Friday, March 4, 2011

நமது நாடு 4.நாவலந் தீவு

4.நாவலந் தீவு
  தமிழ் மக்கள், தாம் இப்பொழுது வந்தடைந்த நாட்டுக்கு நாவலந் தீவு எனப் பெயரிட்டனர். இந்தியா என்பது தமிழர் கொடுத்த பெயரன்று. அது கிரேக்க மக்கள் நமது நாட்டுக்கு இட்ட பெயர், இந்தியா என்பதற்குச் சிந்து நதியை உடைய நாடு என்பது பொருள். சிந்து என்பதை கிரேக்கர் ஹிந்து என்று உச்சரித்தனர். ஹிந்துவிலிருந்து இந்தியா தோன்றிற்று. சிந்து என்பதற்க்குச் சிந்துவது என்பது பொருள்.

  நாவலந் தீவில் முன் உண்டானது போன்ற குழப்பங்கள் நேரவில்லை. மக்கள் அமைதியுடன் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருகத் தொடங்கினர். பலவகைத் தொழில்கள் தலை யெடுத்தன. நாடு முழுவதையும் ஓர் அரசன் ஆண்டான். பின்பு நாடு மூன்றாய்ப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு அரசன் ஆண்டான். மேற்குக் கடற்கரையை ஆண்ட அரசனின் பெயர் சேரன். அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி சேரநாடு எனப்பட்டது. சேரனுக்கு கொடி, வில், மாலை, பனங்குருத்து. கிழக்குப் பிரிவை ஆண்ட அரசன் சோழன் எனப்பட்டான். அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி சோழநாடு எனப்பட்டது. சோழனுக்குக் கொடி, புலி, மாலை, ஆத்தி. தெற்குப் பிரிவை ஆண்ட அரசனுக்குப் பாண்டியன் என்பது பெயர். பழைய அரசன் இருந்த நாடு இது பண்டு நாடு எனப்பட்டது. பண்டு நாட்டை ஆண்ட அரசர் * பாண்டியர் எனப்பட்டானர். பண்டுநாடு பின்பு பாண்டிய நாடு எனப்பட்டது. சிலர், பாண்டியர் என்பது பாரதக் கதையிற் கூறப்படும் பாண்டுவின் பெயரினின்றும் வந்ததென்பர். பாண்டுவுக்கு முன்னே பாண்டியர் உளர். ஆதலின் அது அறப் பொருந்தாது.

   இம் மூவேந்தரும் பேரரசர் எனப்பட்டார்கள். இவர்கள் நாடுகளில் சிற்றரசர் பலர் ஆண்டனர். இவர்கள் பேரரசர்களுக்கு அடங்கி நடந்தார்கள். சிலர் அடங்காதும் இருந்தார்கள். இக்காரணத்தினால் இடையிடையே அவர்களுக்கிடையில் போர்கள் மூள்வதும் உண்டு.

   மக்கள் வாழ் இடங்களும் அதனைச் சூழ்ந்த விளை நிலங்களும் அடங்கிய பாகம் கிராமம் அல்லது ஊர் எனப்பட்டது. கிராமங்கள் பல சேர்ந்தது கூற்றம், கூற்றங்கள் பல சேர்ந்தது நாடு. இவ்வாறு நாடு பல உட்பிரிவுகளாக்கப்பட்டுக் கிராம சபைகளால் ஆளப்பட்டது. கிராம சபைகள் எல்லாவற்றுக்கும் தலைவனாக அரசன் இருந்தான்.

  அரசன் வாழும் பட்டணம் நகர் எனப்பட்டது அரசனின் வீட்டுக்குக் கோயில் என்பது பெயர். கோயிலைச்சுற்றி மதில் இருந்தது. அரண் என்பது மதிலுக்கு மற்றெரு பெயர். அரசனது வீட்டைச் சூழ்ந்து அரண் இருந்தமையின் அது அரண்மனை எனப்பட்டது. அரண்மனையைச் சூழ்ந்து அரச குடும்பத்தினரும் அவன் கருமகாரரும் வாழ்ந்தார்கள். இவர்கள் வாழும் வீதிகளைச் சூழ்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல வீதிகள் இருந்தன. அவ்வீதிகளில் ஆடை நெய்வோர், அணிகலன் செய்வோர் முதலிய பல தொழிலாளரும் வணிகரும் வாழ்ந்தனர். இவ்வீதிகள் எல்லாவற்றையும் சூழ்ந்து மதில் இருந்தது. அதனைச் சூழ்ந்து பெரிய அகழியிருந்தது. அது ஆழமும் அகலமும் நீர் நிறைவும் உடையது. அகழியைச் சூழ்ந்து மரங்கள் வளர்கப்பட்டிருந்தன.

* பாண்டியர் என்பதிலுள்ள இயர் என்பது ஐயர் என்பதன் திரிபு. முற்காலத்தில் கடவுளுக்கும் அரசனுக்கும் ஐயன் என்னம் பெயர் வழங்கிற்று. பண்டு ஐயன் பாண்டியனாயிற்று.  

No comments: