Monday, February 28, 2011

நமது நாடு 3.குமரி நாடு

3.குமரி நாடு
      குமரி நாட்டிலே குமரி,பஃறுளி, பேராறு முதலிய ஆறுகள் பாய்ந்தன. குமரிக்குன்று, மணிமலை முதலிய மலைகள் இருந்தன. தெங்கு நாடு, பனை நாடு, பெருவள நாடு முதலிய நாடுகள் விளங்கின. நாடு மிகச் செழிப்புற்றிருந்தது. மக்கள் தமிழ்மொழியை வழங்கினார்கள். அந்தநாட்டை ஒருகாலத்தில் செங்கோன் என்னும் அரசன் ஆண்டான். இவன் பல நாடுகளைத் தன்னடிப்படுத்திப் பேரரசனாய் விளங்கினான். இவன் தமிழில் மிகப் பற்றுடையவன். இவன், நாட்டில் விளங்கிய தமிழ்ப் பெரும் புலவர்களைத் தன் தலைநகருக்கு அழைத்தான், தமிழ்ப்பேரவை கூட்டினான், புலவர்களுக்கு ஊக்கம் அளித்தான். அவர்கள் அரிய தமிழ் நூல்கள் பல இயற்றினர். நாடெங்கும் தமிழ் மணம் கமழ்ந்தது.

  செங்கோன் மீது பாடிய பழைய நூல் ஒன்று உள்ளது. அதற்குச் செங்கோன் தரைச்செலவு என்பது பெயர். தரைச்செலவு என்பதற்குப் படை எடுத்துச் சென்று வெற்றி பெறுதல் என்று பொருள். அந்நூல் முழுவதும் இப்பொழுது கிடைக்கவில்லை, சில பாட்டுக்களே கிடைத்துள்ளன. குமரி நாடு ஒரு காலத்தில் நாகரிகத்தின் உச்சநிலை அடைந்திருந்தது. அப்பொழுது அந்நாட்டைச் சிறிது சிறிதாகக் கடல் விழுங்கிற்று. கடல் கோளுக்கு அஞ்சி மக்கள் வடக்குநோக்கி ஓடிச் சென்றனர், சென்றமக்கள் தென்னிந்தியாவில் தங்கி வாழ்ந்தனர்.

      கடல் கோளினால் தமிழரின் பழைய நாகரிகக் குறிகள் மறைந்தன. அவர்களின் நூல்களும் மாண்டன. கடல் கோளுக்குப் பிழைத்து வந்த மக்கள் தெற்கில் கன்னித் தெய்வத்தின் திருவுருவை நாட்டி வழிபட்டார்கள். அவ்வுருவம் வைக்கப்பட்ட இடம் கன்னியா குமரி என்னும் பெயர் பெற்ரது. இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் அத்திருவுருவம் அங்குக் காணப்பட்டது. அதனை இந்தியாவுக்குவந்து மீண்ட உரோமைப் பிரயாணிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

No comments: