன.வீடுகளுக்கு ஒன்று முதல் மூன்று மாடிகள் வரையில் உண்டு. அவைகளின் முகப்புகள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடையன. வீடுகளுக்கு உள் முற்றம் உண்டு. உள் முற்றத்தே கிணறு இருந்தது. எல்லா வீடுகளுக்கும் குளிக்குமறை இணைக்கப்பட்டிருந்தது. உள் முற்றத்தே ஆடு மாடுகள் கட்டப்பட்டன. வீட்டிலிருந்து வீதியிலுள்ள சாக்கடை வரையும் வாய்க்கால்கள் இருந்தன. இவை செங்கற்களாற் பதிக்கப்பட்டிருந்தன. கழிவு நீர், வாய்க்கால் வழியே சென்று வீதியிலுள்ள சாக்கடையில் விழுந்தது. இவ்வாறு அமைக்கப்பட்ட அழகிய வீடுகளில் அக்கால மக்கள் வாழ்ந்தார்கள்.

    மக்கள் ஆடை நெய்ய நன்கு அறிந்திருந்தனர். ஆடைகளுக்கு அழகிய நிறங்கள் ஊட்டப்பட்டன. குயவர் பலவகையான அழகிய மட்பாண்டங்களைச் செய்தனர். அவைமீது செடி, கொடி, பறவை, விலங்கு முதலிய ஓவியங்களும் எழுதப்பட்டன. வீடுகளிற் பயன்படுத்தும் ஏனங்கள் பல செம்பு வெண்கலம் முதலிய உலோகங்களாற் செய்யப்பட்டன. ஆடவர் முகத்தை மழித்துக்கொண்டனர். மழிக்கும் கத்திகள் வெண்கலத்தினாற் செய்யப்பட்டன. சிறுவர் பலவகை விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடினர்.

    மகளிர், பொன் வெள்ளி வெண்கலம் செம்பு முதலியயவைகளாற் செய்த அழகிய  நகைகளை அணிந்தனர். முகத்துக்கு மணப்பொடி பூசினர், நெற்றியில் சாதிலிங்கப் பொட்டிட்டனர்.

  வழிபாட்டிற்குரிய கடவுளரில் சிவன், அம்மன் என்போர் தலைமை பெற்றிருந்தனர். அவர்களுக்கு கோவில்கள் இருந்தன. கோவிலின் பக்கத்தே படிக்கட்டுகளுடைய கேணி யிருந்தது. ஆலயங்களுக்குச் செல்வோர் இதில் நீராடினர். கேணியின் பக்கத்தே அறைகள் பல இருந்தன. இவைகளில் நீராடுவோர் தங்கினர். கேணியின் அடியில் ஒரு புறத்தில் பெரிய துவாரம் ஒன்று விடப்பட்டிருந்தது. இதனால் கேணியின் நீர் இடையிடையே போக்கப்பட்டது. அத்துவாரத்தின்கீழ் பெரிய மதகு இருந்தது. கேணியின் பக்கத்தே மூன்று கிணறுகள் இருந்தன. இவைகளிலிருந்து இறைக்கப்படும் நீரால் கேணி நிரப்பப்பட்டது. இங்கு கூறப்பட்டவற்றால் அக்கால மக்கள் எவ்வாறு நாகரிகம் அடைந்திருந்தார்கள் என்பது நன்கு விளங்குகின்றது.

Saturday, March 5, 2011

நெல்லிக்காய்

                     நெல்லிக்காய் இளமை காக்கும் காய்
  நெல்லிக்காய் அனைவரும் விரும்பி சாபிடும் காய். நெல்லிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இனிப்பு சுவையாக இருக்கும். பெருநெல்லி,  சிறுநெல்லி இரண்டு வகை உண்டு இது இளமை காக்கும் காய். எளிதில் ஜீரணமாகும் இது மற்ற உணவுகளையும் எளிதில் ஜீரணமாக வைக்கும். குடல் பகுதியிலும், உணவுக் குழாயிலும் இருக்கும் அடைப்பை நீக்கும்.

   இனிப்பு, துவரிபு, காரம், புளிப்பு, கசப்பு என 5 சுவைகளும் கலந்தது. இதில் 'வைட்டமின் சி' அதிகமாக இருப்பதால், தோலோட நிறத்தைப் பாதுகாக்கும். வருடத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே நெல்லிக்காய் காய்க்கும். இதன் இலை, காய், வத்தல் மூன்றுமே மருத்துவக்குணம் உடையது.
ஒரு கைப்பிடி நெல்லிக்காய் இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அந்தத் தண்ணீரில் வாய் கொப்புளிச்சா வாய்ப்புண் சரியாகும். நன்கு முற்றிய நெல்லிக்காய்களை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து தினமும் இரண்டு சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் நன்கு பசி எடுக்கும், சோர்வு நீங்கி உற்சாகம் கிடைக்கும்.
 
   "சி' வைட்டமின் மிகுதியாக உள்ள காய் நெல்லிக்காய். ஐந்துகிலோ ஆரஞ்சுப்பழத்தில் உள்ள "சி'வைட்டமின் அளவு ஒரு கிலோ நெல்லிக்காய் இருக்கும். உடல் அணுக்களைப் பாதுகாப்பதில் இந்தக் கனி மிகச் சிறந்த காரணியாக விளங்குகின்றது.

  இதனை பச்சையாக உண்பதால், ஈறுகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் எளிதில் நீங்கி விடும். உடலில் உண்டாகும் அதிக சூட்டைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்கும் ஓர் அரிய மருந்து. மேலும் கர்ப்பப்பை கோளாறுகளையும் இது போக்குகிறது.          

  வைட்டமின் `சி' நிறைந்தது, நெல்லிக்காய். அதன் அற்புதமான மருத்துவக்குணங்கள்...

  உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. பற்களுக்கு உறுதியைத் தருகின்றன. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.

   சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

   சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.

    பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.

   விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கிறது. பெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.

    சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

இயற்கை நமக்கு கொடை...

Friday, March 4, 2011

நமது நாடு 4.நாவலந் தீவு

4.நாவலந் தீவு
  தமிழ் மக்கள், தாம் இப்பொழுது வந்தடைந்த நாட்டுக்கு நாவலந் தீவு எனப் பெயரிட்டனர். இந்தியா என்பது தமிழர் கொடுத்த பெயரன்று. அது கிரேக்க மக்கள் நமது நாட்டுக்கு இட்ட பெயர், இந்தியா என்பதற்குச் சிந்து நதியை உடைய நாடு என்பது பொருள். சிந்து என்பதை கிரேக்கர் ஹிந்து என்று உச்சரித்தனர். ஹிந்துவிலிருந்து இந்தியா தோன்றிற்று. சிந்து என்பதற்க்குச் சிந்துவது என்பது பொருள்.

  நாவலந் தீவில் முன் உண்டானது போன்ற குழப்பங்கள் நேரவில்லை. மக்கள் அமைதியுடன் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருகத் தொடங்கினர். பலவகைத் தொழில்கள் தலை யெடுத்தன. நாடு முழுவதையும் ஓர் அரசன் ஆண்டான். பின்பு நாடு மூன்றாய்ப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு அரசன் ஆண்டான். மேற்குக் கடற்கரையை ஆண்ட அரசனின் பெயர் சேரன். அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி சேரநாடு எனப்பட்டது. சேரனுக்கு கொடி, வில், மாலை, பனங்குருத்து. கிழக்குப் பிரிவை ஆண்ட அரசன் சோழன் எனப்பட்டான். அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி சோழநாடு எனப்பட்டது. சோழனுக்குக் கொடி, புலி, மாலை, ஆத்தி. தெற்குப் பிரிவை ஆண்ட அரசனுக்குப் பாண்டியன் என்பது பெயர். பழைய அரசன் இருந்த நாடு இது பண்டு நாடு எனப்பட்டது. பண்டு நாட்டை ஆண்ட அரசர் * பாண்டியர் எனப்பட்டானர். பண்டுநாடு பின்பு பாண்டிய நாடு எனப்பட்டது. சிலர், பாண்டியர் என்பது பாரதக் கதையிற் கூறப்படும் பாண்டுவின் பெயரினின்றும் வந்ததென்பர். பாண்டுவுக்கு முன்னே பாண்டியர் உளர். ஆதலின் அது அறப் பொருந்தாது.

   இம் மூவேந்தரும் பேரரசர் எனப்பட்டார்கள். இவர்கள் நாடுகளில் சிற்றரசர் பலர் ஆண்டனர். இவர்கள் பேரரசர்களுக்கு அடங்கி நடந்தார்கள். சிலர் அடங்காதும் இருந்தார்கள். இக்காரணத்தினால் இடையிடையே அவர்களுக்கிடையில் போர்கள் மூள்வதும் உண்டு.

   மக்கள் வாழ் இடங்களும் அதனைச் சூழ்ந்த விளை நிலங்களும் அடங்கிய பாகம் கிராமம் அல்லது ஊர் எனப்பட்டது. கிராமங்கள் பல சேர்ந்தது கூற்றம், கூற்றங்கள் பல சேர்ந்தது நாடு. இவ்வாறு நாடு பல உட்பிரிவுகளாக்கப்பட்டுக் கிராம சபைகளால் ஆளப்பட்டது. கிராம சபைகள் எல்லாவற்றுக்கும் தலைவனாக அரசன் இருந்தான்.

  அரசன் வாழும் பட்டணம் நகர் எனப்பட்டது அரசனின் வீட்டுக்குக் கோயில் என்பது பெயர். கோயிலைச்சுற்றி மதில் இருந்தது. அரண் என்பது மதிலுக்கு மற்றெரு பெயர். அரசனது வீட்டைச் சூழ்ந்து அரண் இருந்தமையின் அது அரண்மனை எனப்பட்டது. அரண்மனையைச் சூழ்ந்து அரச குடும்பத்தினரும் அவன் கருமகாரரும் வாழ்ந்தார்கள். இவர்கள் வாழும் வீதிகளைச் சூழ்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல வீதிகள் இருந்தன. அவ்வீதிகளில் ஆடை நெய்வோர், அணிகலன் செய்வோர் முதலிய பல தொழிலாளரும் வணிகரும் வாழ்ந்தனர். இவ்வீதிகள் எல்லாவற்றையும் சூழ்ந்து மதில் இருந்தது. அதனைச் சூழ்ந்து பெரிய அகழியிருந்தது. அது ஆழமும் அகலமும் நீர் நிறைவும் உடையது. அகழியைச் சூழ்ந்து மரங்கள் வளர்கப்பட்டிருந்தன.

* பாண்டியர் என்பதிலுள்ள இயர் என்பது ஐயர் என்பதன் திரிபு. முற்காலத்தில் கடவுளுக்கும் அரசனுக்கும் ஐயன் என்னம் பெயர் வழங்கிற்று. பண்டு ஐயன் பாண்டியனாயிற்று.