Thursday, July 30, 2015

நெருப்புக் கோழி

 அசுரப்பறவை என்று இங்கே குறிப்பிடுவது தீப்பறவையைத்தான்! ஆம்! நெருப்புக் கோழி! இது பறவை இனங்களில் மிகப்பெரியது! விசித்திர இயல்புகள் நிறைந்தது! முழு உருவமுடைய ஆண் பறவை ஏறக்குறைய 2.5மீட்டர் உயரமும் 135 அல்லது 180 கிலோ எடையும் கொண்டிருக்கும்.

 இப்பறவை மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது! ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன! இதன் பெரிய முட்டையொன்று 1.4 கிலோ முதல் 1.8 கிலோ எடையைக் கொண்டிருக்கும்! இப்பறவை உணவுக்கு பயன்படுவதோடு இதன் சிறகுகளிலிருந்து கிடைக்கும் இறக்கைகள் அலங்கரிப்புக்கும் உதவுகின்றன! ஆப்பிரிக்க ஆதிவாசிகள் இவ்விறக்கைகளை உடையாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். காலம் செல்லச் செல்ல நாகரிக நாடுகளிலும் இவ்விறக்கைகள் அழகு அணியாகப் பயன்படுத்தப்படலாயின.

 ஆண் பறவையின் உடலில் கருப்பு நிறமுடைய இறக்கைகள் காணப்படும். இப்பறவையின் சிறகுகள் வெண்மை நிறம் கொண்டவையாகவும் இதன் வால் இறக்கைகள் நிரம்பியதாகவும் இருக்கும். பெண் பறவையின் இறக்கைகள் மங்கலாகவும் சாம்பல் தவிட்டு நிறங்களில் கவர்ச்சியின்றியும் காணப்படும்.

 தீப்பறவைகளில் பலவகை உள்ளன. அதில் ஒரு வகை வடஆப்பிரிக்கா, சிரியா, மெசபடோமியா ஆகிய இடங்களிலும் மற்றொரு வகை சோமாலிலாந்திலும் காணப்படுகின்றன. ஆனால் இவற்றிலெல்லாம் சிறந்த இனம் தென் ஆப்பிரிக்காவில் உள்ளதுதான். அதிலும் "கலஹரி' பாலைவனத்தில் காணப்படுவதே மிகச் சிறப்புடையதாகும்.

 பாலைவனப்புதர்களில் இவை மறைந்திருக்கும். புதர்களின் உள்ளிருந்தவாறே இவை தம் எதிரிகளைக் கவனித்துக்கொள்ளும். இதற்கேற்றவாறு இதன் நீண்ட கழுத்தும் சிறு தட்டையான தலையும் அமைந்துள்ளன. புதரினுள்ளிருந்து இது தலையை உயர்த்திப் பார்க்கும்போது இதைக் கண்டு கொள்ள இயலாது.

 இந்த அசுரப் பறவைகளால் பறக்க இயலாது. ஆனால் விரைவாக ஓடும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இதன் விரிந்த சிறகுகள் இதன் ஓட்டத்திற்குத் துணையாக உதவுகின்றன. விமானத்தின் சிறகுகள்போல் இதன் சிறகுகள் ஓரளவு வேகமாகச் செல்லும் ஆற்றலை இதற்கு அளிக்கின்றன. குதிரைபோல் வேகமாகச் செல்லும் இது மணியொன்றுக்கு 42 கி.மீ. ஓட்டம் தொலைவைக் கடக்கும் ஆற்றல் உடையது. இதன் ஓட்டம் வளைவு கொண்டதாக இருப்பதால் எளிதில் இது வேட்டையாடுவோர் கையில் அகப்பட்டுக்கொள்கிறது.

 நீண்ட நாட்கள் இவை நீரின்றி வாழும் இயல்பு பெற்றவை! இப்பறவைகள் எல்லா வகையான உணவையும் உட்கொள்ளும்! சிறு பிராணிகள், புற்கள், இலைகள், பழங்கள், கொட்டைகள் போன்றவை இவற்றின் உணவாகும்.

 ஆண் பறவைகள் அடிக்கடி சிங்கத்தைப் போன்று கர்ஜனை செய்யும்!

 பெண் பறவைகள் அனைத்தும் ஒரே கூட்டில் முட்டையிடும்! ஆண்பறவை இவற்றை அடைகாக்கும்! திருட வரும் நரிகள், கழுதைப்புலிகள் மற்றும் ஏனைய மிருகங்களிடமிருந்தும் ஆண் பறவை மணிக்கணக்காக முட்டைகளைப் பாதுகாக்கிறது! பிறகு ஷிப்ட் முறையில் பெண் பொறுப்பேற்றுக் கொள்கிறது! இரைதேடுவதற்கு வெளியில் செல்லும்போது முட்டைகளை மணலில் புதைத்து வைத்துவிட்டுச் செல்கின்றன!

 சூரியனின் வெப்பத்தால் இவை கெட்டுப் போகாமலும் பாதுகாத்துக் கொள்கின்றன.

 ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இப்பறவைகளின் இறக்கைகள் நாகரிகச் சின்னங்கள் ஆன பிறகு இப்பறவைகளை வளர்க்கப் பண்ணைகள் பல தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளன.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

No comments: