Friday, April 15, 2011

நமது நாடு 14. பார்ப்பனர்


     தமிழர் மிகப் பழைமை தொட்டே கோவில்களை அமைத்து அவைகளில் கடவுளின் அருட்குறிகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆதியில் கோவிற்குரு அரசனாக விருந்தான். பின்பு அரசனுக்கு அடுத்தபடியிலிருந்த மேன்மக்கள் குருமாராயினர். அக்குருமார் பல தகுதியினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். கோவிற் கருமங்களைப் பார்போர் பார்ப்பார் எனப்பட்டனர். பார்ப்பார் என்பதற்குக் கண்காணிப்பவர் என்பது பொருள். கடவுளுக்கு ஐயன் என்பதும் ஒரு பெயர். ஐயனைச் சேவிப்பவர்கள் ஐயர் எனப் பெயர் பெற்றனர். ஐயர், பார்ப்பார் என்போர் தமிழ்மக்களே.

  
    முற்காலங்களில் குருமார் செல்வாக்குடைய வர்களாயிருந்தனர். மக்கள் அவர்களிடத்தில் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் கடவுளுக்கு அண்மையில் உள்ளவர்கள் எனக் கருதப்பட்டனர். அரசனும் அவர்களுக்கு மிகுந்த வணக்கம் செய்தான். அரசனுக்கு அறிவு கூறுவோரில் பார்ப்பானும் ஒருவனாகவிருந்தான். பார்பானே பெரும்பாலும் அரசனது அமைச்சனாய் இருந்தான். இதனை மாணிக்கவாசகர் பாண்டியனுக்கு அமைச்சராகவிருந்தமை கொண்டு நன்கு அறிதல் ஆகும். அரசியல் அளுவல்களிலும் பார்ப்பார் இடம் பெற்றனர்.

    பிற்காலங்களில் வடநாட்டுப் பிராமணர் தெற்கே வந்தனர். பிராமணங்கள் என்னும் வடமொழி நூல்களைக் கற்றவர்கள் பிராமணராயினர் என முந் கூறப்பட்டது. அவர்களுட் சிலர் பார்ப்பன வகுப்பினரிடையே திருமணக் கலப்புடையராயினர். அவர்கள் தமது மதத்தைத் தென்னாட்டிலும் புகுத்துவாராயினர். பொது மக்கள் அவர்களின் கொள்கைகளுக்கு இணங்கவில்லை. அதனால் அவர்கள் அரசரைத் தம்வழிப் படுத்தினார்கள். அவர்களை வேள்விகள் செய்யும்படி தூண்டினார்கள். வேள்விகளுக்கு அவர்கள் ஆசிரியர்களாகவும் இருந்தனர். அக்காரணத்தினால் அரச வட்டாரங்களில் பிபாமணருக்கு மதிப்பு உண்டாயிற்று. பார்ப்பார் நாளடைவில் தம்மைப் பிராமணர் எனக் கூறுவாராயினர். அவர்களும் வடமொழியைக் கற்றுப் பிராமணங்களைப் பயின்றனர், தமக்கு இருக்கு முதலிய வேதங்கள் முதல் நூல்கள் எனவுங் கூறினர், சமக்கிருதம் தேவ மொழி என அரசரை நம்பச் செய்தனர். அரசர் ஆணையினால் ஆலயங்களில் சமக்கிருத மொழியில் புகழ்பாடும் வழக்கு ஏற்பட்டது. பார்ப்பனர் தம்மை ஆரியர் எனக் கருதத் தொடங்கினர், உண்மை அவ்வாறன்று. இப்பொழுது நாம் பார்ப்பாரை ஆரியர் எனக்கருதுகின்றோம். தமிழரில்  பலர் இஸ்லாம், கிறித்துவ மதங்களைத் தழுவியிருக்கின்றார்கள். இவர்களை நாம் அரபியர் அல்லது ஐரோப்பியர் எனக் கூறுகின்றேமா இல்லை. அவ்வாறே ஆரியமதத்தைத் தழுவிய தமிழராகிய பார்ப்பனரும் ஆரியராகமாட்டார். தமிழர் எனக் கூறுவதிலும் தம்மை ஆரியர் எனக் கூறுவதே பெருமை எனப் பார்ப்பன வகுப்பினர் கருதுகின்றனர். வரலாற்றில் ஆரியமக்களே எல்லா மக்களுக்கும் பின்னால் நாகரிகம் அடைந்தோராவர்.

  பார்ப்பனரிடையே வடநாட்டுப் பிராமணரின் கலப்பு உண்டு என்பது உண்ணையே. அவர்கள் நரம்புகளில் ஓடும் ஆரியக் குருதி ஒரு சிறிதளவேயாகும். இருவேறு நிறமுடைய சாதிகள் கலக்கும்போது இரு நிறங்களுக்கும் இடைப்பட்ட நிறமுடைய மக்கள் தோன்றுகின்றனர். அப்புதிய மக்களின் நிறம் ஏறியும் தாழ்ந்தும் காணப்படுமேல் அது இரு மக்களின் கலப்பின் அளவைக்காட்டுவதாகும். புதிதாக  இந்திய நாட்டை அடைந்த ஐரோப்பிய சாதியினருக்கும் இந்திய மக்களுக்கும் தோன்றிய மக்கள் யூரேசியர் எனப்படுகின்றனர். இவர்களில் கருமை முதல் வெண்கலம், வெண்மை வரையில் நிறமுடையவர்களைக் காணலாம். இது பார்பனர்களிடையில் நிறங்கள் பலவாயிருப்பதன் காரணத்தை அறிந்துகொள்வதற்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும்.

நமது நாடு தொடரும்...


வனவளம் காப்போம் வளமான வாழ்வு பெறுவோம்...

No comments: