Tuesday, June 2, 2009

ஈழத்தின் தீயூழ்!

மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக்கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக் கொண்டு, இனம் புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது! 'ஈழம் எங்கள் தாகம்' என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய் நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதுதாண்டு காலம் சிம்மசொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டுவிட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன! ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள்: ''அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன்பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போர்க் களங்களில் தென்படுவான்! அங்கே போய்ப் பாருங்கள்!'' ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு மகனை ஈழத் தாய் ஒருத்தி அந்த மன்னின் விடுதலைக்காகச் சுமந்தாள்! இலங்கை மக்கள் ஒரேநாட்டின் மக்கள் என்று முழங்குகிறாரே ராஜபட்ச! சிங்கள ராணுவக் குண்டு வீச்சுக்கு அஞ்சி ஈழ மக்கள் ஊர்களைக் காலி செய்து கொண்டு போன பிறகு, அந்தப் பகுதியிலே கூட அன்று அந்தத் தமிழர்களின் வீடுகளிலேயே சிங்களவர்களைக் கொண்டு வந்து ராணுவப்பாதுகாப்போடு குடியேற்றுகிறாரே ஏன்? வஞ்சகம்தானே! தமிழினத்தை முற்றாக அழித்து, அந்தப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளாக்கும் அவருடைய வஞ்சகச் செயலை அறிந்தும், மன்மோகன்சிங் - கருணாநிதி கூட்டணி அரசு அவருக்கு வகைதொகை இல்லாமல் போர்க் கருவிகளை வழங்கியதே! போரால் அவருடைய கருவூலம் வறண்டு விட்டது என்று வகை தொகை இல்லாமல் கடன் கொடுத்து உதவியதே! வாலி வலிமையானவன்; நேரியவன்; பெருந்தன்மையானவன்; ஆனால் தன்னால் வாலில் கட்டி அடிக்கப்பட்ட ராவணன் தன்னுடைய நட்புக்காக இறைஞ்சுகிறான் என்று இரங்கி, தீயவனோடு நட்புப் பூண்டான். ராவணனின் நட்பால் வாலிக்கு எந்தப்பயனுமில்லை. ஆனால், சிற்றினச் சேர்க்கை காரணமாக ராமனின் அம்புக்கு இரையாக நேரிடவில்லையா? ராவணவதம் நிகழ்வதற்க்கு வாலி வதம் நிகழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லையா வலிமையான நாடு இந்தியா! பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று மாபாதகம் புரிகின்ற ராஜபட்சவுடன் சேராத கூட்டு ஏன் சேர வேண்டும்? அந்த நீச ஆட்சிக்கு ஆயுதங்கள் ஏன் வழங்க வேண்டும்? இந்த நீச நட்பால் இந்தியா மானக்கேடடைந்தைத் தவிர பெற்ற பயன் என்ன நடந்து முடிந்த தமிழினப் பேரழிவு குறித்துச் சிங்களக் காடையர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தமிழினத்தைச் சின்னா பின்னாப்படுத்தி விட்டதாகக் குதூகலிக்குறார் ராஜபட்ச! மண்டியிட்டு மண்ணை மித்தமிடுகிறார்! அந்தக்குறியீட்டின் மூலம் அவர் சிங்கள இனத்திற்க்குச் சொல்லும் செய்தி இந்த மண்ணை உங்களுக்கு மட்டுமே உரித்தாக்கிவிட்டேன் என்பதுதானே! சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது ஒருபான்மைதான் உண்டு என்று வெற்றிக்குப்பிந்தைய பாராளுமன்றத்தில் விளம்பி இருக்கிறார் ராஜபட்ச! அதனுடைய பொருள் இதுவரை இருந்து வந்த, இடையில் கேள்விக்குள்ளான, ஒற்றையாட்சி முறையை மீண்டும் உறுதிப்படுத்தி விட்டேன் என்பதுதானே! ஈழப்பிரிவினைக்குக் கூட பாரளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, முடித்தால் நிறைவேற்றிக்கொள் என்பது ராஜபட்சவின் அறை கூவல்! அப்படி முடியாதென்றால் ''ஜனநாயகத்தில் நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று சமதானமாகப் போய்விட வேண்டும் என்பது ராஜபட்சவின் அறிவுரை! அதை விட்டுவிட்டு உரிமை பற்றி போராடினால் சிங்கள ராணுவம் சுட்டுப்பொசுக்கும்; அதற்க்குச் சுடத் தெரியவில்லை என்றால் இந்தியாவைத் துணைக்கழைத்துக் கொள்ளும் என்பது ராஜபட்சவின் எச்சரிக்கை. இலங்கையை ஆண்ட அத்தனை சிங்கள அதிபர்களும் தங்கள் தங்கள் பங்குக்குத் தமிழின அழிப்பு வேலையை மேற்கொண்டவர்கள்தான்! ஆனால் கடைசியாக ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் அந்தப்பகுதி சிக்கிக் கொண்டதுதான் பேரவலம்! இந்தியா அந்தக் கசாப்புக் கடைக்காரருக்கு வெட்டுக்கத்தி கொடுத்து உதவியது அதை விடக் கொடுமை! அந்த வெட்டுக்கத்தியைக் கொடுக்கவிடாமல் தடுத்து, ஆடுகளைக் காக்கும் அதிகார பீடத்தில் கருணாநிதியைத் தமிழ் மக்கள் கீழேயும் மேலேயும் ஏற்றி வைத்திருந்தும், இருவரும் சேர்ந்து கொண்டு ஐயோ! ஆடுகள் வெட்டப்படுகின்றனவே! என்று நீலிக் கண்ணீர் வடித்துக் குரலெடுத்து ஒப்பாரி வைத்து, வஞ்சகத்திலெல்லாம் வஞ்சகம்! ஈழத்தமினத்திற்க்கு எதிராக நினைக்கவே நெஞ்சு நடுங்குங்கும் கொடுஞ்செயல்கள் ஜெயவர்த்தன காலத்திலேயே தெடங்கி விட்டன! ஆனால் அவருடைய கழுத்தை அப்போதைக்கப்போது பிடித்துக் கட்டுக்குள் வைக்க இந்திரா காந்தி போன்ற வீராங்கனைகளும், எ.ம்.ஜி.ஆர். போன்ற பொன்மனச் செம்மல்களும் ஆட்சிகளில் இருந்தார்கள்! ஈழப் போரளிகளை ரானுவரீதியாக வளர்த்தவர்கல் அவர்கல்தான்! முதல் மூன்று ஈழப் போர்களிலும் மூன்றில் இருபகுதிச் சிங்களவர்கள் மூன்றில் ஒருபகுதித் தமிழர்களிடம் மண்ணைக் கவ்வியதன் விளைவாக தமிழீழம் அறிவிக்கப்படாத விடுதலை பெற்ற நாடாகச் செயல்பட்டது! ஈழத்தில் போராளிகளிடம் தரைப்படை இருந்தது; சிறு கப்பல்களும், விமானங்களும் இருந்தன. ஈழத்தின் 16,000 சதுர கிலோ மீட்டர் பரப்புப் போராளிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அவர்களின் நாடு ஐக்கியநாடுகள் அவையில் உறுப்பினராக இல்லையே தவிர மற்ற எல்லாம் நடந்தேறின.இதற்கிடையே ரணில்விக்கிரமசிங்க வரவேண்டிய இடத்திற்க்கு ராஜபட்ச வருவதுக்குத் தங்களை அறியாமலேயே ஈழப் போராளிகள் உதவி விட்டார்கள்! எத்தனையோ பிழைகள் செய்திருக்கிறார்கள்! யானை படுத்தாலும் குதிரை மட்ட்ம் என்பது போலத்தான் அது! இவர்களின் இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவையும், இத்தனை லட்சம் தமிழர்கள் அழிவதற்க்குச் சிங்களவர்களுக்கு உளவு சொல்லி, ஈழப்பிழைப்புக்கு பதிலாக ஈனப் பிழைப்பு பிழைத்த கருணாவையும் நினைத்துப் பாருங்கள்! மலத்தை மிதித்துவிட்டது போன்ற அருவருப்பு ஏற்படவில்லையா? ரணிலுக்கு பதிலாக ராஜபட்ச வந்து தமிழின அழிவிற்க்கு முதற்காரணம். சோனியாவின் 'ரப்பர் முத்திரை' என்று புகழ்கொண்ட மன்மோகன்சிங் பிரதமரான காலமும், சொல் வேறாகவும், செயல் வேறாகவும் வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான காலமும் ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தி அமைந்துவிட்டதை ஈழத்தின் தீ யூழ் எந்றுதான் வள்ளுவமொழியில் சொல்ல வேண்டும்! இவ்வளவு கொடுமைகளுக்கும் ஈழம் கசாப்புகடை ஆனதற்க்கும் ராஜபட்ச முதற்காரணம்! ஆயுதம் வழங்கிய மன்மோகன்சிங் துணைக்காரனம்! மன்மோகன்சிங்கை முடக்குகின்ற அதிகாரம் முற்றாகவாய்த்திருந்தும், அந்த அதிகாரத்தை உரியவழியில் பயன்படுத்தி இந்தியாவின் அயல்விவகாரக் கொள்கையையே மாற்றுவதை விடுத்து, நாளைக்கொரு மனிதச்சங்கிலி, ஒருவேளை தொடங்கி மறுவேலை வரும்வரை உண்ணா நோன்பு என்று பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த கருணாநிதி இன்னெரு துணைக்காரணம்! ராஜபட்ச என்னும் முதற் காரணமும் மன்மோகன்சிங், கருணாநிதி என்னும் துணைக் காரணங்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பிணமாவதற்க்கும் நான்காம் விடுதலைப் போர் முடிவுக்கு வரவும் காரணங்களாயின! நான்காம் விடுதலைப் போர் முடிவுற்று விட்டது. அதனுடைய பொருள் ஐந்தாம் விடுதலைப் போர் அடுத்து தொடங்கும் என்பதே! நான்கோடு எண்ணிக்கை முடிந்து விட்டதாக ராஜபட்சவோ, மன்மோகன்சிங்கோ, கருணாநிதியோ, கருணாவோ கருத மாட்டார்கள். நான்கின் வளர்ச்சி ஐந்து என்பதை அவர்கள் அறியாதவர்களில்லை! எந்த விடுதலைப் போராட்டமும் இலக்கை அடையாமல் முற்றுப் பெற்றதாக வரலாறு கிடையாது. ஒருவேளை அந்த ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்! ஈழத்தின் தேவைக்கு ஏற்பக் காலத்தால் வடிவமைக்கப்பட்டவன்தானே பிரபாகரன்! ஈழம்தான் அற்றுப்போய்விட்டதா? உலகின் மூத்த இனம், சிந்து சமவெளி நாகரிகம்கண்ட இனம், தெய்வப்புலமைத் திருவள்ளுவனைப் பெற்ற இனம் நாதியற்றுப்போக இயற்க்கை அனுமதிக்காது! ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்!

நன்றி தினமணி...

தினமணியில் வெளியான பழ.கருப்பையா அவர்களின் கட்டுரை
சோ.ஞானசேகர்

No comments: