Monday, April 4, 2011

எங்களுக்கும் எல்லைகள் உண்டு


   பறவைகளுக்கு இறக்கைகள் உள்ளன என்பது சரிதான். அவற்றிற்குப் பறக்க முடியும் என்பதும் சரிதான். ஆனால் எல்லாப் பறவைகளும் எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லையே அது ஏன்?
 ஒவ்வொரு பறவைக்கும் (ஒவ்வொரு உயிரினத்திற்கும்) இந்த உலகத்தில் அதற்கான குறிப்பிட்ட இடம் உண்டு. சில உயிரினங்கள் காட்டில் இருக்கும். சில வயல்களில் இருக்கும். சில சமவெளிகளில் இருக்கும். சில கடற்கரையில் இருக்கும். இவற்றிற்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு எல்லை உண்டு.

    ஏறத்தாழ 8600 - க்கும் அதிகமான சிறப்பினங்களைச் சேர்ந்த (species) பறவைகள்    உள்ளன. ஐந்து சென்டி மீட்டர் மட்டுமே நீளமுள்ள ஹம்மிங் பறவை முதல், இரண்டு மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள நெருப்புக் கோழி வரை இதில் உட்பட்டவை.   ஆர்ட்டிக் முதல் வெப்ப மண்டலப் பிரதேசம் வரை உலகத்தின் எல்லா இடத்திலும்       பறவைகளைக் காணலாம்.

   பெரும்பாலான பறவைகள் ஒரு இடத்தில் நிலையாக வாழ்கின்றன. பறவைகளில், தனியாக வாழ்பவை - கூட்டமாக வாழ்பவை எனும் பிரிவுகள் உண்டு. வலசைபோகும் பறவைகள், குளிர் காலத்தில் வெப்பப் பகுதிகளை நோக்கிக் கூட்டமாகப் பறந்து வருகின்றன. வெப்பப் பகுதிகளில் முட்டையிட்டு குஞ்சுகளை வளர்த்த பிறகு தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்கின்றன.

  ஒரு மரம் கொத்திப் பறவையைப் பாருங்கள். மரத்திலிருந்து புழு பூச்சிகளையும், எறும்புகளையும்  தன் பலம் வாய்ந்த அலகால் கொத்தியெடுத்துத் தன் உடலில் உரசிய   பிறகே அவற்றைத் தின்னும். தான் பிடித்த எறும்புகளை உடனே விழுங்காமல் ஏன் தன் உடலில் உரசுகிறது? எறும்புகளில் உள்ள அமிலத்தைப் பயன்படுத்தி தன் இறகுகளுக்கிடையில் இருக்கும் நுண் உயிரிகளை அழிப்பதற்குத்தான் அது இவ்வாறு செய்கிறது.

  நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள மரங்களில்தான் மீன்கொத்திப் பறவைகள் வாழும். அவை எப்படி இரை தேடுகின்றன எப்படிக் கூடமைக்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள புதர்க் காடுகளிலும், சிறு மரங்கள் உள்ள காடுகளிலும்தான் இவற்றைப் பார்க்க முடியும்.

    உயரத்தில் கூடமைக்க வேண்டியிருப்பதால் கழுகுகள், உயரமான மரங்கள் உள்ள காடுகளில்தான் வாழும். ஒரு வகைப்பட்ட பறவை வாழும் சுற்றுச் சூழலில், இன்னொரு வகைப்பட்ட பறவை வாழ முடியாது.
அணிலின் நகங்கள், மரக்கிளைகளைப் பற்றிப் பிடிப்பதற்கு ஏற்ற வகையிலும், மாங்காய், மற்ற விதைகள் போன்றவற்றைப் பிடித்துத் தின்பதற்கு ஏற்ற வகையிலும் அமைந்திருக்கின்றன. அணில் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்போது, அதன் வால்தான் அதைக் காற்றில் தாங்கிக்கொள்ளும். அதன் கூர்மையான முகமும் சிறிய கால்களும், தாவுவதற்கும் மரம் ஏறுவதற்கும் உதவுகின்றன.

  கீரி ஒரு சிறிய பாலூட்டி. இது எலி, பச்சோந்தி, பல்லி ஆகியவற்றை உண்ணும். காட்டுப் புதர்களிலும், விளை நிலங்களிலும் இதைப் பார்க்கலாம். இது நீண்ட உடலுடனும், ரோமம் நிறைந்த வாலுடனும், கூர்மையான முகத்துடனும், சிறிய கால்களுடனும் இருக்கும். மனிதர்களின் பார்வையில் படாத இடத்தில், அப்படி யாரும் பார்த்துவிட்டால் உடனே ஓடித் தப்புவதற்கு ஏற்ற இடத்தில்தான் கீரி வசிக்கும். அணிலும் கீரியும் தங்களின் வசிப்பிடத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? முடியாது! வசிக்கும் இடங்கள் மாற வேண்டும் என்றால், உணவுப் பழக்கமும் உடல் அமைப்பும் மாற வேண்டும்.

   மனிதர்கள் உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். மனிதர்கள் சந்திரனுக்குச் செல்கிறார்கள். அண்டார்ட்டிகாவில் ஆராய்ச்சி செய்கிறார்கள். கிராமத்தில்   வசிக்கும் ஒருவர் நகரத்திலோ, கடற்கரையிலோ, வெப்ப மண்டலக் காடுகளிலோ வாழலாம். ஆனால் ஒரு யானையால் சைபீரியாவிலோ, அண்டார்ட்டிகாவிலோ வாழ    முடியாது.  பனிக் கரடி வெப்ப மண்டலத்திற்கு வந்தால், அதன் அடர்ந்த ரோமம் நிறைந்த சருமம் வெப்ப மண்டலத்தில் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது அல்லவா? அதேபோல வெப்ப மண்டல விலங்கான யானை குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்கு, அதன் தோல் ஏற்றதாக இருக்காது. ஆனால் பலவகை விலங்குகள் அருகருகே வசிக்கிற ஒரு இடம் உண்டு. உலகத்தின் எல்லா இடத்திலிருந்தும் விலங்குகள் வருகிற இடம். அதுதான் மிருகக்காட்சி சாலை. ஒவ்வொரு விலங்கும் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை அங்கே உருவாக்குகிறார்கள்.

    பறவைகளும், மிருகங்களும் மிகவும் சுதந்திரமானவைதான். ஆனால் அவற்றிற்கும் எல்லைகள் உண்டு. பார்வைக்குப் புலனாகாத எல்லைகள் இவை.


இயற்கை அன்னை நமக்கு அளித்த அழகு காடுகள்...

No comments: