Wednesday, June 17, 2015

ஒரே ஆண்டில் 176 புதிய விலங்குகள் கண்டுபிடிப்பு!


 இந்திய வன விலங்குகள் பற்றிய விரிவான பதிவுகளை வைத்திருக்க வேண்டிய பொறுப்பு, இந்திய உயிரியல் சர்வே பிரிவிடம் தான் உள்ளது. இது மத்திய சுற்றுச்சூழல், வனவுயிர் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்த அலுவலகத்தின் அறிக்கைப்படி, கடந்த ஓர் ஆண்டு காலத்தில், இந்தியா முழுவதிலும் களப்பணியில் இருக்கும், இசட்.எஸ்.ஐ.,யின் விலங்கியல் வல்லுனர்கள், புதிதாக, 176 விலங்கினங்களை கண்டுபிடித்து, விவரித்து பதிவு செய்துள்ளனர்.
 இந்த கண்டுபிடிப்புகளில், பூச்சியினங்களுக்கே முதலிடம். அடர்ந்த காடுகளில், யார் கண்ணிலும் படாமலேயே தப்பி விடும் பூச்சிகளில், 93 புது வகைகள், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 இந்த பட்டியலில், 23 வகை புதிய மீன்கள்; நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய தவளை போன்றவற்றில், 24 புது இனங்கள்; 12 வகை புதிய சிலந்திகள்; நண்டு, இறால் போன்ற வற்றில், 12 புது வகைகள் கண்டறியப்பட்டு உள்ளன.
 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள விலங்கினங்களை, மிக குறுகிய புவிப்பரப்பில் தான் காண முடிகிறது. எனவே அவை ஏற்கனவே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவது தான் இதற்கு முக்கிய காரணம்' என்கிறார் இசட்.எஸ்.ஐ.,யின் இயக்குனரான டாக்டர் கே.வெங்கட்ரமணன்.
 பெரும்பாலான புதிய கண்டுபிடிப்புகள் வாழ்வது, பல்லுயிர்தன்மை செறிந்த கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த வனப் பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தான். இந்தியாவில் கிழக்கு இமாலயம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள், பல்லுயிரி மண்டலங்களாக, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓர் ஆண்டில் இந்திய உயிரியல் வல்லுனர்கள், 176 புதிய விலங்குகளை கண்டுபிடித்து இருக்கின்றனர். 'இவை வனவுயிர் அறிவியலுக்கு புதியவை' என, கோல்கட்டாவிலுள்ள இந்திய உயிரியல் சர்வேயான, இசட்.எஸ்.ஐ., கூறுகிறது.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

No comments: