Thursday, July 28, 2011

நமது நாடு 29.தமிழரின் வீரவாழ்க்கை

    வீரம் என்பது மக்கள் எல்லோராலும் கொண்டாடப்படும் சிறந்த மன உணர்ச்சி. ஒரு சிறந்த கொள்கையின் பொருட்டுத், தமது உயிருக்கு நேரும் கேட்டைப் பொருத்தாது எதிர்த்துப் போராடுதலே வீரம் என ஒருவாறு கூறலாம். உயிர் துறக்க ஒருக்கமாயிருத்தலின் வீரம் என்பதும் துறவுபோன்ற அரிய உணர்ச்சியாகும்.
    தமது நாட்டைப் பகைவரின்றும் காத்தற்பொருட்டு ஒருவராற் காட்டப்படும் வீரம் மிக உயர்வுடையதாகக் கொள்ளப்பட்டது. முற்காலத்தில் வீரத்தாற் சிறந்தவன் ஒருவனே அரசன் ஆனான். அவனே படையை நடத்திச் சென்றான். அரசனுக்கு அடுத்தபடியில் படைத் தலைவன் முதன்மையுடையவனா யிருந்தான். வீரர்களுக்குப் பட்டங்கள் அரசனால் வழங்கப்பட்டன. இனினும் அரசினால் பெருமக்களுக்கு அளிக்கப்படும் பட்டங்களிற் பல அவ்வீர பட்டங்களின் எதிர் ஒலிகளேயாகும்.
   முற்கால ஆடவர் தாம் வீரர் என்னும் பெயர் பெறுதல் வேண்டுமென விரும்பினார்கள். வீரனை மக்களும் அரசனும் மதித்தனர். பெண்கள் யாதேனும் ஒரு வீரச் செயலைக் காட்டுகின்ற ஒரு வீரனையே மணக்க விரும்பினார்கள். இன்று பெண்கள் கழுத்தில் அணியும் தாலியும் வீரத்தை உணர்த்துவதே. முற்காலப் பெண்கள் தம் கணவர் புலியைக்கொன்று வீரத்தின் அறிகுறியாகக் கொண்டுவந்த அதன் பற்களைக் கயிற்றிற் கோத்துக் கழுத்தில் மாலையாக அனிந்தார்கள். இன்றும் பொன்னினாற் செய்யப்பட்டுத் திருமணக் காலத்தில் அணியப்படும் தாலி அவ்வழக்கத்தின் எதிரொலியேயாகும். ஆரிய மக்களே தமிழ் நாட்டுக்கு இவ்வழக்கத்தைக் கொண்டுவந்து புகுத்தினார்கள் என வரலாறு அறியாத சிலர் கூறுவர். ஆரியர்களிடத்தில் தாலிகட்டும் சடங்குகளோ வழக்கங்களோ ஒரு போதும் இருக்கவில்லை.
   நாட்டின் பொருட்டு யாதேனும் ஒரு வீரச்செயலைக் காட்டி மடிந்து போகிறவனே வானுலகம் புகுகின்றான் என்று மக்கள் நம்பினார்கள். போரில் இறவாது நோய்வாய்ப்பட்டு இறந்த அரசை வாளாற் பிளந்து, பின்பு அடக்கஞ் செய்தல் முற்காலத்தில் மரபு என்பது தமிழ் இலக்கியங்களிற் காணப்படுகின்றது. அவ்வாறு செய்தல் அவர்கள் போரில் வாளால் வெட்டுண்டிறந்தார்கள் எனபதைக் குறிப்பதற்கேயாம். இதனால் போரிடத்து மடிதலை அக்காலமக்கள் எவ்வளவு உயர்வாகக் கருதினார்கள் என்பது நன்கு விளங்குகின்றது. போரிற் புறங் கொடுத்தாலும் முதுகிற்காயம் படுதலும் இழிவுடையன என்று கருதப்பட்டன. முதுகிற் புண்பட்ட அரசர் பலர் நாணத்தினால் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார்கள். முகத்திலும் மார்பிலும் பட்டு ஆறிய வாள், அம்புத் தழும்புகள் வீரபதக்கங்களிலும் (Medals)சிறந்த அணிகலன்களாக மதிக்கப்பட்டன. ஒவ்வொறு வீரனும் தனது நாட்டின்பொருட்டு உயிரைத் துரும்பென மதித்தான். போரிடத்தே வியக்கத் தகும் வீரச் செயலைக் காட்டி ஒருவன் இறந்தால் இறந்த இடத்தில் அவன் வீரச் செயல்களை எழுதிய கல் நடப்பட்டது.
   ஆடவர் மட்டுமல்லர், பெண்டிரும் வீரம் செறிந்து விளங்கினார்கள். தங்கணவரும் புதல்வரும் போர்க்களத்தே சென்று வீரச் செயல்களைக் காட்டுவதை அவர்கள் விரும்பினார்கள் வியக்கத் தகும் வீரச்செயலைக் காட்டி அவர்கள் போர்களத்தே மாண்டனராயின் அதுகுறித்து அவர்கள் கவன்று கண்ணீர் வடித்திலர், அவர் போரிற் புறங்கொடுத்தோடி வந்தாராயினும், முதுகிற் புண்பட்டாராயினும் பெரிதும் வருந்தினார்கள். பழைய தமிழரின் வீரத்தை நினைக்கும் போது எமது உள்ளம் சுழலுகின்றது. இன்று அவ்வீரம் எங்கு ஒளித்தது!

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

No comments: